இரத்தினபுரி ஊடகவியலாளர் எம்.எல்.எஸ்.முஹம்மதின் பெறுமதியான கெமரா மற்றும் முக்கிய ஆவணங்கள் பொலிசாரால் பறிமுதல்.
இரத்தினபுரி அல்மக்கிய்யா முஸ்லிம் மகா வித்தியாலத்தின் உதவி அதிபரும், இரத்தினபுரி பிராந்திய யு.டி.வி.
தொலைக்காட்சி மற்றும் தமிழ் பத்திரிகைகளின் செய்தியாலருமான எம்.எல்.எஸ்.முஹம்மதின் பெறுமதியான வீடியோ கெமரா மற்றும் முக்கிய ஊடக ஆவணங்கள் பலதும் இரத்தினபுரி பொலிஸ் நிலைய குற்றப் புலனாய்வுப் பிரிவு அதிகாரிகளால் மேலதிக விசாரணைகளுக்காக இன்று மாலை(29) கைப்பற்றப்பட்டுள்ளன.
இரத்தினபுரி பொலிசாருக்கு கிடைக்கப் பெற்றுள்ள முக்கிய தகவலொன்றிற்கு இணங்க மேற்படி ஊடகவியலாளரின் அறை குற்றப் புலனாய்வு பொலிசாரால் திடீர் சோதனை செய்யப்பட்ட போதே வீடியோ கெமரா மற்றும் அவரது முக்கிய அடையாள அட்டைகள் உட்பட ஊடக ஆவணங்கள் பலதும் கைப்பற்றப் பட்டுள்ளன.
பேருவலை ஜாமிஆ நளீமிய்யா கலாபீட பட்டதாரியான இவர் கொழும்புப் பல்கலைக் கழகத்தில் ஊடக டிப்ளோமா கற்கை நெறியை நிறைவு செய்துள்ளதுடன் புலனாய்வு ஊடகத் துறையில் விஷேட பயிற்சி நெறிகளையும் நிறைவு செய்துள்ளார்.
கடந்த 2010 முதல் 2015 ஆம் ஆண்டு வரை அகில இலங்கை ஜம்மிய்யத்துல் உலமா இரத்தினபுரி மாவட்டக் கிளையின் செயலாளராக செயற்பட்டுள்ள எம்.எல்.எஸ்.முஹம்மத் பல இஸ்லாமிய சமூக நிறுவனங்களில் முக்கிய பொறுப்பிலும் இருந்து வருகிறார்.
இரத்தினபுரி நகரிலுள்ள ஒரேயொரு முஸ்லிம் ஊடகவியலாளரான இவர் இன்று மாலை வரை தனது வழமையான ஊடகப் பணியில் இருந்துள்ளார்.
கடந்த 8 வருடங்களுக்கும் மேலாக பல சவால்களுக்கும்,குடும்பப் பொறுப்புக்களுக்கும் மத்தியில் தனது நிதானமான ஊடகப் பணி மூலம் இரத்தினபுரி மாவட்ட அரச உயர் அதிகாரிகள் உட்பட அனைத்து சமூகங்களினதும் நன்மதிப்பையும், கௌரவத்தையும் பெற்றுள்ள இவர் தனது ஊடகக் கருவிகள் மற்றும் முக்கிய ஆவணங்கள் அனைத்தும் பொலிசாரால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளமை தொடர்பில் ஆழ்ந்த தனது கவலையையும் தெரிவித்துள்ளார்.
மேற்படி ஊடகவியலாளர் திஹாரியைச் சேர்ந்த மர்ஹும் எஸ்.எம்.மீரா லெப்பை ஆலிம் மற்றும் ஆல்ஆலிமா ஸம்சுன்நிஸாயா தம்பதிகளின் புதல்வர்களில் ஒருவர் என்பதும் குறிப்பிடத்தக்கதாகும்
இரத்தினபுரி ஊடகவியலாளர் எம்.எல்.எஸ்.முஹம்மதின் பெறுமதியான கெமரா மற்றும் முக்கிய ஆவணங்கள் பொலிசாரால் பறிமுதல்.
Reviewed by Madawala News
on
April 29, 2019
Rating: