தேர்தல் நெருங்கிவரும் சூழ்நிலையில், சிறிய மற்றும் சிறுபான்மை அரசியல் கட்சிகள் சிவில் சமூக
அமைப்புகள் என்பவற்றையும் தொடர்புபடுத்தி கூட்டாக செயற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் பற்றி சீர்தூக்கிப் பார்க்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர், பாராளுமன்ற உறுப்பினர் ரவூப் ஹக்கீம் தெரிவித்தார்.
அத்துடன், சமூகத்தில் வன்முறையோடு கூடிய தீவிரவாதம் தலைதூக்காமல் இருப்பதற்கு பாராளுமன்றத்திலுள்ள முஸ்லிம் உறுப்பினர்களை ஒன்றுபடுத்தி பங்களிப்பு செய்வது பற்றிய முன்னெடுப்புகள் மேற்கொள்ளப்படுகின்றன. அதற்கு உறுப்பினர்களிடமிருந்து போதிய ஆதரவு தெரிவிக்கப்பட்டுள்ளதாகவும் ஹக்கீம் கூறினார்.
இலங்கைக்கான நெதர்லாந்துத் தூதுவர் டன்ஜா கொங்ரிஜிப் நேற்று முன்தினம் தம்மைச் சந்தித்துக் கலந்துரையாடியபோதே ரவூப் ஹக்கீம் இதனைத் தெரிவித்தார்.
இதற்கு சற்று முன்னர் ஐரோப்பிய ஒன்றியத்தின் தூதுக் குழுவினரும் முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீமை சந்தித்து உரையாடியிருந்தனர். அவர்களுடனும் பல்வேறு பயனுள்ள கருத்துக்களை அவர் பரிமாறினார். தற்போது இலங்கை வந்துள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் குழுவினரும், இங்குள்ள அதன் பிரதிநிதிகளும், அதில் பங்குபற்றினர்.
இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம், சகிப்புத்தன்மை, நாட்டுப்பற்று என்பவற்றின் முக்கியத்துவம் பற்றியும் உரையாடப்பட்டன. தாம் செனகல் நாட்டில் நெதர்லாந்தின் தூதுவராக முன்னர் பணியாற்றிய காலத்தில் பெரும்பான்மை முஸ்லிம் மக்களுடன் பழகிய அனுபவம் உண்டெனவும் தூதுவர் கூறினார்.
நெதர்லாந்துத் தூதுவர் டன்ஜா கொங்ரிஜிப், பாராளுமன்றத்திலும் ஏனைய மட்டங்களிலும் பெண்களின் பிரதிநிதித்துவம் உரிய முறையில் இடம்பெற வேண்டியதன் அவசியத்தை கவனத்திற்கு கொண்டுவந்தபோது, அதுபற்றிய விளக்கங்களை ஹக்கீம் வழங்கினார். பெண்களுக்கான தொழில் சந்தை வாய்ப்புகள், போதிய வேதனம் வழங்கப்படுதல், அவர்களது நலவுரிமைகள் பேணப்படுவதன் அவசியம் என்பன பற்றியும் பரஸ்பரம் கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.
தீவிரவாதம் தலைதூக்காதிருப்பதற்கு முஸ்லிம் எம்.பி.க்கள் ஒன்றுபட்டு செயற்படுகின்றனர்.
Reviewed by Madawala News
on
February 13, 2020
Rating: