தமிழ் மக்களின் கல்வியை வீழ்த்த முயற்சிகள் முன்னெடுக்கப்படுகின்றது. இதனால் தமிழ் மக்கள் விழிப்புடன்
இருக்க வேண்டுமென இந்து சம்மேளனத்தின் தலைவர் நாரா.அருண்காந்த் தெரிவித்துள்ளார்.
மட்டக்களப்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அவர் தொடர்ந்து கூறுகையில்,
“கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம் என்ற பெயரில் தமிழ் மக்களின் கல்வியை வீழ்த்தி கல்வியறிவில்லாத சமூகமாக மாற்ற சில இனவாத அரசியல்வாதிகள் செயற்பட்டு வருகின்றனர்.
வடக்கு, கிழக்கில் இடம்பெற்ற முப்பது வருட யுத்தம் காரணமாக அங்குள்ள மக்கள் தமது கல்வி, பொருளாதாரம், உடைமைகளை இழந்து நிர்கதியாக நிற்கின்றனர்.
இந்நிலையில் கிழக்கு மாகாணத்தில் ஆசிரியர் இடமாற்றம் என்ற பெயரில் மட்டக்களப்பு மாவட்டத்தில் பின்தங்கிய கிராமப்புற பாடசாலைகளில் இருக்கின்ற ஆசிரியர்களை மேலதிகமாக 172 ஆசிரியர்கள் இருக்கின்ற மட்டு.நகரப்புற வலய பாடசாலைகளுக்கு இடமாற்றுகின்றனர்.
இதனால் கிராமப்புற பாடசாலைகளில் இருந்து இடமாற்றப்படுகின்ற ஆசிரியர்களின் வெற்றிடத்துக்கு புதியவர்கள் நியமிக்கப்படாதமையால் அப்பாடசாலைகளில் மேலதிகமான ஆசிரியர் பற்றாக்குறை ஏற்படுகின்றது.
ஆகையால் இப்பாடசாலைகளில் ஒரு பாடத்திற்குரிய ஆசிரியரே ஏனைய பாடங்களையும் கற்பிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.
இதனால் அந்தந்த பாடங்களை கற்பிக்கின்ற ஆசிரியர்கள் இல்லாதனால் மாணவர்களினது கல்வி பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது.
இடமாற்றம் என்பது ஒரு பாடசாலையில் இருந்து எத்தனை ஆசிரியர்கள் எடுக்கப்படுகின்றார்களோ அதேயளவு ஆசிரியர்கள் அந்த பாடசாலைக்கு நியமிக்கப்பட வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்யாமல் ஆசிரியர் இடமாற்றம் என்ற பெயரில் 5 கல்வி வலயங்கள் இருக்கின்ற போதும் தமிழ் மக்களின் 4 கல்வி வலயத்தில் இந்த இடமாற்றம் சமாந்தரமான மேற்கொள்ளாமல் தமிழ் மாணவர்களின் கல்வியை அழிப்பதற்காக மறைமுகமாக சில இனவாத அதிகாரிகளினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அவ்வாறே கிழக்கு மாகாண தொண்டர் ஆசிரியர் தெரிவிலும் தமிழ் இளைஞர், யுவதிகளுக்கு பெரும் அநீதி இழைக்கப்பட்டது.
கிழக்கு மாகாணத்தில் தமிழர்களுடைய கலை, கலாச்சாரம், பண்பாடுகள், அடையாளங்கள், சமூக கட்டமைப்பு, இனப்பரம்பல், அரச நிர்வாகத்தில் தமிழரின் வகிபாகக் காணிகள் இவை அனைத்தையும் மாற்றியமைக்கும் செயற்பாட்டை மேற்கொள்ளவே இவ்வாறு நடவடிக்கை மேற்கொள்ளப்படுகின்றது. ஆகவே பெற்றோர்கள் மாணவர்களின் கல்வி விடயத்தில் விழிப்பாக இருக்கவேண்டும்” எனவும் அவர் குறிப்பிட்டார்.
தமிழ் மக்களின் கல்வியை சிதைக்க சதி ! தமிழ் மக்கள் விழிப்புடன் இருக்க வேண்டும்
Reviewed by Madawala News
on
May 25, 2018
Rating: