ஹஸ்பர் ஏ ஹலீம்_
திருகோணமலை கிண்ணியா குறிஞ்சாக்கேணி பாலத்தில் படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளான
சம்பவம் தொடர்பில் உடனடியாக விசாரணைகளை மேற்கொள்ளுமாறு கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத் நேற்று (23) காலை மாகாண உள்ளூராட்சி ஆணையாளர் என்.மணிவண்ணனுக்கு உத்தரவிட்டுள்ளார்.இந்த சம்பவம் குறித்து உடனடி விசாரணை நடத்தி, படகை இயக்க அனுமதி வழங்கியது யார், பராமரிப்பை மேற்கொண்டது உள்ளிட்ட விவகாரங்களை உடனடியாக தெரிவிக்க வேண்டும் என்றும் ஆளுனர் வலியுறுத்தினார். இந்த விசாரணைகளை மேற்கொள்வதற்காக மாகாண நெடுஞ்சாலைகள் அமைச்சின் செயலாளர் ஐ.கே.ஜி.முத்துபண்டா தலைமையில் விசேட குழுவொன்று நியமிக்கப்பட்டுள்ளது.
மேலும், போலீசார் விசாரணை நடத்த திருகோணமலை மாவட்ட பொறுப்பான DIG க்கும் ஆளுநர் உத்தரவிட்டார்.
இந்த சம்பவத்தில் மாணவர்கள் உட்பட 6 பேர் பலியாகினர் மற்றும் சுமார் 20 பேர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்த துரதிர்ஷ்டவசமான சம்பவத்தில் உயிரிழந்தவர்களின் உறவினர்களுக்கு ஆளுநர் தனது ஆழ்ந்த இரங்கலையும் தெரிவித்துள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணை நடத்துவதற்காக விசேட அதிகாரிகள் குழுவொன்று சம்பவம் இடம்பெற்ற போது அப்பகுதிக்கு அனுப்பி வைக்கப்பட்டதாக அவர் மேலும் தெரிவித்தார்.
இந்த சந்தர்ப்பத்தில் பிரதேச மக்கள் அமைதியாக இருக்குமாறும் ஆளுநர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.