ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாசவிற்கு தாம் ஆதரவு
தெரிவிக்கத் தொடங்கியதை அடுத்து ஸஹ்ரான் போன்றவர்களுடன் இல்லாத தொடர்புகளையெல்லாம் உருவாக்கி தமது அரசியல் எதிர்காலத்தை சிதைப்பதற்கு சிலர் சூழ்ச்சிகளைச் செய்து வருவதாக, அமைச்சர் ரஊப் ஹகீம் தெரிவித்துள்ளார்.
இன்று (22) மல்வத்து மகாநாயக்க தேரரை சந்தித்த ஸ்ரீ.ல.மு.கா. தலைவரும் அமைச்சருமான ரஊப் ஹகீம், இவ்வாறு தெரிவித்ததோடு, அது தொடாபாக விசேட அறிக்கை ஒன்றை நாளை (23) பாராளுமன்றில் வெளியிடவுள்ளதாகவும் தெரிவித்தார்.
கண்டிக்கு விஜயம் செய்த அமைச்சர் ரவூப் ஹகீம், இன்று (22) பிற்பகல் மல்வத்து மகாநாயக்க தேரர் வணக்கத்திற்குரிய திப்பட்டுவாவே ஸ்ரீ சித்தார்த்த சுமங்கள தேரரை சந்தித்தார்.
இதன்போது, தமக்கெதிராக சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாக தெரிவித்ததோடு, அது தொடர்பில் அவரை தெளிவுபடுத்தினார்.
தனக்கும் சஹ்ரான் மற்றும் அவரது குழுவினருக்குமிடையே எத்தகைய தொடர்பும் இருக்கவில்லை. 2015ஆம் ஆண்டு தேர்தலின் பின் காத்ததான்குடி பிரதேசத்தில் தமது கட்சி ஆதரவாளர்களுக்கு ஏற்பட்ட தாக்குதல் விடயங்கள் தொடர்பாக கேட்டறிந்து கொள்ள அங்கு சென்ற வேளையில் எடுக்கப்பட்ட வீடியோக்களை வைத்து, தமக்கெதிராக தவறான கருத்துக்களை, ஒரு குழுவினர் அரசியல் சூழ்ச்சியில் ஈடுபட்டுள்ளதாகத் தெரிவித்தார்.
வைத்தியசாலைக்கு காயமடைந்தவரைப் பார்க்கச் சென்ற வேளையிலும் அங்கு இந்நபரும் இருந்துள்ளதாகவும் அந்நபர் பற்றி தான் ஏதும் அறிந்திருக்கவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.
உயிர்த்தஞாயிறு தாக்குதல் தொடர்பான அறிக்கை நாளை பாராளுமன்றில் வெளியிடப்பட உள்ளதாக தெரிவித்த அவர், அப்போது இதுவரை பொதுமக்கள் அறிந்திராத பல உண்மைகள் வெளிவரும் என்றும் அவர் கூறினார்.
தமது 25 வருட அரசியல் வாழ்வில் எப்போதும் பயங்கரவாத்ததை எதிர்த்தே வந்துள்ளதாகவும் இவ்வாறான கீழ்த்தரமான சூழ்ச்சியை மேற்கொண்டவர்களது நோக்கம் ஒருபோதும் நிறைவேறாது என்றும் அவர் இதன்போது சுட்டிக்காட்டினார்.
ஏப்ரல் 21 தாக்குதல் தொடர்பான பாராளுமன்ற தெரிவுக்குழுவின் அறிக்கை நாளை புதன்கிழமை கையளிக்கப்படவுள்ளது. இதன்பின்னர் ஊடகவியலாளர் மாநாடொன்றும் நடைபெறுவதற்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இதன்போது என்மீது கேள்வியெழுப்பப்பட்டால், முன்வைக்கப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் தொடர்பில் பல ஆதாரங்களை அம்பலப்படுத்துவதற்கும் தயாராகவுள்ளேன்.
எனது நற்பெயருக்கு களங்கம் ஏற்படுத்துவதுடன், நான் பிரசாரம் செய்கின்ற வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை தடுப்பதற்குமான குழிபறிப்பு முயற்சியாகவே இதனைப் பார்க்கிறேன். இப்படியான சதித்திட்டங்களை முறியடித்து எமது வேட்பாளர் வெற்றிபெறுவார். மக்கள் அவரின் பக்கமே நிற்கின்றனர் என்றார்.
(எம்.ஏ. அமீனுல்லா)