நாடு முழுவதும் நேற்று இரவு மேலும் பல வன்முறைச்
சம்பவங்கள் பதிவாகியுள்ளன.
ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டைத் தாக்க முற்பட்ட 6 பேர் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்காகி காயமடைந்துள்ளனர். ரத்கம பிரதேச சபைத் தலைவரின் வீட்டினுள் இருந்த நபர்களால் சுடப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அங்கொட பிரதேசத்தில் பொதுமக்களால் தாக்கப்பட்ட பேருந்தை இழுத்துச் செல்ல முற்பட்ட இராணுவத்தினர் மற்றும் இரண்டு பொலிஸ் உத்தியோகத்தர்கள் பயணித்த ஜீப் மீது சிலர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
குறித்த குழுவினர் இரு பொலிஸ் உத்தியோகத்தர்களுடன் வாக்குவாதம் செய்து பேருந்திற்கு தீ வைக்க முற்பட்டதைத் தொடர்ந்து முல்லேரியா பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி அந்த இடத்திற்கு வந்துள்ளார். இதன் போது பொதுமக்கள் அவரது ஜீப்பிற்கு தீ வைக்க முயற்சித்துள்ளனர்.
இதனையடுத்து பொலிஸ் ஜீப்பிற்கு தீ வைக்க முற்பட்ட குழுவினரை கலைக்க பொலிஸார் வானத்தை நோக்கி சுட்டுள்ளனர். சம்பவத்தில் காயமடைந்த ஒருவர் கொழும்பு தேசிய வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இதேவேளை, திங்கட்கிழமை இரவு நீர்கொழும்பில் அமைந்துள்ள பிரபல ஹோட்டலை பொதுமக்கள் அடித்து நொறுக்கியுள்ளனர்.
இதனை அடுத்து நேற்று ஒரு குழுவினர் (ஹோட்டல் உரிமையாளரின் ஆதரவாளர்கள்) அப்பகுதியில் உள்ள வீடுகள் மற்றும் கடைகளைத் தாக்கியதை அடுத்து, பின்னர் வாகனங்கள் மற்றும் சில கடைகளுக்கு தீ வைத்ததைத் தொடர்ந்து ஹோட்டலைச் சுற்றியுள்ள பகுதியில் பதட்டமான சூழ்நிலை ஏற்பட்டது.
எவ்வாறாயினும், பல மதத் தலைவர்கள் தலையிட்டு பதற்றமான சூழ்நிலையைக் கட்டுப்படுத்தினர், அதே நேரத்தில் தாக்குதல் நடத்தியவர்கள் தாக்கப்பட்ட கடைகளை சூறையாடும் வீடியோ காட்சிகளும் வெளியிடப்பட்டுள்ளன.
இராணுவமும் அந்தப் பகுதியைப் பாதுகாப்பதாக உறுதியளித்தது.
வெளியூர்களில் இருந்து வந்தவர்கள் வந்து தாக்குதலை நடத்தியுள்ளதாக பிரதேசவாசிகள் தெரிவித்துள்ளனர்.
நேற்றிரவு சீதுவ பிரதேசத்தில் பேருந்து ஒன்றும் ஒரு குழுவினரால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்னாண்டோவின் தலங்கமவில் உள்ள வீடும் ஆத்திரமடைந்த கும்பலால் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.
லக்கலவில் உள்ள பாராளுமன்ற உறுப்பினரின் தோட்டமும் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.
பண்ணையை தாக்கிய பொதுமக்கள் தாக்குதலுக்கு முன்னதாக விலங்குகளை காட்டுக்குள் விட்டனர்.
உமாந்தவ பௌத்த பல்கலைக்கழகத்தில் பாராளுமன்ற உறுப்பினர் தஞ்சம் புகுந்ததாக பரவிய வதந்தியின் பேரில் ஒரு கும்பல் அங்கு சோதனை நடத்தியது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் (SLPP) பாராளுமன்ற உறுப்பினர் யு.கே.சுமித்தின் குருநாகலிலுள்ள வீடும் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பாராளுமன்ற உறுப்பினர் பிரேம்நாத் சி டோலவத்தேவின் கொழும்பிலுள்ள வீடும் நேற்று ஒரு குழுவினரால் தாக்கப்பட்டது.
பாராளுமன்ற உறுப்பினர் மஹீபால ஹேரத்தின் பொலன்னறுவை பிரதேசத்தில் உள்ள விவசாய களஞ்சியசாலை ஒரு கும்பலால் தீ வைத்து எரிக்கப்பட்டுள்ளது. இந்தக் குழு 200 மூடை நெல், 400 மூட்டை உரியா ஆகியவற்றைக் கிடங்கில் இருந்து எடுத்துச் சென்றது.
தங்காலையில் உள்ள கார்ல்டன் முன்பள்ளி மீதும் ஒரு குழுவினர் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
முன்னாள் பிரதமர் மகிந்த ராஜபக்சவின் மகன் யோஷித ராஜபக்சவுக்கு சொந்தமானதாக கூறப்படும் இரண்டு ஹோட்டல்களும் மெடில்லா மற்றும் கொங்கல பிரதேசத்தில் தாக்கப்பட்டு தீவைக்கப்பட்டுள்ளன.
ஏறாவூரில் உள்ள முன்னாள் சுற்றாடல் அமைச்சர் ஹாபீஸ் நசீர் அஹமட்டின் அலுவலகம் ஆர்ப்பாட்டக்காரர்களால் தீக்கிரையாக்கப்பட்டது.
இலங்கையின் இசைக்கலைஞர் இராஜ் வீரரத்னவின் பொல்ஹெங்கொடவில் உள்ள வீடும் நேற்று இரவு ஒரு கும்பலால் தாக்கப்பட்டது.
பிட்டகோட்டேயில் உள்ள அவன்ட் கார்ட் பாதுகாப்பு சேவை அலுவலகம் மீது கற்கள் வீசி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
உபாலி கொடிக்கார உட்பட பல மாகாண அரசியல்வாதிகளின் வீடுகள் ஆத்திரமடைந்த கும்பல்களால் தாக்கப்பட்டு தீக்கிரையாக்கப்பட்டன.
நாடு முழுவதும் நேற்று இரவும் மேலும் பல வன்முறைச் சம்பவங்கள் பதிவு ( முழு விபரம் இணைப்பு )
Reviewed by Madawala News
on
May 11, 2022
Rating: