சம்மாந்துறை வரலாற்று பாரம்பரியம் கொண்ட ஒரு ஊராகும். இதன் பாராளுமன்ற பிரதிநிதித்துவம் கேள்விக்குட்படுத்தப்படுவது வழமையாக இருந்து வருகிறது. இதனை இன்னுமின்னும் தொடர அனுமதிக்க முடியாது. இந் நிலைக்கான காரணங்கள் கண்டறியப்பட்டு, அவைகள் சீர் செய்யப்பட வேண்டும் என்பதை சம்மாந்துறையில் பிறந்த யாவரும் ஏற்பீர்கள் என நம்புகிறேன்.
இந் நிலைக்கான பிரதான காரணங்கள் பற்றி ஆராயும் போது, எமது ஊரின் வாக்குகளை வெளியூருக்கு, தங்களது சொந்த சுயநலனுக்காக தாரைவாக்கும் தரகர்கள் பிரதானமானவர்கள். இவர்கள் இரு கட்சிகளிலும் மலிந்தே உள்ளனர். இவர்கள் முதலாவது களையெடுக்கப்பட வேண்டும்.
எதிர்வரும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் மொட்டை முரட்டுத்தனமாக ஆதரித்த ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் கரங்களை பலப்படுத்தும் நோக்கில், ஒரு புதிய கட்சியில் போட்டியிட சிலர் தயாராகி வருகின்றனர். இதில் சிலரை சம்மாந்துறையிலும் அவதானிக்க முடிகிறது. இதில் பிரதானமாக இருக்கும் ஒருவர் கடந்த பாராளுமன்ற தேர்தலிலும் எமது வாக்குகளை வெளியூர் நபர்களுக்கு தாரை வார்த்த தரகரே! அவை பற்றி பொருத்தமான நேரத்தில், ஆதாரங்களோடு பேசலாம் என்றுள்ளேன்.
அக் குறித்த பாராளுமன்ற உறுப்பினர் எதிர்வரும் தேர்தலில் பாராளுமன்றம் செல்வதே கேள்விக்குறி! சாத்தியமில்லை என்றாலும் தவறாகாது. இந் நிலையில் எமது ஊர் வாக்குகளையும் அவருக்கு பெற்றுக்கொடுக்க முயல்வது துரோகத்தின் உச்சமாகும். எமதூரை சேர்ந்த யாராவது தெரிவாக வாய்ப்பிருந்தால் இது பற்றி நாம் அலட்டிக்கொள்ள தேவையில்லை. அவருக்கே சாத்தியம் குறைவாக உள்ள போது, எமதூரை சேர்ந்த ஒருவாரால் முடியவே முடியாது.
இத் தேர்தலின் மூலம் அவரை எமது சம்மாந்துறையின் வாக்கு தரைக்குள் சிலர் மேய விட போகிறார்கள். அவர் மேய்ந்து செல்வார். நாம் பாராளுமன்ற ஆசனத்தை மீண்டும் இழப்போம். தரகர்கள் கனடா செல்லலாம். கொந்தராத்து எடுப்பார்கள். பாதிக்கப்படப் போவது அப்பாவி சம்மாந்துறை மக்கள். சம்மாந்துறையின் வாக்குகளை சிதறடிக்கும் தரகர்களை முதலில் மக்கள் இணங்கான வேண்டும், புறக்கணிக்க வேண்டும். அத் தரகர்களை வெளிப்படுத்தும் தேர்தலாக இது அமைய போகிறது.
ஏ.கே மிஸ்பாஹுல் ஹக்,
சம்மாந்துறை.