மகா பெளத்தர் என சொல்லிக்கொண்டிருப்பவர் இரண்டு தடவைகள் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தும்
ஒரு தூபியையேனும் அமைக்கவில்லை. ஆனால் பயங்கரவாத தாக்குதலுக்குப் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் தாக்கப்பட்ட பள்ளிவாசல்களை புனரமைக்கவும் நாங்கள் நிதி ஒதுக்கீடு செய்தோம் என அமைச்சர் சஜித் பிரேமதாச தெரிவித்தார். அத்துடன் எனக்கெதிராக எந்தளவு சேறு பூசினாலும் அபிவிருத்தி பணிகளை தொடர்வேன் எனவும் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் நேற்று எதிர்க்கட்சியினால் கொண்டுவரப்பட்டிருந்த மத்திய கலாசார நிதியம் தொடர்பான சபை ஒத்திவைப்பு வேளை பிரேரணையில் பதிலளித்து உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
பௌத்த சாசனத்தை பாதுகாப்பது அரசியலமைப்பின் பிரகாரம் அரசாங்கத்தின் கடமையாகும். அதேபோன்று மற்றைய மதங்களின் உரிமைகளும் பாதுகாக்கப்பட வேண்டுமெனக் குறிப்பிடப்பட்டுள்ளது. அதன் பிரகாரமே சிசு தஹம் செவன என்ற வேலைத்திட்டத்தை ஆரம்பித்துள்ளோம். 30 இலட்சம் ரூபா ஒரு தஹம் பாடசாலைக்காக ஒதுக்கியுள்ளோம். இதன்படி இலங்கையில் 361 தஹம் பாடசாலைகள் அமைக்கப்பட்டுள்ளன. இவ்வற்றுக்கு செலவழித்தது தவறா என கேட்கின்றேன். இது சிறைத் தண்டனை வழங்குமளவான குற்றமா? என கேட்கின்றேன்.
அத்துடன் பயங்கரவாத தாக்குதலுக்குள்ளான ஆலயங்களை நிர்மாணிக்க இந்த நிதியத்தில் இருந்தே செலவழித்தோம். அதேபோல் உயிர்த்த ஞாயிறு தாக்குதலுக்குப் பின்னர் எதிர்க்கட்சி உறுப்பினர்களின் ஆதரவுடன் முஸ்லிம் பள்ளிவாசல்கள் தாக்கப்பட்டன, அந்தப் பள்ளிவாசல்களை புனரமைக்கவும் நாங்கள் நிதி ஒதுக்கீடு செய்தோம். எதிர்க்கட்சி கொண்டுவந்திருக்கும் இந்த ஒத்திவைப்பு வேளை பிரேரணையால் 10க்கும் அதிகமான மக்கள் சேவைகள் தடைப்பட்டிருக்கின்றன. எதிர்க்கட்சி உறுப்பினர் டீ.பி. ஏக்கநாயக்க யாருடையதோ இத்துப்போன கயிற்றை பிடித்துக்கொண்டு இந்தப் பிரேரணையை கொண்டுவந்திருக்கின்றார்.
அத்துடன் நான் அதிகாலை 4 மணிக்கு எழுந்து நள்ளிரவு 12 மணிக்கே நித்திரைக்கு செல்கின்றேன். நான் மக்களுக்காக வேலை செய்வதற்காகவே இவ்வாறு எழுகின்றேன். இவ்வாறான நிலைமையில் ஏன் என் மீது குற்றச்சாட்டுகளை முன்வைக்கின்றீர்கள் என கேட்கின்றேன். நான் மற்றையவரின் பணிகளுக்கு எனது பிறப்புச் சான்றை கொடுக்கும் வொய்ஸ் கட் பௌத்தன் அல்ல. எனது பௌத்த தன்மை பூமியிலும் விகாரைகளிலும் இருக்கின்றது. நீங்கள் வேண்டியளவுக்கு என் மீது குற்றச்சாட்டுகளை முன்வையுங்கள். வேண்டுமென்றால் என்னை வெலிக்கடைக்கும் அனுப்புங்கள். எனக்கு பிரச்சினையில்லை. ஆனால் இந்த வருடத்திற்குள் 1000 தஹம் பாடசாலை மண்டபங்களை அமைக்க வேண்டுமென்பதே எனது இலக்காகும்.
அத்துடன் விகாரைக்கு சென்று வொய்ஸ்கட் கொடுக்கும் மகா பௌத்தர்கள் என கூறிக்கொண்டிருந்தவர்கள் ஒரு தூபியையேனும் அமைத்துள்ளார்களா?. இரண்டு தடவைகள் நிறைவேற்று ஜனாதிபதியாக இருந்தும் இதனை செய்தார்களா என கேட்கின்றேன். ஆனால் நான் அதனை செய்துள்ளேன். எனவே என்மீது எவ்வகையான குற்றச்சாட்டுக்களை, விமர்சனங்களை முன்வைத்தாலும் நான் எனது கடமையை செய்வேன். விகாரைகள் அமைப்பது தவறு என்றால் என்னை வெலிக்கடைக்கு அனுப்பினாலும் பிரச்சினையில்லை என்றார்.
ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்
விகாரைகள் அமைப்பது தவறு என்றால் என்னை வெலிக்கடைக்கு அனுப்பினாலும் பிரச்சினையில்லை ; சஜித்
Reviewed by Madawala News
on
September 05, 2019
Rating: