புதிய தேர்தல் முறைமையில் சிறுபான்மை இனங்கள் அடிமைப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதை அனுமதிக்கமுடியாது
ஏ.எல்.எம்.சத்தார்-
இனப்பிரச்சினைக்கு ஒரு தீர்வாகவும் சிறுபான்மையினங்களுக்கு ஒரு வரப்பிரசாதமாகவுமே
அன்று மாகாண சபை முறைமை அறிமுகப்படுத்தப்பட்டது. ஆனால், இன்று மாகாணசபைக்கான தேர்தல் முறையில் கொண்டுவரப்படும் மாற்றங்களால் சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் குறையுமாயின் மாகாணசபை உருவாக்கப்பட்ட நோக்கமே பிழைத்துவிடும் என்று பாராளுமன்ற உறுப்பினர் முஜிபுர் ரஹ்மான் தெரிவித்துள்ளார்.
கடந்தவாரம் பாராளுமன்றத்தில் மாகாணசபைத் தேர்தல் குறித்த வாதம் இடம் பெற்ற போது அதில் தனக்குரிய நேரத்தில் உரையாற்றும் போதே முஜிபுர் ரஹ்மான் மேற்கண்டவாறு கூறினார்.
அதன்போது அவர் தொடர்ந்தும் கருத்து தெரிவிக்கையில்,
"மாகாண சபைக்கான புதிய தேர்தல் முறை குறித்து கடந்த காலங்களில் இம்மன்றில் பலரும் கருத்துக்களை தெரிவித்து வருகின்றனர்.
அண்மையில் நடந்து முடிந்த உள்ளூராட்சி மன்றங்களுக்கான தேர்தல் முடிவின் படி தொகுதிவாரி, விகிதாசாரம் கலந்த தேர்தல் முறைமையிலுள்ள குளறுபடிகளை கண்டு கொண்டோம். அதனால் தான் மாகாணசபைத் தேர்தலில் அத்தகைய அவலங்கள் ஏற்படுவதை தவிர்ப்பதற்காக புதிய தேர்தல் முறையொன்றின் தேவைப்பாடு எல்லோராலும் உணரப்பட்டிருக்கிறது.
இனப்பிரச்சினைக்கு அரசியல் தீர்வொன்றைக்கொண்டு வருவதற்காகவேதான் மாகாணசபை முறைமை கொண்டுவரப்பட்டது. அன்று மாகாணசபை தேவையில்லை என்று எதிர்த்து நின்றவர்கள்கூட இன்று மாகாணசபைகளில் பிரதிநிதித்துவங்களைப் பெற்று அதன் பலன்களை அனுபவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
மாகாணசபை தேர்தல் முறையில் சிறுபான்மை இனங்களுக்குப் பாதிப்பில்லாத முறையில் மாற்றங்கள் செய்ய வேண்டுமென்று அமைச்சர்களான ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன், மனோகணேஷன் ஆகியோர் உடன்பாட்டுக்கு வந்திருக்கிறார்கள்.
எல்லை நிர்ணயக் கமிஷன் முன்வைத்துள்ள சில ஆலோசனைகள் குறித்து ஒரு முடிவுக்கு வரவேண்டும் என்றும் தேர்தல் முறையில் புதிய மாற்றம் ஒன்று மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற உடன்பாட்டுக்கு இன்று நாம் முன்வந்திருக்கிறோம்.
எல்லை நிர்ணயக் கமிஷன் சபை முன்வைத்துள்ள பிரதிநிதித்துவ அதிகரிப்பில் பல சிக்கல்கள் உள்ளன.
1988 ஆம் ஆண்டு உள்ளூராட்சி சபை சட்டமூலத்தில் 1981 ஆம் ஆண்டு முதல் இருந்த அடிப்படையிலேயே உறுப்பினர் தொகை நிர்ணயிக்கப்பட்டிருந்தது.
2001 இல் இம்முறையில் மீண்டும் திருத்தங்கள் செய்யப்பட்டது. அன்றிருந்த தேர்தல்கள் ஆணையாளர் தயானந்த திஸாநாயக்க வர்த்தமானி அறிவித்தல் மூலம் உறுப்பினர் அதிகரிப்பு குறித்து வெளியிட்டார். அந்த அடிப்படையிலேயே இன்று மேல் மாகாண சபையில் 104 உறுப்பினர்கள் இடம் பெற்றுள்ளார்கள்.
கமிஷன் சபை எழுத்துமூலம் சமர்ப்பித்துள்ள புதிய முறையில் மாகாணசபை முஸ்லிம் பிரதிநிதித்துவ எண்ணிக்கை குறித்த கணிப்பீடு தவறானதாகும். இப்போது மாகாணசபையில் 43 முஸ்லிம் உறுப்பினர்கள் அங்கம் வகிக்கின்றனர். ஆனால், புதிதாக கொண்டுவரப்படவுள்ள தொகுதிவாரியான 50 வீதம் தெரிவில்13 முஸ்லிம் பிரதிநிதிகளே தெரிவாகிறார்கள்.
விகிதாசார 50 வீதத்தில் மேலும் 13 முஸ்லிம் உறுப்பினர்கள் சேர்க்கப்படும் நிலையில் மொத்தம் 26 முஸ்லிம் பிரதிநிதிகளே அங்கம் வகிக்கும் நிலை உள்ளது. ஆனால், எல்லை நிர்ணயக் கமிஷன் சபையோ தற்போதுள்ள முஸ்லிம் பிரதிநிதித்துவத்தில் வெறும் மூன்றுபேரே குறையும் என்று தெரிவித்துள்ளது. இது தவறு. இருக்கும் 43 பேரில் 26 பேர் தெரிவாகும் பட்சத்தில்17 பேர் குறையப்போகிறார்கள் என்பதே நடக்கப்போகிறது.
அடுத்து பல அங்கத்தவர் தொகுதி விடயத்திலும் எல்லை நிர்ணயக் கமிஷன் சபை தவறான சிந்தனையொன்றையே முன்வைத்துள்ளமை தெளிவு. 116000 பேருக்கு ஒரு தொகுதி என்ற அடிப்படையிலேயே எல்லை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இந்த இடத்திலே இரட்டை அங்கத்தவர் தொகுதியென்றால் 230000 பேர் இருக்க வேண்டும் என்ற வேடிக்கையான கணிப்பீட்டை முன்வைத்துள்ளது.
இரட்டை அங்கத்தவர் தொகுதியென்றால் அங்குள்ள வாக்காளர் எண்ணிக்கை இரு மடங்காக வேண்டும் என்பதல்ல அதன் அர்த்தம். குறித்த தேர்தல் தொகுதியில் வாழும் 10 வீதமோ அல்லது 20 வீதமாகவோ வதியும் சிறுபான்மை இனத்துக்கும் ஒரு பிரதிநிதித்துவம் வழங்கவேண்டும் என்பதற்கே இரட்டை, மூவர் தொகுதிகள் உருவாக்கப்படுகின்றன.
உதாரணமாக 70 களில் கொழும்பு மத்திய தேர்தல் தொகுதியில் ஆர்.பிரேமதாச, ஜாபிர் ஏ.காதர், ஹலீம் இஷாக் ஆகிய மூவர் வெற்றிபெற்று இரு முஸ்லிம் பிரதிநிதிகள் அங்கு தெரிவுசெய்யப்பட்டனர். அப்போது அத்தொகுதியில் 160000 வாக்குகள் தான் இருந்தன. கமிஷன் சபை கூறுவதுபோன்று மூன்று மடங்கல்ல.
அப்போது பேருவளை இரட்டை அங்கத்தவர் தொகுதியில் 54 ஆயிரம் வாக்குகளுக்கு சமரநாயக்க, எம்.ஏ.பாக்கீர் மாக்கார், இருவர் தெரிவாகியுள்ளனர். கண்டியில் 74 ஆயிரம் வாக்குகளுக்கு காமினி திஸாநாயக்க, அனுர பண்டாரநாயக்க, சௌமியமூர்த்தி தொண்டமான் ஆகிய மூவர் தெரிவாகினர். மட்டக்களப்பு இரட்டை அங்கத்தவர் தொகுதியில் 40 ஆயிரம் வாக்குகளுக்கு அகமட் கரீம், ராஜதுரை ஆகியோர் தேர்ந்தெடுக்கப்பட்டனர்.
ஹாரிஸ்பத்துவ இரட்டை அங்கத்தவர் தொகுதியில் ஏ.ஸீ.எஸ்.ஹமீத், சிரிசேனவும் பொத்துவில் தொகுதியில் ஜலால் தீன், கனகரத்தினம் ஆகிய இருவரும் தெரிவாகினர். மேற்கண்ட முறைமையில் அந்தந்த தொகுதிகளில் வாழும் சகல இனத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கப்பெற்ற மேலான ஜனநாயக முறைமை அன்று நிலவியது. இந்த சிறப்புரிமையை இப்போது எல்லை நிர்ணய கமிஷன் சபை தட்டிப்பறித்துள்ளது. அத்துடன் அவர்களால் இரட்டை அங்கத்தவர் அல்லது பல அங்கத்தவர் தொகுதி என்பது கொச்சைப்படுத்தப்பட்டுள்ளது.
எனவே பிரதிநிதித்துவ அதிகரிப்பு என்பது சிறுபான்மையினத்துக்கும் போதிய பிரதிநிதித்துவம் கிடைக்கத்தக்கவாறு அதிகரிப்பு முறைமை கையாளப்பட வேண்டும். சிறுபான்மைப் பிரதிநிதித்துவம் தற்போது இருப்பதை விடக் குறையுமாயின் அது ஜனநாயகத்தை இல்லாமலாக்கும் செயலாகும். இதனை யாரும் ஏற்கமாட்டார்கள்.
பாராளுமன்றத் தேர்தல் விகிதாசார முறைமைக்கு மாற்றப்பட்டபோது சிறு கட்சிகளுக்கு 12 வீதமாக இருந்த வெட்டுப்புள்ளி முன்னாள் ஜனாதிபதி ஆர்.பிரேமதாசவினால் 5 வீதமாகக் குறைக்கப்பட்டது. இதனால் சிறுபான்மை இனக் கட்சிகள் மட்டுமன்றி சிறு கட்சிகளும் பாராளுமன்றம் சென்று தம் குரல்களை ஒலிக்க வழிகோலியது. தெற்கிலே ஆட்சியைப்பிடிக்க ஆயுதப் போராட்டத்தில் குதித்த இளைஞர்களும் இந்த வெட்டுப்புள்ளி குறைப்பால் ஜனநாயக ரீதியில் பிரதிநித்துவம் பெற்று தம் எண்ணக்கிடக்கைகள், அபிலாஷைகளை நிறைவேற்றிக் கொண்ட சிறப்பை நாம் அன்று கண்டு கொண்டோம்.
விரக்தியடைந்த வாலிபர்கள் 5 வீத வெட்டுப்புள்ளி குறைப்பால் மீண்டும் மீண்டும் ஆயுதம் ஏந்தும் கலாசாரத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டது.
எனவே புதிய தேர்தல் முறைமையில் சிறுபான்மை இனங்கள் அடிமைப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதை அனுமதிக்கமுடியாது. இவ்வாறு அடக்கி ஒடுக்கப்படும் பட்சத்தில் அது பிறிதோர் இடத்தில் மற்றொரு பூகம்பமாக வெடிக்கவே வழிவகுக்கும். இது முழு நாட்டுக்கும் அழிவையே உண்டு பண்ணும். இதன் கோர விளைவுகளை நாம் நன்கு அனுபவித்துள்ளோம். எனவே சகல இனத்தவர்களும் ஜனநாயக ரீதியில் ஆட்சிபீடத்தில் உள்வாங்கப்பட வேண்டியதன் அவசியத்தை இதன்மூலம் உணர்ந்துகொள்ளலாம்.
உள்ளூராட்சி மாகாண சபைகளின் அமைச்சரின் சில விடயங்களில் நாம் உடன்படுகிறோம். மற்றும் சில விடயங்கள் எம்மால் ஏற்க முடியாதுள்ளன.
இலங்கையில் மூன்று இனக் குழுமங்கள் வாழ்கின்றன. வெவ்வேறு மொழிகள் பேசுகின்றன. வேறு கலாசாரம், உணவு முறைமையில் வித்தியாசம், இப்படி எதுவுமில்லாது அனைவரும் ஒரே மொழி, ஒரே கலாசாரம் என்றிருந்தால் அமைச்சர் முன்வைக்கும் விடயம் சரி. ஆனால், பல்வேறு இன, மத, கலாசார குழுமங்கள் வாழும் ஒரு நாட்டில் சகல இனங்களினதும் பிரதிநிதித்துவம் ஆட்சிபீடத்தில் இருக்க வேண்டியது ஜனநாயகப் பண்பாகும். சகல இனங்களும் முறையாக அனுசரிக்கப்படாமையாலே நாம் 30 வருடங்கள் யுத்தப்பிடியில் சிக்கித்தவித்தோம்.
அன்று இனப் பிரச்சினைக்குத் தீர்வு காணப்பட்டிருந்தால் பிரபாகரன் ஆயுதம் ஏந்தியிருக்கமாட்டார். புலிகள் தலை தூக்கியிருக்கமாட்டாது. எனவே சிறுபான்மையினங்கள் உள்வாங்கப்படவேண்டும் என்பதிலே உறுதியாக இருக்கிறோம்.ஆனால், ரவூப் ஹக்கீம், ரிஷாத் பதியுத்தீன் போன்றோர்களின் எல்லாக் கருத்துக்களுடனும் நான் உடன்படுவதற்கில்லை.நாம் இலங்கையர் என்ற அடிப்படையில் நாட்டின் ஐக்கியம், ஒருமைப்பாடே எனது குறிக்கோளாகும்.
மலையகத்தில் தமிழர்களுக்கும் வடக்கில் தமிழர்களுக்கும் பிரச்சினைகள் இருக்கின்றன. அதேபோன்று வடக்கு, கிழக்கில் வாழும் சிங்களவர்களுக்கும் பிரச்சினைகள் உள்ளன. தெற்கில் வாழும் முஸ்லிம்களும் பிரச்சினைகளை எதிர்கொண்டு வருகின்றனர்.
எனவே சகல இன, மதத்தவர்களுக்கும் பிரதிநிதித்துவம் கிடைக்கும் வகையில் தேர்தல் முறை அமையுமாயின் அனைவரதும் கருத்துகள் பிரதிபலிக்கச் செய்வதன் மூலம் பிரச்சினைகளுக்குத் தீர்வு காண முடியும். எனவே புதிய தேர்தல் முறைமையொன்று மிகவும் இன்றியமையாததாகும். அதில் கணிசமானளவு சிறுபான்மை இனங்களுக்கும் வாய்ப்பளிக்கக்கூடிய வண்ணம் மாற்றங்கள் மிகவும் அவசியமாகும் என்று கூறி விடை பெறுகிறேன்.
-Vidivelli
-Vidivelli
புதிய தேர்தல் முறைமையில் சிறுபான்மை இனங்கள் அடிமைப்படும் நிலைக்குத் தள்ளப்படுவதை அனுமதிக்கமுடியாது
Reviewed by Madawala News
on
July 17, 2018
Rating: