பாகிஸ்தான் பெண் ஆயிஷா ரஷானுக்கு சென்னை மருத்துவமனையில் இந்திய நபரின் இதயம் பொருத்தப்பட்ட நெகிழ்ச்சி சம்பவம் பதிவு.
இதயம் செயலிழந்த பாகிஸ்தான் பெண்ணுக்கு இந்தியரின் இதயம் பொருத்தபட்டுள்ள சம்பவம் நெகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதற்கான அறுவை சிகிச்சை சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் நடைபெற்றுள்ளது.
பாகிஸ்தானை சேர்ந்த 19 வயது பெண் ஆயிஷா ரஷான். இவர் இதய நோயால் பாதிக்கப்பட்டு, இதய செயலிழப்பு ஏற்பட்டு சிகிச்சைக்காகக் கடந்த 2014ல் பாகிஸ்தானிலிருந்து இந்தியாவிற்கு ஆயிஷாவும், அவரின் குடும்பத்தினரும் வந்துள்ளனர். சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஆயிஷாவை பரிசோதித்த மருத்துவர்கள், இதய செயலிழப்பை சரி செய்யப் பொருத்தப்பட்டுள்ள இதய பம்ப் வால்வு ஒன்றில் கசிவு ஏற்பட்டுள்ளதால் கட்டாயம் இதய மாற்று அறுவை சிகிச்சை செய்ய வேண்டும் என்றும், இதற்குச் சுமார் 35 லட்சம் ரூபாய் செலவாகும் எனவும் கூறியுள்ளனர்.
இவ்வளவு பணத்திற்கு என்ன செய்வது எனத் தெரியாமல் விழித்துக்கொண்டிருந்த ஆயிஷாவின் குடும்பத்திற்கு ஐஸ்வர்யம் அறக்கட்டளை மூலமாக மருத்துவக்குழுெஉதவி பெற்றுக்கொடுத்துள்ளது. அதுமட்டுமல்லாமல், ஆயிஷாவிற்கு டில்லியில் மூளைச்சாவு அடைந்த ஒருவரிடமிருந்து பெறப்பட்ட இதயமும் வரவழைக்கப்பட்டது. தேவையான பணமும், இதயமும் கிடைத்ததை அடுத்து, ஆயிஷாவிற்கு சென்னை தனியார் மருத்துவமனையில் இதய மாற்று அறுவை சிகிச்சை வெற்றிகரமாக நடத்தப்பட்டது.
இது தொடர்பாக ஆயிஷாவின் தாய் சனோபர் கூறுகையில், ”வெளிப்படையாகச் சொல்ல வேண்டும் என்றால், இந்தியாவுடன் ஒப்பிடுகையில், பாகிஸ்தானில் நல்ல மருத்துவ வசதிகள் இல்லை. பாக். கில் மாற்று அறுவை சிகிச்சைக்கான வசதிகள் இல்லையென மருத்துவர்கள் தெரிவித்தனர். இந்தியாவில் நாங்கள் நட்பாக உணர்கிறோம். இந்திய அரசு மற்றும் இந்திய மருத்துவர்களுக்கு நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம்” என்றார்.