உயிர்த்த ஞாயிறுதின தாக்குதல்களில் பயன்படுத்தப்பட்ட வெடிபொருட்கள்
விநியோகத்துடன், பொதுபலசேனா அமைப்பின் நிறைவேற்று அதிகாரி திலந்த விதானகே மற்றும் அவ்வமைப்பின் ஊடக அதிகாரி ஆகியோர் தொடர்புகொண்டுள்ளதாக சர்வதேச உளவு சேவையொன்றினால், இலங்கையின் அரச பாதுகாப்பு பிரிவுக்கு வழங்கப்பட்டுள்ளதாகக் கூறப்படும் இரகசிய தகவல் தொடர்பில் விசாரணைகளை முன்னெடுக்குமாறு பொலிஸ் மா அதிபரிடம் பொதுபல சேனா அமைப்பு, எழுத்துமூலம் முறைப்பாட்டை முன்வைத்துள்ளது.
உயிர்த்த ஞாயிறு தினத் தாக்குதல் நடைபெற்று சுமார் ஒருவாரத்தின் பின்னர் அரச பாதுகாப்பு பிரிவுக்கு குறித்த உளவு சேவையினால் இந்தத் தகவல் வழங்கப்பட்டுள்ளதாக அம்முறைப்பாட்டில் சுட்டிக் காட்டப்பட்டுள்ளது.
பொதுபல சேனா அவ்வாறான செயல்களில் ஈடுபடவில்லை எனத் தீர்மானித்து அதனை இலங்கையின் பாதுகாப்புப் பிரிவு புறக்கணித்துள்ள போதிலும், குறித்த உளவு சேவையினால் இந்தத் தகவல் உலகளாவிய ரீதியில் பகிரப்படுவதாகவும், இந்த சம்பவத்துடன் தொடர்புடையவர்கள் எனக் கூறப்படும் தமது அமைப்பின் உறுப்பினர்களுக்கு சர்வதேச ரீதியில் பெரும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாகவும் திலந்த விதானகே சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்நிலையில், தம்மீதான குற்றச்சாட்டு மிகவும் பாரதூரமானது எனவும், இந்த உளவு தகவல் பகிரப்பட்ட விதம், அதனை உயிர்த்த ஞாயிறு சம்பவத்துடன் எவ்வாறு தொடர்புபடுத்தப்படுகிறது என்பது தொடர்பில் பூரண விசாரணைகளை மேற்கொள்ளுமாறு குறித்த முறைப்பாட்டில் கோரப்பட்டுள்ளது.
இது தொடர்பில், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பில் கண்டறிவதற்கான நாடாளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையிலும் இதற்கு முன்னர் வெளிப்படுத்தியிருந்ததாக திலந்த விதானகே இந்த முறைப்பாட்டில் தெரிவித்துள்ளார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வெடிபொருட்களுடன் பொது பல சேனா முக்கியஸ்தர்கள் இருவர் தொடர்பா?
Reviewed by Madawala News
on
September 05, 2019
Rating: