உற்சவ காலங்களில் முஸ்லிம் கடைகளைப் பகிஷ்கரிக்கக் கோருவதில் உள்நோக்கமுள்ளது.
இதேநிலைமை தேர்தல் காலங்களிலும் ஏற்படலாம் என களனிபல்கலைக்கழக வரலாற்றுத்துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கல்கந்தே தம்மானந்த தேரர் தெரிவித்தார்.
களனிபல்கலைக்கழக இஸ்லாமிய மாணவர் அமைப்பின் USWA சஞ்சிகை வெளியீட்டு நிகழ்வு கடந்த செவ்வாயன்று அமைப்பின் தலைவர் ருக்ஸான் நிஸார் தலைமையில் பல்கலைக்கழக சமூக விஞ்ஞான பீட கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் பிரதம பேச்சாளராக கலந்துகொண்டு பேசுகையிலே இதனைத்தெரிவித்தார்.
தொடர்ந்து பேசிய அவர் கூறியதாவது, பொருட்கள் கூடுதலாக விற்கப்படும் காலங்களிலே இவ்வாறான பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுகின்றன.
ஒரு நாட்டில் ஒரு சமூகம் ஆயிரம் வருடங்களுக்கு மேல் வாழ்ந்தால் அவர்கள் விருந்தாளிகளாக கருதமுடியாது. அவர்கள் நாட்டு பிரஜைகளே அவர்களை மேலும் வெளிநாட்டவர்களாக கருத முடியாது. ஒரு நாட்டில் நல்லிணக்கத்தை அரசோ வெளிநாட்டு தூதுவராலயங்களோ ஏற்படுத்த முடியாது மக்களாகிய நாமே ஏற்படுத்த வேண்டும் என்றார்.
இங்கு உரையாற்றிய முஸ்லிம் மீடியா போரத்தின் தலைவரும் களனி பல்கலைக்கழகத்தின் பழைய மாணவருமான என்.எம். அமீன் உரையாற்றுகையில்,
நாட்டின் எதிர்காலத் தலைவர்களாகவுள்ள பட்டதாரி மாணவர்களால் வெளியிடப்படும் சஞ்சிகைகள் முஸ்லிம் சமூகத்தின் துன்பியல்களை ஆய்வு நடாத்தி வெளியிடும் கட்டுரைகளைத் தாங்கி வருவதாக இருக்க வேண்டும்,
பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸ்களினால் வெளியிடப்படும் சஞ்சிகைகள், ஆய்வுக்கட்டுரைகள் உள்ளடக்கியதாக அமைதல் வேண்டும். அதன்மூலம் ஆய்வுக்குட்படுத்தப்படும் விடயங்களைச் சமூகத்தின் அவதானத்துக்கு கொண்டு வரமுடியும்.
காலத்துக்குரிய பிரச்சினைகளை ஆய்வுசெய்து அதுபற்றி பகிரங்கப்படுத்துவதற்கு இச்சஞ்சிகைகளைப் பயன்படுத்த வேண்டும்.
1974இல் இந்த முஸ்லிம் மஜ்லிஸை ஆரம்பித்த போது, முதலாவது சஞ்சிகையில் இலங்கை முஸ்லிம்களது வரலாற்றினை ஆவணப்படுத்தி வெளியிடுவதனை வலியுறுத்தி அட்டைப்படம் மற்றும் ஆக்கங்களை நாம் வெளியிட்டோம். பல்கலைக்கழக முஸ்லிம் மஜ்லிஸுகள் வெளியிடும் சஞ்சிகைகள், பாடசாலைகளில் வெளியிடும் சஞ்சிகைகள் போலன்றி கருத்தாழம்மிக்கதாக அமைதல் வேண்டும்.
நீங்கள் களனியில் இருக்கின்றீர்கள். உங்களுக்கு அண்மித்த கொழும்பு மாநகரில் மாளிகாவத்தை, வாழைத்தோட்டம், புதுக்கடை, மட்டக்குளி, கிரான்ட்பாஸ் போன்ற பகுதிகளில் முஸ்லிம்கள் எதிர்நோக்கும் அவலநிலை பற்றி ஆய்வுகளை நடாத்தி அவற்றை வெளியிட முன்வரவேண்டும்.
பல்கலைக்கழகங்களில் படிக்கும் போது மாற்று மத மாணவர்களுடன் நெருங்கிய தொடர்புகளை ஏற்படுத்திக் கொள்வது அவசியம். 1974இல் நாம் இப்பல்கலைக்கழகத்துக்கு வந்த போது தமிழ்மொழி மாணவர்களுக்கு அடிப்படை வசதிகள் இருக்கவில்லை. அப்போது எமக்கு நீதி கோரி பிக்கு மாணவர்களும் சிங்கள மாணவர்களும் போராட்டம் நடத்தியது எனது நினைவில் இன்னும் பதிந்துள்ளது.
பல்கலைக்கழகங்களில் படிக்கும் நீங்கள், எதிர்காலங்களில் சமுதாயத்துக்கு அரசியல், நிர்வாகம் மற்றும் துறைகளின் தலைவர்களாக வரவுள்ளீர்கள். எனவே இங்குபெறும் பயிற்சி எதிர்காலத்துக்கு முக்கியமானது என்றார்.
பல்கலைக்கழக உபவேந்தர் சார்பில் பல்கலைக்கழக சிரேஷ்ட நிர்வாகி ஐ.எம். இப்றாஹிம் மற்றும் ஸ்ரீலங்கா முஸ்லிம் மீடியா போரத்தின் பொதுச்செயலாளர் சாதிக் சிஹான் ஆகியோரும் கலந்து கொண்டனர்.
நன்றி - Vidivelli
புத்தாண்டு காலங்களில் முஸ்லிம் கடைகளைப் பகிஷ்கரிக்கக் கோருவதில் உள்நோக்கம்.
Reviewed by Madawala News
on
April 12, 2019
Rating: