பாறுக் ஷிஹான் (ෆාරුක් සිහාන්)
முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து
ரோந்து நடவடிக்கையில் ஈடுபடுவதுடன் பரிசோதனை செயற்பாட்டினையும் அம்பாறை மாவட்டத்தின் பல்வேறு பகுதிகளிலும் முன்னெடுத்துள்ளனர்.
இலங்கையின் அனைத்து நிர்வாக மாவட்டங்கள் மற்றும் அதனுடன் தொடர்புடைய கடற்பரப்புகளில் பாதுகாப்பைப் பேணுவதற்காக நாட்டின் அனைத்து ஆயுதம் தாங்கிய முப்படையினருக்கும் அழைப்பு விடுக்கும் விசேட வர்த்தமானி அறிவித்தல் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ கடந்த திங்கட்கிழமை(22) அன்று வெளியிட்டிருந்திருந்தார்.
இதற்கமைய அம்பாறை மாவட்டத்தில் கல்முனை ,சம்மாந்துறை ,சவளக்கடை ,மத்திய முகாம் பொலிஸ் நிலையங்கள், பெரியநீலாவணை விசேட அதிரடிப்படை மற்றும் கல்முனை இராணுவ மகாம் உள்ளிட்ட இடங்களில் பணியாற்றும் பாதுகாப்பு தரப்பினர் இச்செயற்பாட்டினை முன்னெடுத்துள்ளனர்.
கடந்த சில தினங்களுக்கு முன்னர் நாட்டில் வெகுவாக அதிகரித்துவரும் கொரோனா அலையை கட்டுப்படுத்த இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன் அதன் ஒரு கட்டமாக திடீர் சோதனைகளை முப்படையினர் உள்ளிட்ட பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இத் திடீர் சோதனையில் சாரதி அனுமதிப்பத்திரமின்றி வாகனம் செலுத்துவது, தலைக்கவசம் அணியாது செல்வது, ஒரு மோட்டார் சைக்கிளில் இருவருக்கு மேற்பட்டவர்கள் பயணிப்பது, அதிவேகமாக செல்வது,குடிபோதையில் வாகனம் ஓட்டுவது தொடர்பில் கண்காணிக்கப்பட்டு தண்டப்பணம் விதிக்கப்பட்டு வீதி ஒழுங்குமுறை தொடர்பான ஆலோசனைகள், முகக்கவசம் அணியாது சென்றவர்களின் விபரங்கள் சேகரிக்கப்பட்டு எச்சரிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
முப்படை மற்றும் பொலிஸார் இணைந்து ரோந்து நடவடிக்கை. #அம்பாறை
Reviewed by Madawala News
on
November 28, 2021
Rating: