தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.
(எஸ்.அஷ்ரப்கான்)
தமிழ் மக்கள் பெரும்பான்மையாக வாழ்கின்ற வட மாகாணத்தை தமிழீழம் என்று பெயரிட்டு அம்மக்களுக்கு
அரசாங்கம் வழங்க வேண்டும் என்று கிழக்கு தேசம் விடுதலை இயக்கத்தின் செயலாளர் நாயகம் வஃபா பாருக் தெரிவித்தார்.
இவரின் சாய்ந்தமருது இல்லத்தில் நேற்று வெள்ளிக்கிழமை காலை ஊடகவியலாளர்களை சந்தித்து பிரிக்கப்படாத இலங்கைக்குள் இன பிரச்சினைக்கான நிரந்தர தீர்வு குறித்து பேசியபோதே இவர் இவ்வாறு தெரிவித்தார்.
இவர் இங்கு மேலும் பேசியவை வருமாறு:-
ஈழம் என்பது இலங்கையின் பெயர்களில் ஒன்றாகும். தமிழ் மக்களின் இன உணர்வோடு பின்னி பிணைந்த பெயராக தமிழீழம் உள்ளது. பிரிவினை இல்லாத இலங்கையில் தமிழீழம் என்கிற பெயருடன் உச்ச பட்ச அதிகாரங்களுடன் கூடிய அலகாக வட மாகாணத்தை தமிழ் மக்களுக்கு வழங்க வேண்டும். இந்த தமிழீழத்தின் தேசிய கொடியாக புலி கொடியை அம்மக்கள் பயன்படுத்துவதையோ, விடுதலை புலிகளின் தலைவர் பிரபாகரனுக்கு அம்மக்கள் சிலை எடுத்து கொண்டாடுவதையோகூட அனுமதிப்பதில் எந்த தவறும் கிடையாது என்பதுடன் அவற்றுக்கு தடையிட வேண்டிய அவசியமும் இருக்காது.
அதே போல முஸ்லிம்களை பெரும்பான்மையாக கொண்ட கிழக்கு மாகாணத்தை கிழக்கு தேசம் என்கிற பெயருடன் தர வேண்டும். மலையகம் என்கிற அலகை இந்திய வம்சாவளியினருக்கு கொடுக்க வேண்டும்.அதாவது பொலிஸ், காணி அதிகாரங்களுடன் மாகாண அலகுகள் வழங்கப்பட வேண்டும் என்பதோடு முஸ்லிம்கள், இந்திய வம்சாவளி மக்கள் ஆகியோருக்கு குறைந்த பட்சம் ஒவ்வொரு அலகாவது உறுதிப்படுத்தப்பட வேண்டும். இவை அரசியல் அமைப்பில் உறுதிப்படுத்தப்படவும் வேண்டும். குறிப்பாக முஸ்லிம்களின் இருப்பு, பாதுகாப்பு, அரசியல் பிரதிநிதித்துவம் ஆகியவற்றை உத்தரவாதப்படுத்தும் ஏற்பாடுகள் அரசியல் அமைப்பில் உள்வாங்கப்பட வேண்டும்.
இலங்கையின் இறைமை, ஆட்புல எல்லைகள், அரசியல் அமைப்பு, தனிமனித சுய நிர்ணயம் ஆகியவற்றை ஏற்று கொண்ட சக வாழ்வு இன்றைய பிரிவானைவாதம் அற்ற சூழலில் கட்டி எழுப்பப்பட்டு அனைத்து மக்களினதும் உரிமைகளும் பாதுகாக்கப்பட்டு மேம்படுத்தப்பட வேண்டும் என்பதே எமது நிலைப்பாடு ஆகும். பல்லின, பல்வித மக்களை கொண்ட இலங்கையில் காலத்துக்கு காலம் பகிர்ந்தளிக்கப்படும் வாய்ப்புகள், வளங்கள், அதிகாரங்கள் ஆகியவற்றில் ஒவ்வொரு சமூகமும் அதற்கு உரித்தான பங்கை பெற்று கொள்ள வேண்டும் என்பது எமது அபிலாஷை ஆகும்.
தமிழ் மக்கள் அதிகம் வாழ்கின்ற வட மாகாணத்தை அரசாங்கம் 'தமிழீழம்' என்று பெயரிட்டு அம் மக்களுக்கு வழங்குதல் வேண்டும்.
Reviewed by Madawala News
on
April 19, 2019
Rating: