ஆனால் கோத்தபாய ராஜபக்ச எனது தந்தை கொலை செய்யப்பட்டமைக்கு மன்னிப்பு கோருவாரா என படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் லசந்த விக்ரமதுங்கவின் மகள் அகிம்சா பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கேள்வி எழுப்பியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிற்கும் ஐக்கிய தேசிய கட்சிக்கும் அனுப்பியுள்ள கடிதத்திலேயே அகிம்சா விக்ரமதுங்க மேற்கண்டவாறு கேள்வி எழுப்பியுள்ளார்.
குறித்த கடிதத்தில்,
நீங்கள் உங்கள் அரசியல் உரையில் எனது தந்தையும் உங்களது நெருங்கிய நண்பருமான லசந்த விக்ரமதுங்க குறித்து சுட்டிக்காட்டியிருந்தீர்கள்.
ஜனாதிபதியானதும் அச்சமற்ற சூழலை ஏற்படுத்துவேன் என கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளமைக்கு பதிலளிக்கையிலேயே நீங்கள் எனது தந்தை குறித்து குறிப்பிட்டிருந்தீர்கள்,
எனது தந்தையினது கொலைக்காகவும் ஏனைய ஈவிரக்கமற்ற கொலைகளிற்காகவும் கோத்தபாய ராஜபக்ச மன்னிப்பு கோருவாரா என அப்போது கேட்டிருந்தீர்கள்.
கோத்தபாய ராஜபக்ச எனது தந்தையின் கொலைக்கு ஒருபோதும் மன்னிப்பு கோரமாட்டார்.. கடந்த பத்து வருடங்களாக தொலைக்காட்சி பேட்டிகளில் எனது தந்தையின் கொலை குறித்து தான் மகிழ்ச்சியடைவதை கோத்தபாய ராஜபக்ச பகிரங்கமாகவே தெரிவித்துள்ளார்.
கோத்தபாய ராஜபக்ச எனது தந்தையின் கொலைக்காக மன்னிப்பு கோரப்போவதில்லை என தீர்மானித்துவிட்டார்.
ஆனால் பிரதமர் ரணில்விக்ரமசிங்க இன்று தான் கொலையாளி என வர்ணிக்கும் அந்த நபரை கடந்த நான்கு வருடங்களாக பாதுகாத்து நன்கு கவனித்து வந்துள்ளார். அதற்காக ரணில் விக்ரமசிங்க மன்னிப்பு கோருவாரா?
எனது தந்தை இறந்த நாள் முதல் அவரது பெயரை நீங்கள் வாக்கு பெறுவதற்காக பயன்படுத்தியுள்ளீர்கள்.
எனது தந்தையின் படுகொலை குறித்து விசாரணைகள் இடம்பெறும் என பிரச்சாரம் செய்தே நீங்கள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவையும் ஐக்கிய தேசிய கட்சியையும் ஆட்சியில் அமர்த்தினீர்கள்.
ஆனால் ஆட்சிக்கு வந்ததும் உங்கள் முன்னுரிமைகள் மாறிவிட்டன, 2015 இல் அலரிமாளிகையில் எனது தந்தையின் படுகொலைக்கு காரணமானவர்களை நீதியின் முன் நிறுத்தவேண்டும் என கோருவதற்காக உங்களை நான் சந்தித்தவேளை நீங்கள் வேறு முன்னுரிமைக்குரிய விடயங்கள் உள்ளன, நீதி என்பது லசந்தவுடன் மாத்திரம் தொடர்புடையது இல்லை என நீங்கள் தெரிவித்தீர்கள்.
நீங்கள் அவரை படுகொலையாளி என கூறும் அதேவேளை உங்கள் குடும்பத்தவர்களும் உங்கள் சிரேஸ்ட அதிகாரிகளும் கோத்தபாய ராஜபக்சவுடன் நட்பை தொடர்ந்தும் பேணி வருகின்றனர்.
நீங்கள் ஜனாதிபதியாக அல்லது பிரதமராக வந்தாலும் இதுவரை காலமும் கோத்தபாய ராஜபக்சவிற்கு சட்டத்தின் பிடியிலிருந்து விலக்களிக்கப்பட்ட நிலை தடையின்றி தொடரும் என நிச்சயமாக நம்புகின்றேன்.
எனது தந்தையின் மரணம் குறித்து பெருமிதத்துடன் தம்பட்டம் அடித்த நபர் உத்தியோகபூர்வமாக ஜனாதிபதி வேட்பாளர் ஆகியுள்ள நிலையில் துணிச்சலான நேர்மையான அரசியல்வாதியொருவரே அவரை எதிர்க்கவேண்டும் என எதிர்பார்க்கின்றேன் என குறிப்பிடப்பட்டுள்ளது.
ரணில் விக்கிரமசிங்கவுக்கு லசந்த விக்ரமதுங்க மகளின் காரசாரமான கடிதம்..
Reviewed by Madawala News
on
August 13, 2019
Rating: