ஆர்.யசி, எம்.ஆர்.எம்.வஸீம்
ஏற்பட்ட அசம்பாவிதத்துக்கான பொறுப்பை அரசாங்கம் ஏற்றுக்கொண்டு
கட்சி அரசியலை விட்டு குறுகிய காலத்துக்கேனும் தேசிய நிகழ்ச்சி நிரலுக்கேற்றவகையில் செயற்பட அனைவரும் முன்வரவேண்டும். அத்துடன் இஸ்லாமிய ராஜ்ஜியம் ஒன்றை ஏற்படுத்துவதே தாக்குதல் தாரர்களின் நோக்கமாகும் என மக்கள் விடுதலை முன்னணி உறுப்பினர் விஜித்த ஹேரத் தெரிவித்தார்.
பாராளுமன்றத்தில் இன்று இடம்பெற்ற அவசரகால சட்ட ஒழுங்குவிதிகள் மீதான விவாதத்தில் கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே இவ்வாறு குறிப்பிட்டார்.
அவர் அங்கு தொடர்ந்து தெரிவிக்கையில்,
நாட்டின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான தகவல் கிடைக்கும்போது அதுதொடர்பில் தீர்மானம் எடுக்கும் அதிகாரம் பாதுகாப்பு அமைச்சர், செயலாளருக்கே இருக்கின்றது. பொதுவாக அரசாங்கத்துக்கு இருக்கின்றது. இவ்வாறான அச்சுறுத்தல் இருப்பதாக புலனாய்வு துறையின் தகவல் கிடைத்தும் தாக்குதலை தடுக்க முடியாமல் போனது தொடர்பில் அரசாங்கம் மக்கள் முன்னிலையில் ஏற்றுக்கொள்ளவேண்டும்.
மேலும் இடம்பெற்ற விடயங்களின் மூலம் நாங்கள் கற்றுக்கொள்வதாக இருந்தால் ஆரம்பமாக இடம்பெற்ற தவறை ஏற்றுக்கொள்ளவேண்டும். அவ்வாறு இல்லாமல் இதனை ஆளுக்கு ஆள் குற்றம் சுமத்துவதன் மூலம் பொறுப்பில் இருந்து விலகமுடியாது. ஆரம்பமாக இதற்கான பொறுப்பை ஏற்றுக்கொண்டு, நாட்டின் தேசிய நிகழ்ச்சி நிரலுக்கு ஏற்றவகையில் அனைத்து கட்சிகளும் இணைந்து செயற்பட முன்வரவேண்டும். அதற்கு மக்கள் விடுதலை முன்னணி தயாராக இருக்கின்றது.
அத்துடன் நாட்டின் தற்போதைய சமாதான சூழ்நிலையில் இவ்வாறான பாரிய தாக்குதல் ஒன்று இடம்பெறுவதற்கு வாய்ப்பு இல்லை என்ற நம்பிக்கையில் செயற்பட்டதன் காரணமாகவே இந்த நிலை ஏற்பட்டது. என்றாலும் இந்த நிலைமையை அடிப்படையாகக்கொண்டு சிலர் அரசியல் செய்ய முயற்சிக்கின்றனர். இதற்கு இடமளிக்க கூடாது.என்றார்.
இஸ்லாமிய ராஜ்ஜியம் ஒன்றை ஏற்படுத்துவதே தாக்குதல் தாரர்களின் நோக்கம் ; JVP
Reviewed by Madawala News
on
April 24, 2019
Rating: