அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹி வபரகாதுஹு
நாட்டின் பல பாகங்களிலும் இந்நாட்களில்
பெய்து வருகின்ற கடும் மழையினால் பல்வேறு பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. மக்களின் அன்றாட வாழ்க்கைக்கு இதனால் மிகவும் சிரமம் ஏற்பட்டுள்ளது. இம்மழை காரணமாக பல இடங்களிலும் வெள்ள அனர்த்தங்கள் ஏற்பட்டுள்ளதுடன் அனர்த்த எச்சரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில் பாதிக்கப்பட்டவர்களுக்கு முடியுமான உதவிகளைச் செய்யுமாறு அவ்வப் பிரதேச மக்களிடம் அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா வேண்டிக் கொள்கிறது. அதே நேரம் இத்தொடர் மழையின் ஆபத்துக்களிலிருந்தும், அதனால் ஏற்படுகின்ற கஷ்டங்களிலிருந்தும் பாதுகாக்குமாறும், இன்னல்களில் சிக்கியிருக்கின்ற மக்களுக்கு அருள் புரியுமாறும் அல்லாஹ்விடம் பிரார்த்திக்குமாறு நாட்டு மக்களை அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா கேட்டுக் கொள்கிறது.
மேலும் வெள்ளம், மண்சரிவு போன்ற அனர்த்தங்கள் ஏற்படும் சாத்தியமுள்ள இடங்களில் உள்ள மக்கள் அரசாங்கம் விடுக்கும் அறிவுறுத்தல்களைக் கேட்டு நடக்குமாறும், உலமாக்கள் தத்தமது பிரதேச மக்களுக்கு இது போன்ற நிலைகளில் எவ்வாறு செயற்பட வேண்டுமென வழிகாட்டுவதுடன் கீழ் வரும் துஆக்களை அதிகமாக ஒதிவர ஆர்வமூட்டுமாறும்இ மக்களை அல்லாஹ்வின் பக்கம் திருப்பி அவனது உதவிகளை பெற்றுக் கொள்ள வழிகாட்டுமாறும் ஜம்இய்யா கேட்டுக் கொள்கிறது.
மழை தேவையை விட அதிகரித்தால் ஒத வேண்டிய துஆ
اللهم حَوَالَيْنَا، ولا علينا، اللهم على الآكام والظِّرَاب وبطون الأودية، ومنابت الشجر
இறைவா! எங்கள் சுற்றுப் புறங்களில் (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!) எங்களுக்குப் பாதகமாக இதை நீ ஆக்கிவிடாதே. இறைவா! மணற்குன்றுகள், மலைகள், ஓடைகள், விளைநிலங்கள் ஆகியவற்றின் மீது (இம்மழையைப் பொழியச் செய்வாயாக!)'
(புஹாரி 1013)
காற்று வேகமாக வீசும் போது ஒது வேண்டிய துஆ
اللهُمَّ إِنِّي أَسْأَلُكَ خَيْرَهَا، وَخَيْرَ مَا فِيهَا، وَخَيْرَ مَا أُرْسِلَتْ بِهِ، وَأَعُوذُ بِكَ مِنْ شَرِّهَا، وَشَرِّ مَا فِيهَا، وَشَرِّ مَا أُرْسِلَتْ بِهِ
"இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மையையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்"
(முஸ்லிம் 899)
அல்லாஹுத்தஆலா சீரான காலநிலையைத் தந்து நம்மனைவரையும் ஆபத்துக்களில் இருந்து பாதுகாப்பானாக.
அஷ்-ஷைக் எஸ்.எல். நவ்பர்
செயலாளர், சமூக சேவைக் குழு
அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா
நாட்டில் ஏற்பட்டுள்ள சீரற்ற காலநிலை நீங்க பிரார்த்திப்போம்.
Reviewed by Madawala News
on
October 09, 2018
Rating: