தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பம்.



நாட்டின் பிள்ளைகளுக்கு சிறந்த கல்வியை வழங்குவதற்காக அவர்களுக்கு பாடம் தொடர்பான அறிவை வழங்கி பரீட்சைகளுக்கு தயார்படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கும் பாதுகாக்கப்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.


அத்துடன் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட நவீன தொழிநுட்ப அறிவை பிள்ளைகளுக்கு வழங்க வேண்டும் என்று தெரிவித்த ஜனாதிபதி, அதற்கமைவாக பாடசாலை கல்வி மற்றும் பரீட்சை முறைகளில் மாற்றம் ஏற்படுத்துவது தொடர்பில் அரசாங்கம் கவனம் செலுத்தியுள்ளதாகவும் குறிப்பிட்டார்.


நாரஹேன்பிட்டி சுஜாதா மகளிர் கல்லூரியில் இன்று (25) முற்பகல் இடம்பெற்ற “2024 பாடசாலை உணவுத் திட்டம்” ஆரம்ப நிகழ்வில் கலந்து கொண்ட ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைக் குறிப்பிட்டார்.


நாட்டிலுள்ள தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் பாடசாலையில் போசாக்கு உணவு வழங்குவதற்கு கல்வி அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது.


போசாக்கு நிபுணர்களின் பரிந்துரைகளை கருத்திற்கொண்டு மாணவர்கள் கல்வி நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கு முன்னர் காலை 7.30 மணிக்கும் 8.30 மணிக்கும் இடைப்பட்ட நேரத்தில் இந்தக் காலை உணவை வழங்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பணிப்புரை விடுத்துள்ளார்.


"ஆரோக்கியமான சுறுசுறுப்பான தலைமுறை" என்ற கருப்பொருளின் கீழ், 2024 ஆம் ஆண்டிற்கான பாடசாலை உணவுத் திட்டம், பாடசாலை மாணவர்களிடையே போசாக்குப் பிரச்சினைகளைக் குறைத்தல், மாணவர்களின் தினசரி பாடசாலை வருகையை அதிகரித்தல், நல்ல உணவுப் பழக்கம் மற்றும் சுகாதாரப் பழக்கங்களை மேம்படுத்துதல், கல்வி மேம்பாட்டு மட்டத்தை நோக்கமாகக் கொண்டுள்ளதுடன் இது உள்நாட்டு உணவு கலாசாரத்தை கட்டியெழுப்புவதற்கான அடிப்படை நோக்கங்களை நிறைவேற்றும் என எதிர்பார்க்கப்படுகிறது.


9134 அரச பாடாசலைகளிலும், 100க்கும் குறைவான மாணவர்களைக் கொண்ட அனைத்துப் பாடசாலைகளிலும் ஆரம்ப வகுப்புகளில் உள்ள அனைத்து மாணவர்களையும் உள்ளடக்கிய இந்த வருட பாடசாலை உணவு வழங்கல் திட்டத்தின் மூலம் 1.6 மில்லியன் மாணவர்கள் பயனடைந்துள்ளனர். இதற்காக ஒன்பது மாகாண சபைகளுக்கு அரசாங்கம் நேரடியாக 16,600 மில்லியன் ரூபா நிதியை ஒதுக்கியுள்ளதுடன், உலக உணவுத் திட்டம் மற்றும் அமெரிக்காவின் விவசாயத் திணைக்களம் (USDA) உட்பட ஏனைய அமைப்புகளும் அனுசரணை வழங்குகின்றன.

இந்த போசாக்குத் திட்டத்திற்கு தேவையான உணவு வகைகள், முக்கிய உள்நாட்டு விநியோகஸ்தர்களிடமிருந்து பெறப்படுவதுடன், நேரடி மற்றும் மறைமுகமான புதிய வேலைவாய்ப்புகள் உருவாக்கப்படுவதன் ஊடாக நாட்டின் உற்பத்தி பொருளாதாரத்தை வலுப்படுத்துவதற்கான பங்களிப்பாகவும் உள்ளது.


இந்தப் பாடசாலை உணவுத் திட்டம் தொடர்பான அனைத்து நிதி நிர்வாகங்களையும் வெளிப்படைத்தன்மையுடனும் அறிக்கைகளுடனும் முன்னெனெடுப்பதற்கான பொறிமுறையும் நடைமுறையில் உள்ளது. கொள்கை வகுக்கப்பட்டது முதல் அதன் அனைத்து முக்கிய நிர்வாக மற்றும் கண்காணிப்பு நடவடிக்கைகளை கல்வி அமைச்சின் சுகாதாரம் மற்றும் போசாக்கு பிரிவு மேற்கொள்கின்றது.


இந்நிகழ்வில் கலந்து கொண்டமைக்காக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவுக்கு அதிபர் திருமதி பிரியங்கிகா விஜேசிங்க நினைவுப் பரிசையும் வழங்கினார்.


இந்நிகழ்வில் உரையாற்றிய ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க மேலும் தெரிவித்ததாவது:


பாடசாலை உணவுத் திட்டம் இன்று ஆரம்பிக்கப்படுகிறது. அரசாங்கத்தின் எதிர்பார்ப்புகளில் ஒன்றை நிறைவேற்றுவதற்கான வாய்ப்பாக இந்த சந்தர்ப்பத்தை நான் பார்க்கிறேன். கல்விச் செயற்பாடு பூரணமடைவதற்கு, மாணவர்களுக்கு பாட அறிவை வழங்கி, பரீட்சைக்குத் தயார் படுத்துவதைப் போன்றே அவர்களின் போசாக்கையும் பாதுகாக்க வேண்டும். உலகில் பல நாடுகள் இந்த பாடசாலை உணவு திட்டத்தை செயல்படுத்தி வருகின்றன.


நமது நாட்டில் போசாக்குக் குறைபாடு பாரிய பிரச்சினையாக மாறியுள்ளது. 'அஸ்வெசும' திட்டத்தின் மூலம் குறைந்த வருமானம் பெறும் மக்களுக்கு வழங்கப்படும் நிதி நிவாரணத்தை மூன்று மடங்காக உயர்த்தியுள்ளோம்.


பாடசாலை மாணவர்களிடையே போசாக்குக் குறைபாடு அதிகரிப்பதற்கு வருமான அளவு மட்டும் காரணம் அல்ல. சில மாணவர்கள் பாடசாலைக்குச் செல்வதற்காக காலை 6.00 மணியளவில் வீட்டை விட்டு வெளியில் வருகிறார்கள். இதனால் அவர்களுக்கு காலை உணவு சாப்பிட முடிவதில்லை.


மேலும் பகலுணவையும் சாப்பிட முடிவதில்லை. எனவே எந்த அந்தஸ்த்தை கொண்டிருந்தாலும்,எந்த இனத்தை அல்லது மதத்தை சேர்ந்தவராக இருந்தாலும் சகல மாணவர்களும் இந்த சிக்கலை எதிர்கொள்கின்றனர். எனவே, மாணவர்களுக்கு பாடசாலையில் உணவு கிடைப்பதற்கு சந்தர்ப்பம் வழங்குவது மிகவும் அவசியம்.



தற்போது நாட்டில் நவீன கல்வி முறையை உருவாக்குவதற்கு நாங்கள் முயற்சி செய்து வருகிறோம். 2024 ஆம் ஆண்டுக்கு மாத்திரமன்றி 2030 ஆம் ஆண்டுக்கும் உகந்த கல்வி முறையை உருவாக்க வேண்டும்.அந்தப் பணிகளை இப்போது செய்து வருகிறோம். ஆசிரியர்களுக்கு பயிற்சி அளித்தல், நவீன தொழில்நுட்ப அறிவை வழங்குதல் போன்ற திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன

மேலும், ஒவ்வொரு பாடசாலையிலும் செயற்கை நுண்ணறிவு திட்டத்தை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். முதலில் பாடசாலைகளில் AI சங்கங்கள் தொடங்கப்பட வேண்டும். மேலும், தேசிய AI மையம் சட்டப்படி நிறுவப்பட உள்ளது.இந்த ஆராய்ச்சி மற்றும் கல்வி நடவடிக்கைகளுக்காக அரசாங்கம் ஆயிரம் மில்லியன் ரூபாவை ஒதுக்கியுள்ளது என்பதைக் கூற வேண்டும்.



அதன்படி, அடுத்த சில ஆண்டுகளில், செயற்கை நுண்ணறிவுத் திட்டத்தை ஆரம்பப் பாடசாலைகள் மட்டுமின்றி, உயர்கல்வி கற்பிக்கப்படும் அனைத்துப் பாடசாலைகளிலும் அறிமுகப்படுத்த உள்ளது.


நவீன தொழில்நுட்பத்துடன் நாம் முன்னேற வேண்டும். அந்த தொழில்நுட்ப அறிவை பிள்ளைகளுக்கு கொடுக்க வேண்டும். அதன்படி, பாடசாலைக் கல்வி மற்றும் பரீட்சை முறையை மாற்றியமைப்பது குறித்து கவனம் செலுத்தியுள்ளோம். இந்த நவீன தொழில்நுட்ப அறிவோடு பிள்ளைகளின் ஆங்கில மொழி அறிவையும் வளர்க்க வேண்டும். அதற்கான திட்டங்களையும் வகுத்துள்ளோம் என்றும் ஜனாதிபதி இங்கு தெரிவித்தார்
தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பம். தரம் 1-5 வரை உள்ள அனைத்து பாடசாலை மாணவர்களுக்கும் உணவு வழங்கும் திட்டம் ஆரம்பம். Reviewed by Madawala News on March 25, 2024 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.