"இந்தியாவின் பாதுகாப்பு இலங்கை தமிழர்களை பாதுகாப்பதில்
தங்கியுள்ளது": இஸ்ரேல் பாணியில் ஆக்கிரமிக்கப்படும் எமது பூர்வீக நிலங்கள்
இலங்கையில் எந்தளவுக்கு தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்றார்களோ, எந்தளவுக்கு அவர்களின் பூர்வீகமான வடக்கு கிழக்கு தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றதோ அந்தளவுக்கு அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை மறந்து போகக்கூடாது என்று வடமாகாண முன்னாள் முதலமைச்சரும், தமிழ் மக்கள் கூட்டணியின் செயலாளர் நாயகமுமான நீதியரசர் சி.வி.விக்னேஸ்வரன் கூறினார்.
இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாப்பதில் தங்கியுள்ளது. இதனை இந்தியக் கொள்கை வகுப்பாளர்கள் புரிந்து கொள்ள வேண்டும் என்றும் அவர் கேட்டுக்கொண்டார்.
சர்வதேச சமூகம் வெளிப்பார்வையில் கண்டுகொள்ள முடியாத நுட்பமான வழிமுறைகளைக் கையாண்டு எமது வாழ்வியல், பொருளாதார,பண்பாட்டு அடையாளங்களை சிதைத்து வருவதுடன் தமிழ் மக்களின் வளங்களும் ஆக்கிரமிக்கப்படுகின்றன என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
உலகத் தமிழ் வம்சாவளி அமைப்பின் ஏற்பாட்டில் சென்னை கலைவாணர் அரங்கத்தில் நேற்று ஆரம்பமான ஆறாம் ஆண்டு உலகத் தமிழர்திருநாள் விழா மற்றும் உலகத் தமிழ் வம்சாவளி ஒன்றுகூடல் ஆகிய நிகழ்வுகளில் சிறப்பு அதிதியாக கலந்து கொண்டு உரையாற்றுகையிலேயே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில்,
இலங்கையின் ஆதிக்குடிகள் தமிழரே. அதில் எந்தவித மயக்கமும் இருக்கத் தேவையில்லை. சிங்களமொழி கி.பி.6ஆம் 7ஆம் நூற்றாண்டுகளில் தான் வழக்கிற்கு வந்தது. அதற்குமுன்னர் சிங்களமொழி பேசுபவர்கள் இருக்கவில்லை. அப்படியிருக்க சிங்கள அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் கடந்த 100 தவறான ஒரு கருத்தை வெளிப்படுத்தி வந்துள்ளனர்.
அண்மைய ஆதிகால சாட்சியங்களின் படி புத்தர் காலத்திற்கு முன்னதாகவே தமிழரின் நாகரிகம் இலங்கையில் பரவி இருந்ததற்கான ஆதாரங்கள் உள்ளன.
இவ்வாறான ஒரு பின்னணியில் இலங்கையானது சிங்கள பௌத்த மக்களின் நாடு என்றும், வழங்கத் தேவையில்லை என்ற கருத்தையும் இலங்கை சுதந்திரம் அடைந்த காலந்தொடக்கம் அப்பாவி சிங்களமக்கள் மனதில் சிங்கள அரசியல்வாதிகளும் புத்திஜீவிகளும் விதைத்து வந்துள்ளனர்.
இதனை மனதில் ஏற்றுள்ள தற்போதைய ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்~ இலங்கை ஒரு சிங்கள பௌத்த நாடு என்று கூறுவதில் உறுதியாகவுள்ளார். ஒருவேளை விரைவில் வரப்போகும் பாராளுமன்றத் தேர்தலில் பெரும்பான்மை சிங்கள மக்களின் வாக்குகளைப் பெற அவர் அவ்வாறு கூறி வருகின்றாரோ தெரியவில்லை.
இலங்கையில் தமிழ்ப் பேசும் இனம் இன்று மிக மோசமான ஒரு சூழலை எதிர் கொண்டுள்ளது. முள்ளிவாய்க்கால் படுகொலைகளை நிகழ்த்திய அகந்தையோடு சிங்கள பௌத்த விரிவாக்கமானது முன்னெப்போதும் இல்லாதளவில் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
சர்வதேச சமூகம் வெளிப்பார்வையில் கண்டுகொள்ள முடியாத நுட்பமான வழிமுறைகளைக் கையாண்டு எமது வாழ்வியல், பொருளாதார, பண்பாட்டு அடையாளங்களை சிதைத்து வருவதுடன், தமிழ் மக்களின் வளங்களையும் அரசு ஆக்கிரமிப்பு செய்து வருகின்றது.
இந்நிலையில் ஐக்கிய நாடுகள் மனிதவுரிமைச் சபை, தமிழ் மக்களை திருப்திப்படுத்தாத தீர்மானங்களை தமிழ் மக்களின் பலமான எதிர்ப்பின் மத்தியிலும் முன்வைத்து அதனை நடைமுறைப்படுத்தக் கோரி இலங்கை அரசாங்கத்திற்கு இரண்டு தடவைகளாக நான்காண்டு கால அவகாசத்தை வழங்கியிருந்தது.
அதனைக்கூட கிஞ்சித்தும் மதிக்காத இலங்கை அரசு மாறாக சர்வதேச சமூகத்திற்கே சவால் விடும் வகையில் போர்க் குற்றவாளிகளையே மிக உயர் பதவிகளுக்கு நியமித்து வருகின்றது.
முள்ளிவாய்க்கால் இறுதி யுத்தத்தின் போது இடம்பெற்றதாகக் கூறப்படும் போர்க்குற்றங்கள் மற்றும் மனித குலத்துக்கு எதிரான குற்றங்களுக்குப் பொறுப்பானவர்கள் என பெயர் குறிப்பிடப்பட்டு ஆதாரங்களோடு இலங்கை இராணுவத்தினர் சர்வதேச நிறுவனங்களினால் குற்றச்சாட்டுகளுக்கு உட்பட்டிருக்கின்றனர்.
இருந்தபோதும் இன்றுவரையில் ஒருவர் கூட கைது செய்யப்படவோ, விசாரணை செய்யப்படவோ இல்லை என்பதிலிருந்து இலங்கையின் உள்நாட்டுப் பொறிமுறை மீது நாம் நம்பிக்கை கொள்ள முடியாது என்பது தெளிவாகிறது. இந்நிலையில் தான் எமக்கு எதிராக இழைக்கப்பட்ட இனப்படுகொலைக்கு சர்வதேச நீதி விசாரணையை கோரி நிற்கின்றோம்.
இலங்கைத் தீவில் தமிழ் மக்கள் இரண்டாந்தரப் பிரஜைகளாக நடத்தப்படுகிறார்கள் என்பதற்கு போர் முடிந்து பத்தாண்டுகள் கடந்தும் தமிழ் அரசியல் கைதிகள் தமது விடுதலைக்காக காத்திருப்பது வெளிப்படையான எடுத்துக்காட்டாகும். பயங்கரவாத தடைச்சட்டம் அமுலில் உள்ளவரையில் அவர்களின் விடுதலை கேள்விக்குறியான விடயமாகின்றது.
மேலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டம் ஆயிரம் நாட்களைக் கடந்து விட்டது. வட்டுவாகல் மற்றும் ஓமந்தைச் சோதனைச் சாவடிகளில் தமது உறவுகளை இராணுவத்திடம் கையளித்த பெற்றோரும், வாழ்க்கைத் துணைகளும், சகோதரர்களும், உறவினர்களும் இன்றும் கண்கண்ட சாட்சிகளாக இருக்கின்றார்கள்.
அவர்களுடைய சாட்சியங்களின் அடிப்படையில் உண்மைகளைக் கண்டறிந்து இப்பிரச்சினைக்கு நீதியான தீர்வினை வழங்குவதற்கு மறுத்து வருகின்ற இலங்கை அரசாங்கம் தற்போது காணாமல் போனோர் அலுவலகங்களைத் திறந்து பாதிக்கப்பட்ட மக்களையும் சர்வதேச சமூகத்தினையும் தொடர்ந்தும் ஏமாற்றி வருகின்றது.
வட–கிழக்கு தமிழர் தாயகப் பகுதிகளிலே தொடர்ந்தும் மேற்கொள்ளப்படுகின்ற சிங்களக் குடியேற்றங்கள் மற்றும் பௌத்த மயமாக்கல் செயற்பாடுகளுக்கு பூரண அனுசரணையையும், பாதுகாப்பையும் வழங்குவதினூடாக இலங்கை இராணுவம் தமிழர்களின் இருப்பினை மலினப்படுத்துகின்றது.
தமிழ் மக்களுக்கான அரசியற் தீர்வு விடயத்தில் தமிழ் மக்களுக்கான பாதுகாப்பு என்பது அவர்களை சுயநிர்ணய உரிமையுடன் கூடிய ஓர் தேசிய இனமாக அங்கீகரிக்கப்பட்ட அடிப்படையில் அமைந்தாலே ஒழிய எமது பாதுகாப்புக்கு இடமில்லை என்பதை தொடர்ச்சியான வரலாறும் தொடரும் நிலைமைகளும் மீண்டும் மீண்டும் இடித்துரைத்து நிற்கின்றன.
அந்த வகையில், இலங்கையில் தமிழ் மக்களுக்கான எந்தத் தீர்வுத் திட்ட முயற்சியும் பிரிக்கப்பட முடியாத வடக்கு கிழக்கு தாயகத்தில் தமிழ்த் தேசத்தை உறுதிப்படுத்துவது, அதனுடைய இறைமை அங்கீகரிக்கப்படுவது, சுயநிர்ணய உரிமை அடிப்படையிலான சமஷ்டித் தீர்வை அமைப்பது போன்ற விதத்திலேயே அமைய வேண்டும்.
தமிழர் தாயகத்தில் தற்போது நடைபெறும் நிகழ்வுகளைப் பார்த்தால் எதிர்காலத்தில் இலங்கைத் தீவில் தமிழர்கள் வாழ்ந்தார்கள் என்பதற்கான தடயங்களை தேடவேண்டிய நிலையே ஏற்படப்போகின்றது என்று எண்ண வேண்டியுள்ளது.
ஒற்றையாட்சிக்குள் ஏற்படுத்தப்படும் எந்தத் தீர்வும் தீர்வாகாது என்பதற்கு இந்தியாவினால் கொண்டுவரப்பட்ட 13ஆவது திருத்தச்சட்டமே சான்றாக அமைந்திருக்கின்றது.
இலங்கை ஆட்சியாளர்கள் அன்று இந்தியாவைத் தீர்வு என்ற மாயைக்குள் சிக்கவைத்து இந்தியாவையும் எமது இளைஞர்களையும் மோதவைத்து பல கசப்பான சம்பவங்களை ஏற்படுத்தினர்.
பின்னர் மிகவும் தந்திரமாக 13ஆவது திருத்தத்தில் உள்ள மிகமுக்கிய சரத்துக்களையும் நீக்கிவிட்டு இன்று அதனை முற்று முழுதாக குப்பைக்குள் எறிவதற்கு தயாராகிவருகின்றனர்.
இலங்கையில் எந்தளவுக்கு தமிழ் மக்கள் ஒடுக்கப்படுகின்றார்களோ, எந்தளவுக்கு அவர்களின் பூர்வீக வடக்கு-கிழக்கு தாயகம் ஆக்கிரமிக்கப்படுகின்றதோ அந்தளவுக்கு அது இந்தியாவின் பாதுகாப்புக்கு ஆபத்தானது என்பதை மறந்து விடாதீர்கள்.
இந்தியாவின் பாதுகாப்பு இலங்கையில் தமிழ் மக்களைப் பாதுகாப்பதில் தங்கியுள்ளது. இதனை இந்திய கொள்கைவகுப்பாளர்கள் புரிந்துகொள்ளவேண்டும். எமது நாட்டின் சிங்களத் தலைவர்களிடையே இந்தியா மீது பற்றோ பரிவோ இல்லை என்பதை நீங்கள் தயவுசெய்து புரிந்துகொள்ளுங்கள்.
இலங்கையில் தமிழ் மக்கள் எந்தளவுக்கு உச்ச அதிகாரத்துடன் இருக்கின்றார்களோ அந்தளவுக்கு இந்தியாவின் தென்கோடி பாதுகாப்பாக இருக்கும். எமக்கு கிடைக்கக்கூடிய உச்ச அதிகாரங்கள் எந்தவிதத்திலும் இந்தியாவின் மாநில சுயாட்சிக்கு அச்சுறுத்தலாக அமையாது.
பெரும்பான்மை சிங்கள மக்களின் விருப்பத்துக்கு மாறாக தமிழ் மக்களுக்கு எதனையும் வழங்கிவிடமுடியாது என்று இலங்கையின் ஜனாதிபதியே கூறிவிட்டார். மகாவம்ச சிந்தனையின் கீழ் அரச நிறுவனங்கள் கட்டியெழுப்பப்பட்டு எமக்கு எதிரான இன அழிப்பு அங்கே நிறுவனமயப்படுத்தப்பட்டுள்ளது. நீதித்துறையின் சுயாதிபத்தியம் இதன் மூலம் கட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இஸ்ரேலிய பாணியில் எமது பூர்வீக நிலங்கள் அபகரிக்கப்பட்டு சிங்கள குடியேற்றங்களுக்கு உட்படுத்தப்பட்டுவருகின்றன. இதனை தடுத்து நிறுத்த மத்திய அரசின் கவனத்திற்கு கொண்டு செல்வதற்காக மாநில பேதமின்றி தென்னிந்திய தரப்புக்கள் அனைத்தும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டும் என்றார்.