கிழக்கு மாகாணத்தில் நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழ் மக்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன என தமிழ் தேசிய கூட்டமைப்பின் மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் சதாசிவம் வியாழேந்திரன் தெரிவித்தார்.
செங்கலடி மத்திய கல்லூரியின் வருடாந்த பரிசளிப்பு விழா நேற்று கல்லூரி முதல்வர் குமாரசாமி அருணாசலம் தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் கடந்த ஆண்டு தமது திறமைகளை வெளிப்படுத்திய 490 மாணவர்கள் கௌரவிக்கப்பட்டனர்.
இந் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் மேற்கண்டவாறு கூறினார். அவர் அங்கு மேலும் கருத்து தெரிவிக்கையில்,
அண்மையில் நடைபெற்ற இலங்கை நிருவாக சேவை பரீட்சை, தாதியர் தேர்வுப் பரீட்சை, தபால் உள்ளக கணக்காய்வு பரீட்சை என்பவற்றில் தமிழர்கள் திட்டமிட்டு புறக்கணிக்கப்பட்டுள்ளார்கள்.
வெளிமாவட்டத்திலுள்ள அரசியல்வாதிகளின் சிபாரிசுகளினால் மட்டக்களப்பு மாவட்டத்தில் சாதாரண சிற்றூழியர்கள் முதல் அனைத்துத் துறைகளிலும் தென்னிலங்கையில் உள்ளவர்களை கொண்டு இடைவெளிகளை நிரப்புகிறார்கள்.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் இருப்பினை கேள்விக்குறியாக்கும் வகையில் தேசிய மற்றும் மாகாண நிகழ்ச்சி நிரலின் கீழ் தமிழர்களுடைய நிலங்கள் வளங்கள் பலவிதத்திலும் அபகரிக்கப்படுகின்ற நிலமை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டு செல்கிறது எனவும் சுட்டிக்காட்டினார்.
நல்லிணக்கம் என்ற போர்வையில் தமிழர்களின் இருப்புகள் நசுக்கப்படுகின்றன
Reviewed by Madawala News
on
October 12, 2018
Rating: