உயிர்த்த  ஞாயிறு தாக்குதல் நடத்தப்பட்ட பின்னர் முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோவுக்கும்,
அரச புலனாய்வுப் பிரிவின் முன்னாள் பணிப்பாளர் நிலந்த ஜயவர்தனவுக்கும் இடையில் இடம்பெற்ற தொலைபேசி உரையாடல் தொடர்பான தகவல்கள் ஜனாதிபதி ஆணைக்குழுவில் கையளிக்கப்பட்டுள்ளது.
அது குறித்து ஆணைக்குழு ஆராய்ந்து வருவதாக அறிய வருகிறது. நிலந்த ஜயவர்தனவின் கையடக்க தொலைப்பேசியில் ஒலிப்பதிவு செய்யப்பட்ட மேலும் பல கலந்துரையாடல்கள் இருக்கின்றனவா? என்பதை ஆராய உடனடியாக ஜனாதிபதி ஆணைக்குழுவின் பொலிஸ் பிரிவினர் குறித்த தொலைபேசியை தமது பொறுப்பில் எடுக்குமாறு ஆணைக்குழுவின் தலைவர் உத்தரவிட்டிருந்தார்.
அந்த உரையாடல் 25 நிமிடங்களும் 4 செக்கன்கள் என அறிவிக்கப்பட்டுள்ளது.
நிலந்த ஜயவர்தன : சேர். இது தொடர்பில் நாம் அறிந்திருந்தோம். ஆனால் இவ்வளவு நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை என சொன்னது தவறு.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் : நல்லது… என்னை தெளிவுபடுத்தியதாக கூறுங்கள். நான் ஐ.ஜீயை தெளிவுப்படுத்தியுள்ளேன்.
நிலந்த ஜயவர்தன: சேர் நான் 7 ஆம் திகதி அறிவித்தவுடன், வெல் ரிசீவ்ட் என சேர் கூறினீர்கள் தானே?
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர்: ஜனாதிபதியிடம் சொல்லாததே இங்குள்ள பிரச்சினை…
நிலந்த ஜயவர்தன : ஜனாதிபதியிடம் சொன்னீர்களா? என என்னிடம் கேட்கவில்லை. ஜனாதிபதியிடம் சொல்லாததே பிரச்சினை என பத்திரிகைகளில் செய்தி வெளியாகிவருகின்றது. எப்படியானாலும் நான் சொல்லவில்லை.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் : சரி நானும் சொல்லவில்லை நீங்களும் சொல்லவில்லை.
நிலந்த ஜயவர்தன : ஜனாதிபதி 20 ஆம் திகதி இலங்கையில் இருக்கவில்லை தானே… அப்படியானால் பிரதமருக்கு சொல்ல வேண்டும் அல்லவா? நான் பிரதமருக்கு சொல்லவில்லை. அது கடமை துஷ்பிரயோகமாக அமையாது. இது ஒரு பெரிய பிரச்சினையாகாது. பத்திரிகைகளில் இதனை பெரிய பிரச்சினையாக்கியுள்ளன . உண்மையில் இது ஒரு அரசியல் சார்ந்த பிரச்சினை.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் : தவறுகள் யாராலும் நிகழலாம். இப்போது இவர்கள் என்னை கைது செய்ய போகிறார்கள். நான் பாதுகாப்புச் செயலாளர் பதவியில் இருந்து விலகியுள்ளேன்.
நிலந்த ஜயவர்தன :ஐ.ஜீ இராஜினாமா செய்து விட்டாரா?
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் : இல்லை. விலகவில்லை அதற்காக எம் இருவரையும் தாக்குவது நியாயம் இல்லை.