கொழும்பு கிறேன்ட்பாஸ் வீதியிலுள்ள சுலைமான் மருத்துவமனை இயங்கி வந்த காணி , முஸ்லிம்
சமூகத்தின் கல்வி நலன்களுக்காக அன்றைய முஸ்லிம் தலைவர்களால் நம்பிக்கை பொறுப்பாக, அமானிதமாக வழங்கப்பட்ட பெறுமதிமிக்க ஒரு சொத்தாகும்.
சமூகத்தின் கல்வி நலன்களுக்காக அன்றைய முஸ்லிம் தலைவர்களால் நம்பிக்கை பொறுப்பாக, அமானிதமாக வழங்கப்பட்ட பெறுமதிமிக்க ஒரு சொத்தாகும்.
முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான பலகோடி ரூபாய்கள் பெறுமதிவாய்ந்த எமது முதாதையர்களால் வழங்கப்பட்ட இந்த சொத்து யாருக்கும் தெரியாமல் பிரபல ஆடை நிறுவனம் ஒன்றுக்கு கைமாறியிருக்கும் அதிர்ச்சித் தகவல் இப்போது வெளிச்சத்திற்கு வந்திருக்கிறது.
கடந்த காலங்களில் கொழும்பு 14 கிறேன்பாஸ் வீதியில் உள்ள குறித்த காணியில்தான் சுலைமான் தனியார் மருத்துவமனை பல வருட காலமாக இயங்கிவந்தது.
சுலைமான் மருத்துவமனை இலங்கையிலுள்ள தனியார் மருத்துவமனைகளில் மிகவும் பழமைவாய்ந்த ஒன்றாகும். இந்த மருத்துவமனை அண்மையில் தனது வர்த்தக நடவடிக்கைகளை நிறுத்திக் கொண்டதால் மூடப்பட்டது. கடந்த காலங்களில் மாதாந்த வாடகையாக ஒரு சிறிய தொகையே சுலைமான் நிர்வாகத்தினால் மஹரகம கபூரிய்யா அரபுக் கல்லூரிக்கு வழங்கப்பட்டுள்ளதாகவும் அறிய வருகிறது.
சுலைமான் மருத்துவமனை மூடப்பட்டதன் பின்னர் குறித்த காணி நம்பிக்கை பொறுப்பு சொத்து என்று கருத்திற் கொள்ளப்படாமல் பிரபல ஆடை வா்த்தக நிறுவனம் ஒன்றுக்கு கைமாற்றப்பட்டிருக்கிறது.
யாருக்கும் விற்பனை செய்ய முடியாத, கைமாற்ற முடியாத பெறுமதியான இந்த சொத்தின் கைமாறல் தொடர்பாக தகவல்கள் வெளியானதைத் தொடர்ந்து, தற்போது சர்ச்சைகள் எழுந்துள்ளன.
வக்பு மற்றும் நம்பிக்கைப் பொறுப்பு சொத்துக்களை பராமரிக்கும் இலங்கை வக்பு சபைக்குக் கூட இந்த பெறுமதியான சொத்தின் கைமாற்றம் தொடர்பாக எந்த தகவல்களும் வழங்கப்படவில்லை என்றும் அறியவருகிறது.
இந்தக் காணியிலிருந்து கிடைக்கும் வருமானம் முழுவதும் முஸ்லிம் சமூகத்தின் கல்வித் தேவைகளுக்கு பயன்படுத்தப்படவேண்டும் என்பதே இதை சமூகத்திற்கு வழங்கிய எமது முன்னோடி மூதாதையர்களின் இலக்காக இருந்திருக்கிறது.
இந்த காணியின் உறுதிப்பத்திரத்தில் இது தொடா்பாக உறுதியாகவும் தெளிவாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
முஸ்லிம் சமூகத்தின் கல்வித்தேவைகளுக்காக அமானிதமாக முன்னோர்களால் வழங்கப்பட்ட இந்த பெறுமதிமிக்க சொத்து தொடர்பாக சமூகம் விழிப்படையாமல் இருந்திருப்பதையே இந்த நிகழ்வுகள் சுட்டிக்காட்டுகின்றன.
தெளிவான உறுதிப்பத்திரத்துடன் கொழும்பு கிறேன்ட்பாஸ் பகுதியில் இருக்கும் மிகவும் பெறுமதி வாய்ந்த இந்த நம்பிக்கை பொறுப்பு சொத்து , 1918ம் ஆண்டு நில அளவையாளர் எச்.ஜி. டயஸ் என்பவரால் அளவிடப்பட்டுள்ளதாக குறிக்கப்பட்டுள்ளது. 2125 என்ற இலக்கத்தையுடைய காணி உறுதிப்பத்திர தகவல்களின்படி இந்தக் காணியின் பரப்பளவு 2 ஏக்கர் , ஒரு ரூட், 32.5 பேச்சஸ் அளவு கொண்டதாகும்.
1935 ஆண்டு நவம்பர் மாதம் 21ம் திகதி நூா்தீன் ஹாஜியார் அப்துல் கபூர் அவர்களால் இது முஸ்லிம் சமூக கல்வி மேம்பாட்டுக்காக நம்பிக்கை பொறுப்பு சொத்தாக வழங்கப்பட்டுள்ளதாக காணி உறுதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
இதன் நம்பிக்கையாளர்களாக முஸ்லிம் சமூகத்தின் முன்னோடிகள் பலர் அன்று சட்டரீதியாக நியமனம் பெற்றிருந்தனர்.
இவர்களில் நூர்தீன் ஹாஜியார் அப்துல் கபூர், நூர்தீன் ஹாஜியார் அப்துல் கரீம், அப்துல் ஹமீத் மொஹம்மட் இஸ்மாயில் மொஹம்மட் பளீல் அப்துல் கபூர், துவான் பிரஹானுதீன் ஜாயா, மரிக்கார் பாவா மொஹமட் சுலைமான், நூர்தீன் ஹாஜியார் மொஹமட் அப்துல் கபூர், அப்துல் றஹீம் மொஹமட் கவுஸ், அரிசி மரிக்கார் ஹாஜியார் மொஹமட் சரீப், அஸீனா மரிக்கார் ஹாஜியார் ஹமீத் ஆகிய பத்து பேர் தெரிவு செய்யப்பட்டுள்ளதாகவும் குறித்த காணி உறுதிப்பத்திரத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.
நம்பிக்கை பொறுப்பு சொத்தாக எமக்குக் கிடைத்த இந்த காணியிலிருந்து கிடைக்கும் வருமானம் முஸ்லிம் சமூகத்தின் கல்வி வளர்ச்சிக்காக பயன்படுத்தப்பட வேண்டும் என்று கட்டாயமாக குறிக்கப்பட்டு இருந்தும், கடந்த காலங்களில் நாம் அந்த இலக்கை அடைந்தோமா என்பது கேள்விக்குறியாக இருக்கிறது.
ஒரு நல்ல நோக்கத்தில், அமானிதமாக எமது மூதாதையர்களினால் எமக்குக் கிடைக்கப்பெற்ற இந்த சொத்தைப் பாதுகாத்து எதிர்கால சந்ததிகளுக்கு வழங்கும் பொறுப்பு எமக்கிருக்கிறது.
அந்தப் பொறுப்பிலிருந்து விலகி பொடுபோக்காக இருப்பதற்ற்கு யாருக்கும் உரிமையில்லை.
இலங்கை முஸ்லிம் சமூகத்திற்கு சொந்தமான இந்த நம்பிக்கை பொறுப்பு சொத்து தொடர்பான பிரச்சினையில் உலமாக்கள், அரசியல் தலைமைகள், புத்தி ஜீவிகள் தலையிட வேண்டும்.
எமது முன்னோடி தலைவர்களால் நல்லெண்ணத்தோடு வழங்கப்பட்ட இந்த பெறுமதிமிக்க சொத்தை மீட்டெடுத்து, பாதுகாத்து, எமது எதிர்கால சந்ததிகளின் கல்விப் பிரச்சினைக்கு கரம் கொடுக்கும் இடமாக மாற்றுவதற்கு நடவடிக்கையை மேற்கொள்ள அனைவரும் முன்வர வேண்டும்.
அஸீஸ் நிசாருத்தீன் -Colombo Mail Today-
அமானிதமான சொத்து அதிரடியாக கைமாறியது எப்படி?
Reviewed by Madawala News
on
January 22, 2019
Rating: