தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம்;: அரசியல் இலாபம் தேட இது களமல்ல.


குறிப்பு :- கடந்த காலங்களில் 1000 ரூபா குறித்த சம்பளப் போராட்டங்கள்
இடம் பெற்ற போது எழுதப்பட்ட கட்டுரை, சில மாற்றங்களுடன் மீண்டும் பதிவிடப்படுகின்றது.

கடந்த நாட்களில் எந்த செய்திச் சேவையை புரட்டினாலும், முகநூலை உருட்டினாலும் அதிகமாகக் காணக்கிடைக்கும் விடயம் தான்  சம்பள உயர்வினைக் கோரி மலையக மக்கள் ஒவ்வொரு தோட்டங்களிலும் போராட்டங்களில் ஈடுபட்டு வரும் செய்தி. உண்மையில் பல சந்தரப்பங்களில் அடங்கிக் கிடந்த மக்கள் இன்று வாய்திறந்து வீதிக்கு இறங்கியுள்ளமை உண்மையில் மலையகமும் தனது உரிமைக்காக போராடும் குணம் கொண்டது என்பதைக் காட்டுகின்ற ஒரு சந்தர்ப்பமாகவே இதனை நோக்க வேண்டியுள்ளது. இதற்கு முன்பும் இவ்வாறான போராட்டங்கள் இடம்பெற்று ஓய்திருந்தமையையும் நாம் மறந்துவிட முடியாது.



 இம் மக்கள் போராட்டத்தில் இறங்குவதற்கு யார் காரணம்? மக்களின் வாழ்க்கைத் தரத்தை முன்னேற்ற முடியாத வீர வசனத்தின் மன்னர்களும், அறிக்கை அறிஞர்களும் விலைவாசியை கருத்திற் கொண்டாவது மக்களுக்கு சம்பள உயர்வினைப் பெற்றுத் தராது இருக்கின்றார்கள். இது அரசியல் கையாளாகாத தனமா அல்லது நம்ம மக்கள் தானே ஏதேனும் ஒன்றை சொல்லி சமாளித்து விடலாம் என்ற அசமந்த போக்கா என தெரியவில்லை.



இன்று போராட்டத்தில் மக்கள் இறங்கியிருப்பதும், நியாயமான சம்பளத்தைப் பெற்றுத் தருவதில் உள்ள சிக்கல் நிலைக்கும் சந்தையில் காணப்படுகின்ற தேயிலையின் விலை நிலவரம் என்பது யாவரும் அறிந்ததே. இருந்த போதும், போதுமான இலாபத்தை உறிஞ்சிக் கொண்டிருக்கும் கம்பனிகள் அதில் ஒரு பங்கிலாவது தொழிலாளர்களின் நிலைப்பாட்டினைக் கருத்திற் கொண்டு சம்பள அதிகரிப்பு தொடர்பில் கவனத்திற் எடுக்கவேண்டியமை இவ்வளவு காலம் தோட்ட தொழிலளார்களின் உழைப்பில் வயிற்றை நிரப்பிய கூட்டத்தின் கட்டாயமாகும்.
நல்லாட்சி அராசாங்கம் என்ற போர்வைக்குள் குடித்தனம் நடத்திக் கொண்டிருங்கும் இந்த அராசங்கம் ஆட்சி பீடமேறிய சிறிது நாட்களிலேயே இந்த சம்பளப்பிரச்சினை தலைத்தூக்கியிருந்தது, தொழிற்சங்கங்கம் என்ற போர்வையில் அரசியல் பேசிக் கொண்டிருப்பவர்களோ 1000 ரூபா சம்பளத்தை உங்கள் சட்டைப்பைக்குள் திணிப்பேன் என்று வீர வசனம் பேசி வாக்கு வேட்டையில் ஈடுப்பட்ட போதும் இன்று வரை எம்மக்களின் சட்டைப் பை கடனன்றி வேறோன்றில் நிரம்பவில்லை. அக்காலக்கட்டத்தில் சம்பள உயர்வு பேச்சு வார்த்தைகள் தோல்வி கண்டதும், 700ரூபா சம்பள உயர்வு வேலை நாள் குறித்த கட்டுப்பாடுகள் என முதலாளிமார் சம்மேளம் தமக்கு சார்பான விடயங்களை மாத்திரம் கருத்திற் கொண்டிருக்க எமது பேச்சு வீரர்களும் பேச்சுவார்த்தை தோல்வி என்று நெஞ்சை நிமிர்த்தி செய்தியாளர்களுக்கு பேட்டி வழங்கினர். பலமான தொழிற்சங்கம், வரலாறுக்கண்ட தொழிற்சங்கம் என மார்தட்டிக் கொள்வதில் எந்த வித அர்த்தமும் இல்லை என்பதை தொழிற்சங்கத்தினர் இனியாவது உணர்ந்துக் கொள்ள வேண்டும்.


மலையக அரசியல் கட்சிகள் ஒவ்வொன்றும் தம் பங்கிற்கு தாம் மக்களுக்காக இதை செய்தோம் அதை செய்தோம் எனக் காட்டிக் கொள்வதற்கு பல விடயங்களை செய்தாலும் எல்லாம் கண் துடைப்புக்களோ என்று எண்ணத் தோன்றுகின்றது. காரணம் கடந்த காலங்கள் கற்றுத் தந்த பாடங்களில் நாம் கண்டது ஏமாற்றம் எனும் ஒற்றை விடயமே. இன்றும் தமிழ் முற்போக்கு கூட்டணியினர் ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட தரப்பினரோடு சம்பளப்பிரச்சினைகள் குறித்து பேசிக் கொண்டிருக்கின்றனர். இன்னுமொரு தரப்பினர் பாராளுமன்றின் அனைத்து உறுப்பினர்களையும் இணைத்துக் கொண்டு போராட்டம் செய்யப் போவதாக கூறுகின்றனர். எது நடப்பினும் எம்மக்களுக்கு நன்மை பயப்பின் அது வரவேற்க கூடியதே.


 எனினும் மனதுக்குள் எண்ணிப்பார்க்கின்றேன் இது தேர்தல் காலமாக இருந்திருப்பின் இன்று தொழிலாளர்களுடன் வீதியில் இறங்கிப் போராட போட்டிப் போட்டுக் கொண்டு நிற்கும் அரசியல் தலைமைகளின் எண்ணிக்கையை.


கடந்த காலங்களில் இடைக்கால நிவாரணத் தொகை என்று ஒரு தொகை அதிகரிப்பை பல மாதங்கள் முயற்சித்து இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கு மாத்திரம் பெற்றுக் கொடுத்து விட்டு, உடனே தொழிற்சங்கத்தில் இணைவதற்கான விண்ணப்பத்தை வழங்கி அதில் இணைய வைத்து விட்டு தங்களது சட்டைப் பைகளை நிரப்பிக் கொண்டு தொழிலாளர்களை இன்று வீதிக்கு இறக்கி விட்டிருக்கின்றார்கள். மக்களுக்கும் சரி, அரசியல் விமர்சகர்களுக்கும் சரி தெளிவாக இது அரசியல் இலாபம் தேடும் செயற்பாடு என விளங்கும் என்றாவது உணர்கின்றார்களா இவர்கள்? இல்லை என்பதே விடையாகின்றது. இவர்கள் காலத்திற்கு காலம் மக்களை ஏமாற்றுவதைப் போன்று எல்லா சந்தர்ப்பங்களிலும் ஏமாற்று அரசியல் நடத்தலாம் என்று எண்ணிக் கொண்டு இருக்கின்றனர்.


மக்களுக்கு விடிவு வரும், வாழ்க்கை தரத்திலே மாற்றம் வரும் அதற்கு நாடு மாற வேண்டும், நல்லாட்சி ஏற்பட வேண்டும் வாக்களியுங்கள் மாற்றத்திற்கு எனக் கூவி கூவி வாக்குகளைப் பெற்றுக் கொண்ட இவர்கள் மக்களின் சம்பள நிலைமை தொடர்பில் கருத்திற் கொள்ளாது வரி அதிகரிப்பிற்கும், பொருட்களின் விலையுயர்விற்கும் “ஆமாம் சாமி” போட்டு விட்டு, அதன் பிறகு சம்பளத்தைப் பற்றி யோசிக்கின்றார்கள். விலையுயர்விற்கு முன்னர் மக்கள் அதை சமாளிக்கும் வாழ்க்கை தரத்தை கொண்டிருக்கின்றார்களா என இவர்கள் எண்ணிக் கூட பார்த்திருக்க மாட்டார்கள். அட அவர்களை சொல்லி எண்ண பயன் குளிரூட்டப்பட்ட அறையிலும் வாகனத்திலும் என சொகுசு வாழ்க்கை நடத்தும் தனவந்தர்களுக்கு அட்டைக் கடியிலும் அபாயமான மலைச்சரிவுகளிலும் தொழில் நடத்தும் தொழிலாளியின் பசி, பட்டினி தொடர்பில் என்ன கவலை இருக்கின்றது.



வெளிநாட்டு உறவு, வெளிநாட்டு பயணம் வெளிநாட்டோடு குடித்தனம் நடாத்திக் கொண்டிருக்கும் நாட்டின் அதிமேதகு (?) ஜனாதிபதி அவர்கள் இவ்விடயம் தொடர்பாக சிரத்தை எடுத்துக் கொண்டதாக தெரியவில்லை. ஐ.நா உரையிலே “வணக்கம்” என்ற வார்த்தையை சொன்னது மட்டும் தமிழ் மக்களை மதிக்கின்றேன் என்றாகி விடாது. அவர்களின் பிரச்சினை தொடர்பில் கவனத்திற் எடுக்க வேண்டும். அதற்கு முதலில் அவர் உள்நாட்டில் என்ன நடக்கின்றது என்பது தொடர்பில் விழிப்போடு இருக்க வேண்டும். உண்மையில் ஆட்சி மாற்றத்தில் பிரதான பங்காற்றிய மலையக மக்களுக்கு இந்த நல்லாட்சி அரசாங்கம் செய்தது என்ன? கடந்த ஆட்சியில் தொடக்கி வைக்கப்பட்ட சில வீடமைப்பு திட்டங்களின் பூர்த்தியும், சில புதிய வீடமைப்பு திட்டங்களுமேயாகும். நாளாந்த சீவியம் குறித்த உரிய தீர்வொன்றை பெற்றுத் தரும்பட்சத்தில் இந்த வீடமைப்புத்திட்டங்களின் பயன்கள் மக்களை சரியாக வந்து சேரும். எத்தனை திட்டங்கள் வந்தாலும் தோட்டத் தொழிலாளர்களின் முக்கியத் தேவையும், அனைத்திற்கும் அடிப்படையாவதும் வாழ்க்கைதர செலவிற்கு பொருத்தமான சம்பளமேயாகும். ஏனைய துறைகளின் சம்பள உயர்வு தொடர்பில் உரிய நேரத்தில் சிரத்தை எடுக்கும் அரசாங்கம் தோட்டத் தொழிலாளர்கள் குறித்தும் இனியாவது கவனத்திற் கொள்ள வேண்டும்.



நாட்டின் பிரதமரோ எப்போதுமே உள்நாட்டில் மக்கள் படும் துயரம் தொடர்பில் அலட்டிக் கொள்வது கிடையாது. பொருளாதார அபிவிருத்தி, தனியார் மயமாக்கல், வெளிநாட்டு வர்த்தகம் என்பன தொடர்பிலேயே அவரது கவனம் அதிகமாக தாழ்கின்றது. சரி ஐக்கிய தேசிய கட்சியின் தலைவரல்லவா கட்சியின் கொள்கையை பற்றி பிடிக்கத்தானே வேண்டும். தேசிய தலைமையை குறைச் சொல்வதற்கு நமது பிராந்திய தலைவர்கள் சரியாக இருந்திருக்க வேண்டும்.


சம்பள பிரச்சினைக்கு இன்று எமது மக்கள் வீதிக்கு இறங்கியுள்ளனர், இது ஒரு பக்கம் இன்று தோட்டங்கள் மூடப்பட்டு தசாப்பதங்கள் கடந்த நிலையில் இன்றும் அன்றாட சீவியத்தை நடாத்துவதில் சிக்கல் நிலையில் இருக்கும் மக்களின் நிலை தொடர்பில் கவனத்திற் கொள்வதாய் எமது அரசியல்வாதிகள் இல்லை. வாழ்க்கை தரமும் விலை உயர்வும் மேலும் நெருக்கத்தை கொடுக்க இம்மக்களும் வீதிக்கு இறங்குவதை யாராலும் தடுக்க முடியாது. கண்டி, மாத்தளை, கேகாலை, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களில் அதிகமாகக் காணப்படும் இந்த மூடப்பட்ட தோட்டங்களில் உள்ள மக்கள் தொடர்பில் இவர்கள் கவனத்தில் எடுப்பதில்லை. அங்கே தொழிற்சங்கமென்ற பெயரில் சந்தாவை நிரப்ப வாய்ப்புக்கள் குறைவாக காணப்படுகின்றமையே இதற்கு பிரதான காரணமாகும். இவர்களை கவனத்திற் எடுக்க வேண்டுமெனின் அரநாயக்கவில் ஏற்பட்டதைப்போன்ற ஒரு பாரிய அனர்த்தம் ஏற்பட்டு இங்கும் மக்கள் உள்ளார்கள் என காட்ட வேண்டும், உடனே சமாதியை எங்கள் கட்சி கட்டும் என்பதை பெருமிதத்தோடு பத்திரிக்கையாளர் மாநாடு கூட்டி சொல்வார்கள் நம்மவர்கள். கத்தி திரைப்படத்தில் வருவதைப் போன்று உயிர் போக்கி தம்மை அடையாளம் காட்ட வேண்டிய நிலைமைக்கு மக்கள் தள்ளப்பட்டுள்ளார்கள் என நினைக்கும் போது வேதனையும், இந்த அரசியல் கோமாளிகள் மீது வெறுப்பும் சீறுவதை தடுக்க முடியாதுள்ளது.


மூடப்பட்ட தோட்டங்களிலே தினம் தினம் செத்து பிழைக்கும் மக்கள், மூடப்படாத தோட்டங்களிலே உழைப்பை உறிஞ்சிக் கொண்டு சக்கையாக்கப்பட்டுக் கொண்டிருக்கும் மக்கள் என இரு பிரதான வகுப்பாக்கங்களிலே மலையக மக்கள் துன்பத்தை அனுபவித்து வருகின்றார்கள். இவர்கள் மீதான அன்பும் கருணையும் தேர்தல் காலங்களில் மட்டுமே இவர்களின் தலைமைகளுக்கு வருவதும் வேடிக்கையான விடயமே.


இந்த போராட்டங்களில் ஈடுபடும் மக்களை ஏமாற்றுவது ஒன்றும் எமது தலைமைகளுக்கு பெரிய விடயமல்ல. வெறும் இரண்டு மணித்தியாலங்கள் அவர்களின் போராட்டங்களில் பங்குப்பற்றினால் போதும் எமது தலைவர் எங்களோடு இருப்பார் என்று அவருக்கும் சேர்த்து கொடி தூக்க தொடங்கி விடுவார்கள். அன்பான பத்திரிக்கை நண்பர்களுக்கும், கொடித்தூக்கும் கொடி வீரர்களிடமும் நாம் கேட்டுக் கொள்வது ஒன்றுதான் மக்களின் போராட்டங்களில் இணைந்து அவர்களை திசை திருப்பி அரசியல் இலாபம் தேட முயற்சிக்கும் அரசியல்வாதிகளின் செயற்பாடுகளை ஒவ்வொரு தருணங்களிலும் படம்போட்டுக் காட்டுங்கள். மக்களின் இந்த உணர்வுபூர்வமான போராட்டத்தைக் கொச்சைப்படுத்த விடாதீர்கள்.


அது இந்த மக்களுக்கு செய்யும் பேருதவியாக அமையும். மாறாக அதை பெரிய சாதனையாகக் காட்டி அரசியல்வாதிகளுக்கு கூஜா தூக்கி விட்டு மக்களுக்கு துரோகமிழைத்து விடாதீர்கள். மாபெரும் போராட்டங்கள் என்ற பெயரில் சில போராட்டங்களை எமது தலைமைகள் இப்போதும் அரங்கேற்றிக் கொண்டுதான் இருக்கின்றார்கள். இந்த போராட்டங்கள் தேசிய அரசியலிலும் சரி, தேசிய தலைமைகளிடத்தேயும் சரி எந்தவொரு மாற்றத்தையும் ஏற்படுத்தியதை காணமுடியாதுள்ளது.


எமது நாட்டில் ஏனைய சமூகங்கள் தமது கோரிக்கைகளையும், போராட்டங்களையும் வௌ;வேறு கட்டங்களுக்கு உயர்த்தியுள்ள நிலையில் நாம் இன்னும் அன்றாட சீவியத்திற்காக போராடிக் கொண்டிருக்கும் நிலையிலேயே காணப்படுகின்றோம். காரணம் இன்னும் அரசியல் ரீதியாகவும், சமூக கட்டமைப்பு ரீதியாக நாம் வளர்;ச்சி காண வேண்டியவர்களாக இருக்கின்றோம். இதற்கான தேவை மற்றும் சமூக நகர்வின் அவசியம் பற்றியும் மக்கள் உணர வேண்டும். சமூக நகர்வினை தடுத்துக் கொண்டிருக்கும் அல்லது சமூக நகர்விற்கு பலம் சேர்க்காத அரசியல் தலைமைத்துவங்கள் ஓரங்கட்டப்பட வேண்டும் என்பது எனது கருத்தாகும். ஏன் என்றால் எமது சமூகத்தை நாம் அடுத்த கட்டத்தை நோக்கி நகர்த்த வேண்டிய காலக்கட்டத்தில் இருக்கின்றோம்.


தோட்ட தொழிலாளியின் பிரச்சினைதானே என அந்த தோட்டத் தொழிலாளியின் வம்சாவளியிலிருந்து உயர் நிலையடைந்தவர்கள் விலகி நிற்பதும் இது தொடர்பில் கவனத்திற் கொள்ளாமையும் வருந்தக் கூடிய ஒன்றே. எம்மக்களின் வாழ்வாதாரம் என்பதை முதனிலைப்படுத்தி அனைத்துத் தரப்பினரும் கைகோர்க்க வேண்டியது காலத்தின் தேவையாகும். கூட்டு ஒப்பந்தம் எனும் பூச்சாண்டிக் காட்டிக் கொண்டிருப்போருக்கும், அமைச்சு பதவிகளைக் கொண்டு மக்களை திசை திருப்பிக் கொண்டிருப்பவர்களுக்கும் பாடம் கற்பிக்க அனைவரும் அணி திரள வேண்டியது அவசியம். வௌ;வேறு தொழிற் துறைகளை சார்ந்த மலையக இளைஞர்களும், மலையக சிவில் அமைப்புக்களும் இணைந்த இன்றைய இந்த மக்கள் போராட்டத்திற்கு பலம் சேர்க்க வேண்டும்.


தோட்ட தொழிலாளியின் போராட்டம்தானே என்று ஏனைய தரப்பினரும் ஒதுங்கி விடாது தேசத்தின் ஏற்றுமதி பொருளாதாரத்தின் முதுகெழும்பிற்கொரு பிரச்சினை என ஏனைய தரப்பினரும் இணைய வேண்டும். “இன்று வடக்கிலிருந்தும், கிழக்கிலிருந்தும், தலைநகரில் இருந்தும் குரல் கொடுக்கும் உறவுகளுக்கு இவ்விடத்தில் உளமாற நன்றிகளை கூறவும் விளைகின்றேன்.”


நாட்டில் விலை உயர்வு என்பதும், போராட்டங்கள் என்பதும் இன்றைய நிலையில் சாதாரணமாகிப் போய்விட்டது. மாணவர்கள், வைத்தியர்கள், அரச ஊழியர்கள், தாதியர் என இன்று நாட்டில் ஏறக்குறைய பொலிஸ், இராணுவத்தினரை தவிர அனைத்து தரப்பினரும் ஏதொவொரு போராட்டத்தில் அரசுக்கெதிராய் கொடி தூக்கி விட்டார்கள். எனினும் மலையக மக்களின் இந்த போராட்டத்தை நாம் அந்த போராட்டங்களின் வரிசையில் வைத்து பார்க்க முடியாது மாறாக அடிப்படை வாழ்வாதாரத் தேவைகளை பூர்த்தி செய்யவே இம்மக்களின் போராட்டங்களின் நோக்கங்களாக உள்ளது.



தேயிலை தோட்டங்களின் பரப்பு காலத்திற்கு காலம் குறைந்துக் கொண்டு வரும் நிலையில் இதனை நம்பியுள்ள மக்களை கருத்திற் கொண்டு புதிய தொழில் வாய்ப்புக்கள் உருவாக்கப்பட வேண்டும். அதனூடே தேசத்தின் ஏற்றுமதி பொருளாதாரத்தை நிலைப்படுத்தி உயர்த்த வேண்டும். தொழில் வாய்ப்புக்களை உருவாக்காது, வரியை ஏற்றி நாட்டின் பொருளாதாரத்தை ஸ்திரப்படுத்தி விட முடியாது. எனவே இன்று சம்பளப் பிரச்சினைக்கு போராடி வரும் நாம் எதிர்வரும் காலங்களில் வரிசையாக மூடப்பட்டு தேயிலைத் தோட்டங்களில் வேலைவாய்ப்பில்லை என போராட வேண்டி வரும் அதற்குரிய மாற்றுத்திட்டங்கள் குறித்து அரசும் அதனோடு சார்ந்த எம்மவர்களும் கருத்திற் கொள்ள வேண்டும்.


இன்று உரிய சம்hளம் கோரி வீதிக்கு இறங்கியிருக்கும் இந்தப் போராட்டத்திற்கு அரசு விரைந்து தீர்வு வழங்காவிடின் மலையகத்தில் உள்ள அனைத்து சிவில் அமைப்புக்களும் ஏனைய அனைத்து தரப்பினர் இணைந்து மாபெரும் போராட்டம் வெடிக்கும் என்பதை யாரும் தடுக்க முடியாது. அங்ஙனம் ஒரு நிலை ஏற்படாதிருக்க அரசும் அதன் அடிவருடிகளும் விரைந்து செயற்பட வேண்டும். தீர்வுகள் எட்டப்படும் வரை மக்கள் போராட்டம் தொடர வேண்டும் அது வரை போராட்டம் தொடர வேண்டும். போராட்டங்களின் பின்னணியில் அரசியல் நடத்த தயார் நிலையில் இருக்கும் தரப்பினரை எம்மக்கள் துரத்தியடிக்க வேண்டும். அரசியல் இலாபம் தேட நாம் முயற்சிக்கவில்லை மக்களுக்காகவே போராடுகின்றோம் என அடுத்த தேர்தலுக்கு மூலதனம் போட தொடங்கியுள்ளவர்கள் கட்சியெனும் போர்வை தளரத்தி மலையகம் எனும் ஒரு கூரையின் கீழ் ஒன்றுப்பட தயாரா? இல்லை எது செய்யினும் கட்சி போர்வையில் தான் செய்வோம் எனும் நிலைப்பாடு தான் தொடருமா?? இது வாழ வழி தேடும் தொழிலாளியின் போராட்டம் இங்கு இலாபம் தேட வேண்டாம், இணைந்து கரம் நீட்டி உரிய வேதனம் பெற்றுக் கொடுக்க இணைவோம்.

தனுஷன் ஆறுமுகம்  LL.B (Hons) Colombo -
தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம்;: அரசியல் இலாபம் தேட இது களமல்ல. தோட்டத்தொழிலாளர்களின் சம்பளப் போராட்டம்;: அரசியல் இலாபம் தேட இது களமல்ல. Reviewed by Madawala News on October 22, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.