மோட்டார் சைக்கிளில் சென்ற இளைஞர்கள் குதிரை மீது மோதி படுகாயம்... வீதியில் சுற்றித்திரியும் குதிரைகளை அப்புறப்படுத்துமாறும் பொது மக்களும் ,வாகனச் சாரதிகளும் கோரிக்கை. #இலங்கை
(நானுஓயா நிருபர்)
நுவரெலியா- பதுளை பிரதான வீதியில் இன்று காலை நடந்த மோட்டார் சைக்கிள் விபத்தில் இரு இளைஞர்கள் படுகாயமடைந்துள்ளனர்.
இரு இளைஞர்களும் மோட்டார் சைக்கிள் ஒன்றில் மார்காஸ் தோட்ட பகுதியிலிருந்து நுவரெலியா பிரதான நகரை நோக்கிப் பயணிக்கும் போது மட்டக்குதிரை ஒன்று மோட்டார் சைக்கிளில் மோதியமையால் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது.
குறிப்பாக நுவரெலியா-கண்டி , நுவரெலியா – உடப்புசல்லாவ, நுவரெலியா – பதுளை போன்ற வீதிகள் பிரதான போக்குவரத்து வீதிகளாக உள்ளன. இந்த வீதிகளில் பகல் நேரம் மட்டுமன்றி, இரவு நேரங்களிலும் தினமும் நூற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. அரசு மற்றும் தனியார் பேருந்துகள், பாடசாலை வாகனங்கள், அரசுத்துறை சார்ந்த வாகனங்கள், கனரக வாகனங்கள் முதல் சிறிய ரக வாகனங்கள் வரை இந்தச் சாலையில் செல்கின்றன. போக்குவரத்து மிகுந்த இந்த வீதியில் 30-க்கும் மேற்பட்ட மட்டக்குதிரைகள் தினமும் சுற்றித்திரிகின்றன. இதனால் போக்குவரத்துக்கு இடையூறாக வீதியில் ஆங்காங்கே படுத்து ஓய்வெடுக்கின்றன. இதனால் வாகனச் சாரதிகள் , குறிப்பாக இருசக்கர வாகனங்களும் , முச்சக்கரவண்டிகளும் அதிகமாக மட்டக்குதிரை நகரும் திசையை கணிக்க முடியாமல் மோதி விபத்தில் சிக்கி வருகின்றனர்.
இதனால் அவ்வழியாக வாகனங்கள் செல்ல முடியாமல் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதுடன், அடிக்கடி வாகன விபத்து ஏற்பட்டு உயிரிழப்பு ஏற்படுவதும், காயமடைவதும் தொடர் கதையாகி வருகிறது எனக் குற்றம் சுமத்துகின்றனர்.
தொடர்ந்து விபத்து ஏற்பட்டு உயிரிழப்புகள் நிகழும் முன் பிரதான வீதிகளில் சுற்றித்திரியும் மட்டக்குதிரைகளை அப்புறப்படுத்த சம்பந்தப்பட்ட அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் எனவும் , இப்பிரச்சினையின் தீவிரத்தை உணர்ந்து மட்டக்குதிரை வளர்ப்போருக்கு உரிய விழிப்புணர்வை ஏற்படுத்தி , அதை மீறும் பட்சத்தில் மட்டக்குதிரையை பறிமுதல் செய்து அதிக தண்டப்பணத்தை விதிக்க வேண்டும் எனவும் பொது மக்களும் ,வாகனச் சாரதிகளும் கோரிக்கை விடுக்கின்றனர்.
No comments: