ஊடகவியலாளர் ஜமால் கசோக்கியின் கொலைக்கு பின்னால் ‘முரட்டுத்தனமான செயல்’
இருப்பதாக சவூதி அரேபியா புதிதாக விளக்கம் அளித்துள்ளது. இந்த செய்தியாளரின் கொலை விவகாரம் சர்வதேச அளவில் கோபத்தை தூண்டியுள்ளது.
பொக்ஸ் நியுஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்திருக்கும் சவூதி வெளியுறவு அமைச்சர் அப்தல் அல்–ஜுபைர், இந்த செயல் “மிகப்பெரிய தவறு” என்று குறிப்பிட்டதோடு, இந்தக் கொலைக்கு முடிக்குரிய இளவரசர் உத்தரவிட்டதாக கூறப்படுவதை மறுத்தார்.
கசோக்கி கடந்த ஒக்டோபர் 2 ஆம் திகதி இஸ்தான்பூலில் இருக்கும் சவூதி துணைத் தூதரகத்திற்குள் நுழையும்போதே கடைசியாக காணப்பட்டார்.
இந்த செய்தியாளர்கள் எங்கே என்பது குறித்து சவூதிக்கு அழுத்தம் அதிகரித்ததை அடுத்து இந்த சம்பவம் தொடர்பில் முரண்பாடான தகவல்கள் வெளியாக ஆரம்பித்துள்ளன.
சவூதி ஆரம்பத்தில் கசோக்கி துணைத் தூதரகத்தில் இருந்து எந்த பிரச்சினையும் இன்றி வெளியேறிதாக கூறி வந்தது. இந்நிலையில் அவர் உயிரிழந்து விட்டதாக சவூதி கடந்த வெள்ளிக்கிழமை முதல் முறை ஒப்புக் கொண்டது. சண்டை ஒன்றின்போது அவர் கொல்லப்பட்டதாக சவூதி கூறியது. எனினும் இந்தக் கூற்று பரந்த அளவில் அதிருப்தியை ஏற்படுத்தியது.
சவூதி அரேபியாவை விமர்சித்து வந்த கசோக்கி, தூதரக வளாகத்திற்குள் இருந்த சவூதி முகவர்களால் கொல்லப்பட்டிருப்பதாக துருக்கி அதிகாரிகள் குறிப்பிடுகின்றனர். அதற்கான ஆதாரங்கள் இருப்பதாகவும் துருக்கி கூறி வருகிறது.
இந்நிலையில் பொக்ஸ் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்த அப்தல் அல்–ஜுபைர் இந்த சம்பவம் குறித்து விளக்கம் அளித்திருந்தார். இதனை ஒரு கொலையாக அவர் வர்ணித்தார்.
“நாம் அனைத்து உண்மைகளையும் கண்டறிவதில் உறுதியாக உள்ளோம். இந்த கொலைக்கு தொடர்புடையவர்களுக்கு தண்டனை வழங்குவோம்” என்று அவர் குறிப்பிட்டுள்ளார். நிர்வாகத்திற்கு அப்பால் தனி நபர்களே இதனைச் செய்ததாகவும் அவர் வலியுறுத்தினர்.
அதே நேரம் இந்த கொலைக்கும் சவுதி அரச குடும்பத்திற்கோ அல்லது முஹம்மது பின் சல்மானுக்கோ தொடர்பில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“உண்மையிலேயே மிகப்பெரிய தவறு ஒன்று இடம்பெற்றுள்ளது. அதனை மூடி மறைக்க முயன்றது மேலும் சிக்கலாக்கியுள்ளது” என்றும் அல்–ஜுபைர் குறிப்பிட்டுள்ளார்.
கசோஜி கொலைக்கும் MBSக்கும் தொடர்பில்லை ; சவுதி வெளியுறவு அமைச்சர்
Reviewed by Madawala News
on
October 23, 2018
Rating: