யாழ் பல்கலைக்கழக வளாகத்தில் அமைக்கப்பட்டிருந்த முள்ளிவாய்க்கால் நினைவு தூபி அழிக்கப்பட்டமைக்கு
எதிர்ப்புத் தெரிவித்து இன்று வடக்கு, கிழக்கு தழுவிய ரீதியில் மேற்கொள்ளப்பட்ட ஹர்த்தால் காரணமாகக் வடக்கு கிழக்கு மாகாணங்களில் ஹர்தால் அனுஸ்டிக்கப்பட்டுள்ளது.
இன்றைய போராட்டத்திற்கும் யாழ்ப்பாண மக்களும் தமது பூரண ஆதரவினை வழங்கியுள்ளார்கள்.
யாழ் நகரில் உள்ள வர்த்தக நிலையங்கள் மூடப்பட்டு உள்ளதோடு வீதிகளில் மக்கள் நடமாட்டமும் குறைந்து காணப்படுகின்றது.
தனியார் போக்குவரத்து சேவை இடம்பெறவில்லை மற்றும் அத்தியாவசிய சேவைகள் தவிர்ந்த ஏனைய சேவைகள் அனைத்தும் ஸ்தம்பிதம் அடைந்துள்ளது.
அரச பேருந்து சேவைகள் மட்டுப்படுத்தப்பட்ட அளவில் சேவையில் ஈடுபட்டுள்ளதை அவதானிக்க முடிந்துள்ளது.
அத்தோடு பாடசாலையின் கல்வி செயல்பாடுகளும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
கிளிநொச்சி நகரில் பொதுச் சந்தை, மருந்தகங்கள், உணவகங்கள் என அனைத்து வர்த்தக நிலையங்களும் மூடப்பட்டுள்ளன.
அரச போக்குவரத்து சபைக்குச் சொந்தமான பேருந்துகள் மாத்திரமே போக்குவரத்தில் ஈடுபட்டுள்ளன.
வங்கிகள் மற்றும் அரச நிறுவனங்கள் திறக்கப்பட்டிருந்த போதும் போது மக்கள் இன்றியே காணப்படுகின்றன.
அத்தோடு பாடசாலைகள் நீண்ட இடைவெளிக்குப் பின் ஆரம்பிக்கப்பட்ட போதும் மாணவர்களின் வரவு மிக மிகக் குறைவாக உள்ளமையால் பாடசாலைகளின் செயற்பாடுகளும் முற்றாகப் பாதிக்கப்பட்டுள்ளன.
மேலும் மட்டக்களப்பு மாவட்டத்தில் அனேக இடங்களில் இன்று திங்கட்கிழமை பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கப்பட்டது.
பாடசாலைகளுக்கு ஆசிரியர்கள் சென்றுள்ள போதிலும் மாணவர்கள் சென்றிருக்கவில்லை.
களுவாஞ்சிகுடி, ஆரையம்பதி, மட்டக்களப்பு, காத்தான்குடி, வாழைச்சேனை, கொக்ட்டிச்சோலை, உட்படப் பல நகரங்களிலும் கடைகள் பூட்டப்பட்டிருந்ததுடன் அனைத்து அலுவல்களும் ஸ்தம்பித்திதுள்ளமையைக் காணக்கூடியதாகவுள்ளது.