ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க
புதிய பிரதமராக நியமிக்கப்படவுள்ளதாக நம்பகமான தகவல் வெளியாகியுள்ளது..
ரணில் விக்கிரமசிங்கவுக்கு ஆதரவளிக்க பெருமளவான சிங்கள, தமிழ், முஸ்லிம் பாராளுமன்ற உறுப்பினர்கள் முன்வந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, பல அரசியல் கட்சிகளின் தலைவர்களை அப்பதவியை ஏற்குமாறு கோரிய போதிலும், நாட்டில் நிலவும் பொருளாதார நிலைமை காரணமாக அவர்கள் அந்த சவாலை ஏற்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
முன்னாள் பிரதமருக்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கும் இடையிலான கலந்துரையாடலின் போது, நாட்டு மக்கள் எதிர்நோக்கும் பொருளாதார அழுத்தத்தில் இருந்து விடுவிப்பதற்கான திட்டம் தன்னிடம் இருப்பதாக திரு.விக்கிரமசிங்க விரிவாக விளக்கியுள்ளார்..
நாட்டில் இடம்பெற்று வரும் ஊழல் மற்றும் மோசடிகள் தொடர்பில் முன்னாள் பிரதமரிடம் என்ன நடவடிக்கை எடுக்க உத்தேசித்துள்ளார் என அவர்கள் கேட்டுள்ளனர்.
இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், குற்றப் புலனாய்வு திணைக்களம் மற்றும் பொலிஸ் திணைக்களம் என்பனவற்றுடன் இணைந்து ஊழல் மோசடிகள் தொடர்பில் ஆராய குழுவொன்று அமைக்கப்படும் என முன்னாள் பிரதமர் தெரிவித்துள்ளார்.
இதன்படி, புதிய பிரதமராக ரணில் விக்ரமசிங்கவுக்கு ஆதரவளிக்க நாடாளுமன்ற உறுப்பினர்கள் பலர் தீர்மானித்துள்ளதாக கூறப்பட்டது.