ஐக்கிய அரபு அமீரக நாட்டில் பொதுப் போக்குவரத்துகள் மற்றும் நடமாட்டங்களுக்கு முற்றும் முழுதாக இயக்கம் நிறுத்தப்பட்டுள்ளது.
அந்நாட்டில் நேற்றிரவு (04) முதல் அமுலுக்கு வரும் வகையில் இது நடைமுறைக்கு வந்துள்ளது.
02 வார காலத்திற்கு 24 மணித்தியால கட்டுப்பாடு விதிக்கப்பட்டுள்ளதாக, சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன.
கொரோனா வைரஸ் பரவுவதைக் கட்டுப்படுத்த வளைகுடா நாடுகள் பாரிய நகரங்களில் நடவடிக்கைகளை கடுமையாக்கியதால், சவூதி அரேபியா செங்கடல் நகரமான ஜித்தாவின் சில பகுதிகளை மூடியது. இந்நிலையிலேயே துபாயிலும் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன.
பொதுமக்கள் அத்தியாவசியத் தேவைகளுக்காக வெளியே செல்ல அனுமதிக்கப்படும் அதேவேளை, அத்தியாவசிய தேவைகளில் பணி புரிபவர்களும் வெளியில் செல்ல அனுமதிக்கப்படுவார்கள். அத்தோடு தனிநபர்கள் வீடுகளை விட்டு வெளியேற அனுமதிக்கப்பட மாட்டார்கள் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருள் கொள்வனவுக்காக மாத்திரம் ஒரு வீட்டிலிருந்து ஒருவர் மாத்திரம் வெளியில் செல்ல முடியும் என்பதோடு, அவ்வாறு செல்பவர்கள் முகக் கவசங்களை அணிந்திருக்க வேண்டும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கொரோனா வைரஸ் தொற்றுக்கு உள்ளானவர்களை அடையாளம் காண்பதற்காக விரிவான பரிசோதனைகள் மேற்கொள்ளப்படும் எனவும் அந்நாட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டில் உணவு விற்பனை நிலையங்கள், பல்பொருள் அங்காடிகள், மருந்தகங்கள், கடைகள் உள்ளிட்டவற்றை திறந்து வைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
இவ்வேளையில் விதிக்கப்பட்டுள்ள நிபந்தனைகளை மீறும் பொதுமக்களுக்கு எதிராக அபராதம் விதிக்கப்படும் அல்லது, சட்ட நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.
நேற்றிரவு முதல் துபாய் இரு வாரங்களுக்கு மூடப்பட்டது.
Reviewed by Madawala News
on
April 05, 2020
Rating: