· பிரசங்கங்களில் சட்டத்துக்கு முரணான விடயங்கள்
உள்வாங்கப்படக்கூடாது.
· ஜும்ஆவின் போது 5 பள்ளிவாசல்கள் இருந்தால் ஒரு பள்ளிவாசலிலேயே ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட வேண்டும். சப்தம் வரையறுக்கப்பட வேண்டும்.
· பள்ளிவாசல் நிர்வாக சபைத் தெரிவின்போது தஃவா அமைப்புகள் அனைத்தினதும் பிரதிநிதிகள் உள்வாங்கப்பட வேண்டும்.
நாட்டிலுள்ள பள்ளிவாசல்கள் மற்றும் அரபு மத்ரஸாக்களை தேசிய வேலைத்திட்டம் ஒன்றின் கீழ் ஒழுங்குபடுத்துவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் தலைமையில் நேற்று அமைச்சில் இடம்பெற்ற முஸ்லிம் சிவில் சமூக பிரதிநிதிகளுடனான கலந்துரையாடலின் போதே இவ்வாறு தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இக்கலந்துரையாடலில் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா, தேசிய சூறா சபை, ஸ்ரீலங்கா முஸ்லிம் கவுன்ஸில் வக்பு சபை, வை.எம்.எம்.ஏ, கண்டி புத்திஜீவிகள் ஒன்றியம் என்பனவற்றின் பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.
இதன்போது ஜும்ஆ பிரசங்கங்களில் அரசாங்க சட்டத்துக்கு முரணான விடயங்கள் உள்வாங்கப்படக்கூடாது.
ஒரு பகுதியில் 5 ஜும்ஆ பள்ளிவாசல்கள் இருந்தால் ஜும்ஆவின்போது ஒரு பள்ளிவாசலிலே ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட வேண்டும்.
அத்தோடு அதன் சப்தம் சட்டதிட்டங்களுக்கு உட்பட்டதாக அமையவேண்டும்.
பள்ளிவாசல் நிர்வாகசபைத் தெரிவின்போது அப்பிரதேசங்களைச் சேர்ந்த தஃவா அமைப்புகள் அனைத்தினதும் பிரதிநிதிகள் உள்வாங்கப்படவேண்டும் எனும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
கலந்துரையாடலின் போது குத்பா பிரசங்கங்களின் தலைப்பு, பிரசங்க நேர எல்லை என்பன தொடர்பில் பள்ளிவாசல் நிர்வாகங்கள் கவனம் செலுத்த வேண்டுமெனவும் தீர்மானிக்கப்பட்டது.
மத்ரஸா பதிவுகளை ஒரு பொறிமுறையின் கீழ் கொண்டுவருவதற்கு தீர்மானிக்கப்பட்டது.
முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தில் மாத்திரமின்றி வக்பு சட்டத்தின் கீழ் பதிவுசெய்யப்பட வேண்டும் எனவும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது. இவ்வாறான பதிவுகள் மூலம் மத்ரஸாக்களின் தரத்தினை மேலும் உயர்த்த முடியும் என்பதை கலந்துரையாடலில் கலந்து கொண்ட அனைவரும் ஏற்றுக்கொண்டனர்.
முஸ்லிம்களின் சமகால பிரச்சினைகள் மத்ரஸாக்கள் ஊடாக தீர்க்கப்படும் வகையில் அவை மீள் கட்டமைக்கப்படவேண்டும். மத்ரஸாக்கள் வகை 1, 2, 3 என தரப்படுத்தப்பட வேண்டும் என்றும் ஆலோசனை முன்வைக்கப்பட்டது.
அஞ்சல், அஞ்சல் சேவைகள் மற்றும் முஸ்லிம் சமய விவகார அமைச்சர் எம்.எச்.ஏ.ஹலீம் கலந்துரையாடலின் போது கருத்து தெரிவிக்கையில்;
மத்ரஸாக்களில் மார்க்கக்கல்வியுடன் பாடசாலைக் கல்வியும் வழங்கப்பட வேண்டும். அனைத்து மத்ரஸாக்களிலும் பொதுவான பாடத்திட்டம் அமுல்படுத்தப்படுவதுடன் பொதுவான பரீட்சையே நடத்தப்பட வேண்டும். இதன் மூலமே மத்ரஸாக்களின் கல்வித் தரத்தை மேம்படுத்த முடியும்.
மத்ரஸா மாணவர்களுக்கு வெளிநாட்டு புலமைப்பரிசில்களைப் பெற்றுக்கொடுப்பதற்கு அமைச்சு நடவடிக்கைகளை முன்னெடுத்துள்ளது. துருக்கி மற்றும் எகிப்து ஆகிய நாடுகள் தற்போது எமக்கு புலமைப்பரிசில்களை வழங்கி வருகின்றன என்றார்.
பள்ளி, மத்ரஸாக்களை ஒழுங்குபடுத்த திட்டம்
Reviewed by Madawala News
on
March 15, 2019
Rating: