இன்று உலகின் பல பாகங்களில் உள்ள முஸ்லிம்கள் நோன்பு பெருநாளைக் கொண்டாடுகிறார்கள். இலங்கையிலும்
பிறை காணப்பட்டும் வேண்டுமென்றே அது நிராகரிக்கப்பட்டது.
இவ்வாறு நிராகரிக்கப்படுவது இதுதான் முதல் தடவை என்றிருந்தால் இலங்கை முஸ்லிம்களில் கணிசமானோர் இன்று பெருநாளை எடுத்திருக்க மாட்டார்கள். ஆனால் பிறை விடயத்தில் அ.இ. ஜம்மியத்துல் உலமா தொடர்ந்தும் குர் ஆன், ஹதீஸை பார்க்காது மனோ இச்சைக்கும் அதிகாரங்களுக்கும் பணிந்து செல்வதால் ஜம்மிய்யாவின் நிலைப்பாட்டில் பெரும்பாலான மக்களுக்கு சந்தேகம் ஏற்பட்டுள்ளது.
இன்று பெருநாளை கொண்டாடாத மக்களும் ரமழான் தலைப்பிறை விடயத்தில் உலமா சபை தவறிழைத்து விட்டது என்பதை புரிந்த நிலையில் ஊரோடு ஒத்தோட வேண்டும் என்ற நிலையில் வேண்டா வெறுப்பாக நோன்பு பிடித்துள்ளார்கள் என்பதே உண்மை.
அதே போல் இன்று ஷவ்வால் மாதம் என்பதை புரிந்த பலர் நோன்பை விட்டு விட்டு பெருநாளும் எடுக்காத நிலையையும் காண்கிறோம். அவர்களின் இந்நிலைப்பாடு மார்க்கத்தின் படி பிழை இல்லை. இன்று நோன்பு நோற்பது ஹராம் என்று ஹதீதுகளில் வந்துள்ளதே தவிர இன்று பெருநாள் எடுக்காவிட்டால் குற்றவாளி என ஹதீதில் வரவில்லை.
இந்த அடிப்படையிலேயே கடந்த பல வருடங்களாக இத்தகைய வேளைகளில் நோன்பை விட்டு விட்டு மறுநாள் பெருநாள் எடுக்கும்படியும் சொல்லி வருகிறது. உலமா கட்சியின் நிலைப்பாடு மிகச்சரியானது என்பதை இறைவன் நாட்டுக்கு காட்டியுள்ளான்.
பெருநாள் எடுப்பது சுன்னத்தானது. ஆனால் ஷவ்வால் பிறை கண்டபின் நோன்பு நோற்பது ஹராமானதாகும்.
இதே வேளை நேற்று ஷவ்வால் பிறை இலங்கையில் காணப்பட்ட தகவல்களின் உண்மைத்தன்மையை கண்டு அநேகமான தவ்ஹீத் ஜமாஅத்துக்கள் இன்று பெருநாளை எடுத்தன.
வரலாற்றில் உலமா சபையின் தீர்மானத்தை மறுத்து தவ்ஹீத் ஜமாஅத்துக்கள் இது விடயத்தில் தற்துணிவாய் முடிவெடுத்தது இதுதான் முதல் தடவை. ஆனாலும் இவர்கள் உலமா சபையின் முடிவின் பிரகாரம் ரமழானை ஆரம்பித்ததும் தவறாகும். ஏனென்றால் உலமா சபை ஷஃபான் மாத முதல் திகதியை தீர்மானிப்பதில் பிழை செய்த போது அதனைப்பார்த்துக்கொண்டிருந்தது தவ்ஹீத் ஜமாஅத்துக்கள் செய்த குற்றமாகும்.
ஷஃபான் மாத பிறையை தீர்மாணிக்க உலமா சபை கூடிய போது சவூதி போன்ற நாடுகளில் ஷஃபான் மாதம் ஆரம்பித்திருந்ததால் அது உண்மையா என்பதையாவது தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஆய்வு செய்திருக்க வேண்டும். மாறா உலமா சபையை நம்பி கண்ணை மூடிக்கொண்டிருந்தமை தவ்ஹீத் ஜமாஅத்துகள் விட்ட பிழையாகும்.
இத்தகைய பிழைகளால் ஷஃபான் மாதம் 31ஆக ஆக்கியுள்ளார்கள் என்பது தெளிவாகிறது.
சவூதியில் ரமழான் பிறை காணாமல் ஷஃபான் மாதத்தை 30ஆக அறிவித்த போது இவர்கள் விழித்திருக்க வேண்டும். கிழக்கில் உதித்த பிறை இலங்கையின் கடலுக்கு கீழால் சென்று சவூதியில் தோன்ற முடியாது. அத்துடன் பிறை என்பது உலகம் முழுவதும் ஒரே பிறைதான் என்ற சாதாரண அறிவு கூட தவ்ஹீத் ஜமாஅத்துக்களுக்கு ஏற்படாமல் சவூதியில் 30ஆக இருந்த போது இலங்கையில் உலமா சபையின் 29வது பிறையை நம்பிக்கொண்டிருந்தமை மிகப்பெரிய மடத்தனமாகும்.
இதன் காரணமாக இதில் நிச்சயம் பிழை வரப்போகிறது என்பதைக்கண்ட உலமா கட்சி மட்டுமே மக்காவின் பிறை அறிவித்தல் படி நோன்பை ஆரம்பிக்கும் படி அறிக்கை விட்டது. அதனை ஏற்ற சிலர் நேற்றுடன் தமது நோன்பை 29ஆக பூர்த்தி செய்தனர். உலமா சபையின் முடிவை நம்பிய பல தவ்ஹீத்வாதிகள் 28ஆக முடித்ததுடன் ஒரு நாளை கழாச்செய்ய வேண்டும் என நபி வழிக்கு முரணாக சொல்லும் நிலை ஏற்பட்டது.
நோன்பை கழாச்செய்யும் கடமை நோயாளிக்கும் பிரயாணிக்கும் மட்டுமே என குர்ஆன் வரையறுத்திருக்கும் போது முட்டாள்த்தனமாக நோன்பை தாமதித்து ஆரம்பித்து கழா செய்ய வேண்டும் என சொல்வது குர்ஆனுக்கெதிரான செயலாகும்.
அவ்வாறு 28 வந்து கழாச்செய்ய வேண்டும் என்றிருந்தால் நிச்சயம் இறைவன் நபிகளார் வாழ்வில் 28ஐ வரச்செய்து கழா செய்ய வழி காட்டியிருப்பான். ஆகவே 28ஐ பிடித்தவர்கள் கழா செய்வது குரானுக்கு முரணானதாகும். இதற்காக பாவ மன்னிப்பு கோரி இனியாவது மக்காவின் பிறை அறிவித்தலை ஏற்று செயற்படுவோம் என உறுதி கொள்வதே இதற்கு பரிகாரமாகும்.
- முபாறக் அப்துல் மஜீத் மௌலவி
தலைவர்
உலமா கட்சி
இலங்கையில் பிறை காணப்பட்டும் வேண்டுமென்றே அது நிராகரிக்கப்பட்டது.
Reviewed by Madawala News
on
June 15, 2018
Rating: