நாட்டிலிருந்து தமிழ் பயங்கரவாதமும், இஸ்லாமிய தீவிரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்தை பாராட்டுகிறோம்.
நாட்டிலிருந்து தமிழ் பயங்கரவாதமும், இஸ்லாமிய தீவிரவாதமும்
ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் கருத்தை உலமா கட்சி பாராட்டுவதுடன் இவ்விரு வாதத்துக்கும் காரணமான பௌத்த தீவிரவாதத்தையும் நாட்டிலிருந்து ஒழிக்க ஜனாதிபதி அவர்கள் ஈடுபாட்டுடன் செயல்பட முன்வருவார் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக உலமா கட்சித்தலைவர் முபாறக் அப்துல் மஜீத் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது,
இன்று பலரும் இஸ்லாமிய பயங்கரவாதம் என்ற சொல்லை பயன்படுத்தும் நிலையில் கௌரவ ஜனாதிபதி அவர்கள் அச்சொல்லை பாவிக்காமல் இஸ்லாமிய தீவிரவாதம் ஜனாதிபதி அவர்களின் சரியான புரிதலை காட்டுகிறது.
எமது இந்த நாட்டுக்கு பாரிய ஆபத்து என்பது இஸ்லாமிய தீவிரவாதத்தை விட தமிழ் பயங்கரவாதமும், பௌத்த தீவிரவாதமும்தான். இம்மூன்றுமே ஒழித்துக்கட்டப்பட வேண்டும்.
தமிழ் பயங்கரவாதம் என்பது நிலையானதொரு கொள்கையுடன் திட்டமிட்டு செயல்படுகிறது.
பௌத்த தீவிரவாதம் என்பது இந்த நாட்டின் தமிழ், முஸ்லிம்களை ஒடுக்கி, அவர்களின் பிரதேசங்களை கைப்பற்ற வேண்டும் என்று திட்டமிட்டு தீவிரவாதமாக செயற்படுகிறது.
இஸ்லாமிய தீவிரவாதம் என்பது எந்தவொரு திட்டமும் இல்லாமல் சோடாப்போத்தல் போல் திடீர் உணர்ச்சியை மட்டும் காட்டி வருகிறது.
இஸ்லாமிய தீவிரவாதத்தை ஒழிப்பது மிக இலகு. முஸ்லிம்களை ஆத்திரப்படுத்தாமல், தினமும் புரியாணியும் , பிரைட் ரைசும், பள்ளிவாயலில் தொழுவதுமாய் நிம்மதியாய் அவர்களை ஊர் சுற்றிவர விட்டு விட்டால் போதும். இஸ்லாமிய தீவிரவாதம் தானாய் ஒழிந்து போகும்.
இந்த நாட்டு முஸ்லிம்களை பொறுத்தவரை சோறும், ஊருக்கு காட்டும் வகையில் பள்ளிவாயல்கள், வீடுகள் கட்டுவதும், உல்லாசமாக ஊர் சுற்றுவது மட்டுமே சொர்க்கம் என நினைத்து வாழ்பவர்கள். அவர்களை அப்படியே விட்டு விட்டால் இஸ்லாமிய தீவிரவாதம் என்ற ஒன்று ஒரு போதும் நம்நாட்டில் மீண்டும் உருவாகாது.
30 வருட தமிழ் பயங்கரவாதம் இருந்தனால்த்தான் அதிலிருந்து பாதுகாப்பு பெற முஸ்லிம் இளைஞர்கள் அரச ஊர்காவல் படையில் சேர்ந்து ஆயுதம் தூக்கினர்.
2008ம் ஆண்டு ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ தலைமையில் அவரது அர்ப்பணிப்புடன் கிழக்கு மாகாணம் தமிழ் பயங்கரவாதத்திலிருந்து விடுதலை பெற்ற போது முஸ்லிம் சமூகமும் ஆயுதத்தை முற்றாக கைவிட்டது.
பின்னர் பிரபாகரன் ஒழிக்கப்பட்ட பின் பௌத்த தீவிரவாதத்துக்கு புதிய எதிரி தேவைப்பட்டது. அந்த புதிய எதிரியாக முஸ்லிம்களை காட்டினர்.
அத்துடன் வெளிநாட்டில் இயங்கி வந்த தமிழ் பயங்கரவாதத்துக்கு முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் பிரிக்க வேண்டும் என்ற தேவையும் இருந்தது.
முஸ்லிம்களை சிங்களவர்களிடமிருந்து பிரித்தால் மட்டுமே வடக்கு கிழக்கை இணைத்து இணைந்த சுயாட்சியை அமைக்க முஸ்லிம்கள் உடன்படுவர் என்ற தேவை இருந்தது. இதனால் சில பௌத்த தேரர்கள் விலைக்கு வாங்கப்பட்டு முஸ்லிம்களுக்கெதிரான தீவிரவாத நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டன.
யுத்தம் முடிந்த பின் குறட்டை விட்டு தூங்கிக்கொண்டிருந்த முஸ்லிம் சமூகத்தை இந்த வகை தீவிரவாதம் உலுக்கி விட்டது. 2012 முதல் பௌத்த தீவிரவாதம் முஸ்லிம்களை இம்சித்தது. அது தம்புள்ள, அளுத்கம என எதிரொலித்தது.
இத்தகைய முஸ்லிம்களுக்கெதிரான பௌத்த தீவிரவாதத்தை ஒழிக்க வேண்டுமாயின் மஹிந்த ராஜபக்ஷவை தோற்கடித்தால் முடியும் என்ற தமிழ் பயங்கரவாதத்தின் செய்திகளை முஸ்லிம் சமூகம் ஏற்றுக்கொள்ள தொடங்கியது.
இறுதியில் ரணில் விக்ரமசிங்கவினால் கொண்டு வரப்பட்ட மைத்திரியை தமது மீட்பாளர் என முஸ்லிம் சமூகம் நம்பியது. ஆனால் பௌத்த தீவிரவாதிகளுக்கு அனுசரணை வழங்கியதே இந்த ரணில்தான் என்பதை சமூகம் அப்போது புரியவில்லை.
மைத்திரி ஜனாதிபதியாகி ரணில் பிரதமர் ஆகியதும் முஸ்லிம்களையும் சிங்களவர்களையும் பிரிக்கும் சதி ஊடகங்கள், தாக்குதல்கள் மூலம் முன்னெடுக்கப்பட்டது. கொத்துக்குள் கர்ப்பத்தடை பிரச்சாரம், அம்பாரை பள்ளி தொடக்கம், திகன, கண்டி என நல்லாட்சி அரசின் ஒத்துழைப்புடன் தாக்குதல் நடை பெற்றது.
இதன் காரணமாக நாட்டில் இல்லாமல் இருந்த இஸ்லாமிய தீவிரவாதத்தை ஸஹ்ரான் என்பவன் தூசி தட்டி எழுப்பினான்.
ஒவ்வொரு பன்சலையையும் தாக்குவோம், வெடி குண்டாய் மாறுவோம் என விடியோ வெளியிட்டான்.
இதனை கண்ட ரணில் அரசு ஆஹா தாம் தேடிய ஒருவன் கிடைத்து விட்டான் என கண்டு அவனை உசுப்பேற்றி, அவனுக்கு அனைத்து பண வசதிகளையும் செய்து கொடுத்து, கண்டி, திகன கொடூர தாக்குதலால் வெறுப்பேறியிருந்த முஸ்லிம் இளைஞர்களுக்கு மூளைச்சலவை செய்வதற்குரிய வசதிகளை செய்து கொடுத்து ஈஸ்டர் தாக்குதல் வரை கொண்டு சென்று வங்கிக்கொள்ளை, நாட்டை பாதுகாக்க முடியாமை போன்ற தமது பலவீனங்களை மறைத்துக்கொண்டனர். ரணிலின் அமைச்சரவையின் கொள்ளைகளையும், அரச பலவீனத்தையும் மக்கள் மறந்து ஈஸ்டர் பற்றியே பேசத்தொடங்கியமை அவர்களுக்கு மிகப்பெரிய வெற்றியாக அமைந்தது.
பௌத்த பன்சலைகள் மீது தாக்காமல் கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்தச்செய்தமை ஏன் என்பதற்கான காரணத்தை நிதானமாக சிந்தித்தால் பல உண்மைகள் தெளிவாகும்.
நல்லாட்சி அரசு பற்றிய இமேஜ் சிங்கள மக்களிடம் சிதைந்து போயிருந்ததால் பௌத்த ஆலயங்களை தாக்கினால் இது மேலும் ரணில் அரசுக்கு பாதகமாக இருக்கும் என்பதாலும், கிறிஸ்தவ ஆலயங்கள் மீது தாக்குதல் நடத்துவதன் மூலம் மக்களை திசைதிருப்புதல், மற்றும் அமெரிக்கா முதல் ஐரோப்பிய கிறிஸ்தவ நாடுகளில் இத்தகைய தாக்குதலே அவர்களிடம் இலங்கையின் உள்நாட்டு அரசியல் பலவீனத்தை மறைக்க வைக்கும் என்றே இது திட்டமிடப்பட்டுள்ளதாகவே நிகழ்வுகள் நமக்கு காட்டுகின்றன.
இப்போது புதிய அரசாங்கம் அமையப்பெற்று நாடு நிம்மதியாக இருக்கிறது. ஆனாலும் அந்த நிம்மதியை குலைக்க தமிழ் பயங்கரவாத அனுசரணையால் ஆங்காங்கே பௌத்த தீவிரவாதம் செயல்படுகிறது.
ஆகவே பௌத்த தீவிரவாதத்தை கௌரவ ஜனாதிபதி கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்தால் ஓரளவு தமிழ் பயங்கரவாதத்தை ஒழிக்க முடியும். அத்துடன் சோடாப்போத்தல் இஸ்லாமிய தீவிரவாதத்தையும் எழ விடாமல் தடுக்க முடியும் என்ற ஆலோசனையை எமது கட்சி முன் வைக்கிறது.
- முபாறக் அப்துல் மஜீத்
உலமா கட்சி தலைவர்.
8.3.2021
நாட்டிலிருந்து தமிழ் பயங்கரவாதமும், இஸ்லாமிய தீவிரவாதமும் ஒழிக்கப்பட வேண்டும் என்ற ஜனாதிபதியின் கருத்தை பாராட்டுகிறோம்.
Reviewed by Madawala News
on
March 08, 2021
Rating: