கல்முனை மண் இழந்த மற்றுமொரு ஆளுமை YLS ஹமீட்




கல்முனை மண் பல ஆளுமைகளைப் பெற்றெடுத்திருக்கிறது. கேட்முதலியார் எம். எஸ். காரியப்பர் முதல் YLS ஹமீட் வரை கல்முனைப் பிரதேசம்  கண்ட ஆளுமைகள்; அவரவர் துறைகளில் வல்லவர்களாகத் திகழ்ந்து இப்பிரதேச மக்களுக்கு மாத்திரமின்றி, முழு முஸ்லிம் சமுதாயத்துக்கும்; தங்களால் முடிந்த சமூகப் பணிகளை நிறைவேற்றியதோடு ஒவ்வொருவராக   இறைவனின் அழைப்பை ஏற்று இவ்வுலகத்திற்கு விடைகொடுத்தும்விட்டார்கள். அவர்கள் அனைவரையும் வல்ல இறைவன் பொருந்திக்கொள்ள வேண்டும். 


கல்முனை பெற்றெடுத்த ஆளுமைகளின் வரிசையில் இறுதியாக கல்முனை மண் இழந்த ஆளுமையே மர்ஹும் லுடுளு ஹமீட் ஆவார். கல்முனையில் பிறந்து இப்பிரசே பாடசாலைகளில் கல்வி கற்று சிறந்த ஆங்கில ஆசானாக பதவி வகித்த அவர், பல ஆங்கில பாட  ஆசிரியர்களை இப்பிரதேசத்தில் உருவாக்கியிருக்கிறார். அத்தோடு அவர் பணி முடிந்துவிட வில்லை.


கிழக்கு முஸ்லிம்கள் அரசியல்  தலைமைத்துமின்றி தடுமாறிய கால கட்டத்தில் காலத்தின் நிர்ப்பந்தத்தின் பெயரில் உருவாகிய ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் வளர்ச்சியில் அதன் ஸ்தபாகத் தலைவர் மர்ஹும் எம்.எச்.எம். அஷ்ரபின் அரசியல் பயணத்தில் தன்னை முழுமையாக அர்ப்பணித்தவர் மர்ஹும் ஹமீட். அஷ்ரப் பாராளுமன்ற உருப்பினராகவும், அமைச்சரவை அமைச்சராகவும் பதவி வகித் 1989 ஆம் ஆண்டு முதல் 2000 ஆண்டு வரை அவரின் இணைப்புச் செயலாளராக பதவி வகித்ததோடு அஷ்ரபின் நம்பிக்கைமிக்கவராகவும் விளங்கினார்.


அஷ்ரபின் அரசியல் அடையாளத்தினால் மக்கள் மத்தியில் பிரபல்யம் அடைந்து அந்த மக்களின் வாக்குளைப் பெற்று பதவிக்கு வந்தவர்கள் அப்பதவியினால் தங்களின் செல்வாக்குகளையும், செல்வத்தையும் வளர்த்துக் கொண்டது போன்று மர்ஹும் ஹமீட் செயற்படவில்லை. மாறாக தலைவர் அஷ்ரபின் பணிச்சுமைகளைக் குறைப்பவராகவும் நல்ல நிர்வாகத் திறமையுடையவராகவும் விளங்கினார்.


அஷ்ரபின் மரணத்தின் பின்னர் திசைமாறிய முஸ்லிம் காங்கிரஸை மக்களுக்கான கட்சியாக திசைப்படுத்துவதற்கு முயற்சி செய்து அதில் தோல்வி கண்ட மர்ஹும் ஹமீட், அகில இலங்கை மக்கள் காங்கிஸை ஸ்தாபிப்பதில் அக்கரையுடன் செயற்பட்டு அதன் ஆரம்ப கால வளர்ச்சியுக்கும் முழுமையாக தன்னை அர்ப்பணித்திருந்தார் என்பதை இத்தருணத்தில் ஞாபகமீட்ட வேண்டியுள்ளது. அத்தோடு அக்கட்சியின் ஸ்தாபகச் செயலாளர் என்பதும் சுட்டிக்காட்டத்தக்கது.


இந்நிலையில், சட்டத்துறையில் ஆர்வங்கொண்டு,  இத்துறையில் காலூண்டி சட்ட முதுமாணி வரை பட்டத்தைப் பெற்ற அவர்; தேசிய மட்டத்தில் ஏற்படுகின்ற சட்டவாக்கம் தொடர்பான சட்டப்பிரச்சினைகளின் போது அது தொடர்பாக,  தனது சட்டத்துறை அனுபவம், அறிவினூடாக மக்களை தெளிவூட்டுவதிலும் அவர் தனது வாழ்நாளின் பல மணித்துளிகளை செலவு செய்துள்ளார்கள் என்பதை அவரது பத்திரிகை தொடர் கட்டுரைகள் மற்றும் விழிப்புணர்வு கலந்துரையாடல் காணொளிகள்; என்றும் சாட்சிகளாக விளங்கும். 


பலமிருந்தும் பலவீனர்களாக பாராளுமன்றம் உட்பட பொது மன்றங்களை அலங்கரிக்கும் மக்கள் பிரதிநிதிகளின் செயற்பபடுகளினால் வெறுப்புற்றிருக்கும் மக்கள், மர்ஹும் ஹமீட் போன்றவர்களை இம்மன்றங்களுக்கு அனுப்பி வைப்பதற்கு தவறிவிட்டார்கள் என்பதை அவரின் மரணத்தின் பின்னர்  வரும் சமூகவலைத'தள பதிவேடுகள் புடம்போடுகின்றன. இன்னும், அவரது மரணச் செய்தி கேட்டு அவர் தொடர்பில் பதிவிடப்படும் அனுதாபச் செய்திகள் அவர் சமூகத்தோடு சமூகத்திற்காக வாழ்ந்தவர் என்பதையும் சான்று பகிர்கின்றன.


இந்நிலையில், ஒவ்வொரு ஆத்மாவும் நிச்சம் மரணத்தை சுபீட்சே தீர வேண்டும் ஏன்ற இறைவனின் நியதிக்கு ஏற்ப இம்மண்ணை விட்டு பிரிந்துள்ள மர்ஹும் வை எல் எஸ் ஹமீட் அவர்களின் பாவங்களை மண்ணித்து,  தான தர்மங்கையும், சமூகப் பணிகளையும் ஏற்று மறுவுலுக வாழ்வை வெற்றிகரமாக்கி ஜன்னத்துல் 'பிர்தௌஸ்' எனும் உயர்ந்த சொர்க்கத்தை வல்ல இறைவன் விளங்க பிரார்த்திப்போமாக!. 

எம்.எம்.ஏ ஸமட்

ஊடகவியலாளர்

கல்முனை மண் இழந்த மற்றுமொரு ஆளுமை YLS ஹமீட் கல்முனை மண் இழந்த மற்றுமொரு ஆளுமை YLS ஹமீட் Reviewed by Madawala News on May 25, 2023 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.