பிளவுபட்டுள்ள அரசாங்கத்தை ஒன்றிணைக்க மஹிந்தவை பிரதமராக்குவோம் என தீவிர முயற்சிகளில் ஒரு தரப்பினர் களத்தில்...
மஹிந்த ராஜபக்ஷவின் தலைமைத்துவத்தில் மீண்டும் அரசாங்கத்தை பலப்படுத்த ஆளுங்கட்சியின்
ஒரு தரப்பினர் தீவிர முயற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர்.இந்நிலையில் அவரை மீண்டும் பிரதமராக்கி, பிளவுபட்டுள்ள ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவை ஒன்றிணைந்து, பலமான அரசாங்கத்தை முன்னெடுக்க வேண்டும் என அரசாங்கத்தின் சிரேஷ்ட உறுப்பினர்கள் சிலர் ஆலோசித்து வருவதாக தெரிய வருகின்றது.
முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ, முன்னாள் நிதி அமைச்சர் பஷில் ராஜபக்ஷ ஆகியோர் மீதான கோவத்தின் வெளிப்பாட்டை அரசாங்கத்தின் மீது காட்டாது, சகலரும் ஏற்றுக்கொண்ட மஹிந்த ராஜபக்ஷவை மீண்டும் பிரதமராக்கி தற்போது அரசாங்கத்தில் கருத்து முரண்பாடுகளால் பிளவுபட்டுள்ள தரப்பினரை மீண்டும் ஒன்றிணைத்து பலமான அரசாங்கத்தை உருவாக்கும் நகர்வுகளை முன்னெடுக்க வேண்டும் எனவும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.
எதிர்வரும் நவம்பர் மாதம் 18ஆம் திகதி, மஹிந்த ராஜபக்ஷவின் பிறந்தநாள் வருவதாகவும், அதற்கு பின்னர் அவரை தலைமைத்துவத்திற்கு கொண்டுவந்து அரசாங்கத்தில் இருக்கின்ற நெருக்கடிகளை முதலில் தீர்த்துக்கொள்ள வேண்டும் எனவும்,
அரசாங்கம் மீண்டும் ஒன்றிணைந்தால் ஏனைய சவால்களை வெற்றிகொள்ள இலகுவாக இருக்கும் எனவும் தெரிவித்துள்ளனர். தகுதியான நல்ல தலைமைகள் அரசாங்கத்தை விட்டு வெளியேறி, தனித்து நிற்பது அரசாங்கத்துக்கே பாதிப்பு எனவும், ஆகவே மஹிந்த ராஜபக்ஷவை பிரதமராக்கினால் அவர் மீதுள்ள நம்பிக்கையில் சகலரும் மீண்டும் ஒன்றிணைய முடியும் எனவும் தெரிவித்துள்ளனராம்.
அதேபோல் மஹிந்த ராஜபக்ஷவிற்கும் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் நல்ல புரிந்துணர்வு இருக்கின்ற காரணத்தினால் இருவராலும் ஒன்றிணைந்து நாட்டை முன்னெடுத்து கொண்டு செல்ல முடியும் என்ற விளக்கத்தையும் இவர்கள் ஏனைய ஆளுங்கட்சி உறுப்பினர்களிடத்தில் எடுத்துரைத்துள்ளதாக தெரிய வருகின்றது.