அமெரிக்காவின் பொருளாதார கொள்கையினால் எதிர்காலத்தில் சர்வதேச நெருக்கடியொன்று
வருமென்ற தூர நோக்கு இருந்ததனாலேயே முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இரண்டு வருடங்களுக்கு முன்னர் ஜனாதிபதித் தேர்தலை நடாத்தினார் எனவும்,சோதிடரின் பேச்சைக் கேட்டு அல்லவெனவும் ஐக்கிய தேசியக் கட்சியின் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்தார்.
தனியார் தொலைக்காட்சியொன்றில் நேரடி அரசியல் கலந்துரையாடல் நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் இதனைக் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ கீழ் மட்டத்திலிருந்து படிப்படியாக அரசியலில் முன்னுக்கு வந்த அனுபவம் மிக்க ஒருவர். அவர் ஒரு சோதிடரின் பேச்சைக் கேட்டு அரசியலுக்கு வந்திருக்க மாட்டார்.அவரிடமிருந்த பொருளியல் புத்திஜீவியான பீ.பீ. ஜயசுந்தரவின் தூர நோக்கினாலேயே அவர் தேர்தலை நடாத்தினார்.
அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையிலான முறுகல் நிலைமையினால் சர்வதேச ரீதியில் இன்று போன்ற ஒரு நிலைமை ஏற்படும் என பீ.பீ. ஜயசுந்தர மஹிந்தவுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.இந்த பிரச்சினை வந்ததன் பின்னர் தேர்தலொன்றுக்கு முகம்கொடுப்பது சிரமமானது எனவும்,அதற்கு முன்னரேயே தேர்தலை நடாத்தி வெற்றி பெற்றால், இதுபோன்ற பிரச்சினைக் காலத்தில் அரசாங்கத்தை தக்க வைத்துக் கொள்ளலாம் எனவும் மஹிந்த ராஜபக்ஷவுக்கு பீ.பீ. ஜயசுந்தர ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதனாலேயே மஹிந்த ராஜபக்ஷ தேர்தலை முன்னரேயே நடாத்தினார். இதனால், கஷ்டமான காலத்தில் தேர்தலை நடாத்தி தோல்வியடையாமல் இருக்க முயற்சி செய்தார். இருப்பினும், மக்களின் தீர்ப்பு வேறு விதமாக அமைந்திருந்தது எனவும் முஜிபுர் ரஹ்மான் எம்.பி. விளக்கம் கூறினார்.
பொருளாதார நெருக்கடி வரும் என்பதை அறிந்துகொண்டே மஹிந்த தேர்தலை முற்கூட்டியே நடத்தினார்..
Reviewed by Madawala News
on
October 12, 2018
Rating: