தினம் ஒரு மரண செய்தி. இன்று காலை மரணித்த மூதூர் சகோதரர் முப்லி ஜப்பாருடன் சேர்த்து நான்கு இலங்கையர்கள் வபாத்.
இரண்டு தினங்களுக்கு முன்னர் மரணித்த எனது உறவுக்காரர் ஒருவரின் ஜனாஸா தொழுகைக்காக அபூஹமூர் மையவாடிக்கு சென்ற போது, இன்று மற்றுமொரு மரண செய்தியும் கேள்விப்பட்டது.
கிட்டத்தட்ட அனைவருமே மாரடைப்பாலேயே மரணித்துள்ளார்கள். இள வயதுக்காரர்கள்!
குறுகிய இடைவெளியில் எத்தனை மரணங்கள்? இந்த மரணங்கள் எமக்கு ஏதோ உணர்த்துவதாக தோன்றவில்லையா?
இந்த மரணம் எம்மையும் அரவணைக்கலாம் தானே?
ஆனால் அந்த மரணத்தை சந்திக்க நாம் எத்தனை பேர் தயார்?
அல்லாஹ்வுடன் எந்தளவு நெருக்கமாக உள்ளோம்?
இங்கே நிவ் ஸலாத்தாவில் ஒரு ஶ்ரீலங்கா டீக்கடை உள்ளது, மாலை நேரமானால் நண்பர்கள் சந்திக்கும் ஒரு முக்கியமான மீட்டிங் பொயிண்ட் இதுவாகும்!
இந்த கடையிலிருந்து சுமார் 50 மீட்டர் தொலைவில், இல்லை அருகில் ஒரு பள்ளிவாயல் உள்ளது. அதான் ஒலிக்கும் நேரங்களில் வாகனங்கள் கூட நிறுத்த இடமில்லாத இந்த இடத்திலிருந்து, விரல்விட்டு எண்ணக்கூடியவர்களே தொழுகைக்காக செல்வார்கள்,
பலர் கையில் டீயும் சிகரெட்டும் வைத்துக்கொண்டு இஷா வரையிலும் அரட்டையடிப்பர்,
ஆனால் அல்லாஹ்வின் நினைப்பு?
இங்குள்ளவர்க்கு பொழுது போக எதுவுமில்லை, இருந்தாலும் வெளியே செல்ல முடியாதளவு வெப்பமான காலநிலை! நேரம் கிடைத்தால் ஹோட்டல்களிலேயே காலத்தை கழிக்கும் அவலம்.
பிரியாணி, ப்ரை, என்கர் டீ, ஷோட் ஈட்ஸ் ...
ஊரிலிருந்து வரும் ஒவ்வொருத்தர் கையிலும் மனைவி, உம்மா, சகோதரிமார் அன்போடு அனுப்பி வைக்கும் மிக்ஷர், சீனி மா, மஸ்கட், சீவல், கடலை என ஒவ்வொரு ரூமும் ஒரு பெட்டிக்கடையாக!
நடைப்பயிற்சி அறவே இல்லை, வெகு சொற்பமானவர்களே ஜிம்முக்கோ க்ரவுண்டுக்கோ செல்வதனால் அதிகமானவர்களுக்கு இன்னொரு அவயவமாக நிரந்தர தொப்பை!
எமது உணவு பழக்கங்களில்
சம்திங் சம்திங் மிஸ்ஸிங் !
உணர்வோமா?
உணவுக்கட்டுப்பாடு என்றாலே என்னமோ கெட்டவார்த்தை போல நினைக்கும் நிலை,
ஆரோக்கியமான வாழ்வையும் தொலைத்து, மரணத்தை சந்திக்க திராணியற்ற முஸ்லிம்களாக நம்ம உம்மத்!
மறந்து விடாதீர்கள் இந்த ஆரோக்கியம் ஒரு நிஃமத், இறைவனால் வழங்கப்பட்ட அமானிதம்!
ஆரோக்கியமாக இருந்தாலே அமல்களை முழுமையாக நிறைவேற்றலாம், மறுமையில் நிச்சயமாக கேள்வி கேட்கப்படுவோம்.
உழைக்கச் சென்ற மகன், கணவன், வாப்பாவின் முகத்தை கூட பார்க்க முடியாத மரணம் தரும் பிரிவு எவ்வளவு கொடுமையானது?
தொழுகையில்லாமல் மரணிப்பவர் நிலை?
நினைக்கும் போதே நடுங்குது.
அல்லாஹ் பாதுகாக்கணும்😭
“என்ன செய்யப்போகிறோம்?“
- iriz shaheed-
இன்றுடன் மூன்று நாட்களில் கட்டாரில் இலங்கையர்கள் நால்வர் வபாத்...
Reviewed by nafees
on
August 15, 2018
Rating: