கொவிட் தடுப்பூசியின் முதல் டோஸ் 82 சதவீதமும், இரண்டாவது
டோஸ் 95 சதவீதமும் கொவிட் உயிரிழப்புகளை தடுப்பதில் பயனுள்ளதாக இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) வெளியிட்ட ஆய்வு முடிவில் தெரியவந்துள்ளது.
இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ஐ.சி.எம்.ஆர்) மற்றும் தேசிய தொற்றுநோயியல் நிறுவனம் (என்.ஐ.இ) இணைந்து, 'தமிழகத்தில் அதிக ஆபத்துள்ள குழுக்களிடையே இறப்புகளைத் தடுப்பதில் கொவிட் தடுப்பூசி செயல்திறன்' என்ற ஆய்வை மேற்கொண்டது. இந்த ஆய்வு முடிவுகள் ஜூன் 21 அன்று இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டன. அதில், தமிழக பொலிஸ் துறை தனது பணியாளர்களுக்கு தடுப்பூசி போடுவதை ஆவணப்படுத்தியிருக்கிறது. இதன்படி தடுப்பூசி செலுத்திய மற்றும் செலுத்தாத தமிழக பொலிசார் குறித்த தகவலின் அடிப்படையில் இந்த ஆய்வு முடிவு வெளியிடப்பட்டுள்ளது.
இது குறித்து ஐ.சி.எம்.ஆர் – என்.ஐ.இ இயக்குனர் டொக்டர் மனோஜ் முர்ஹேகர் கூறுகையில், 'ஒன்று, இரண்டு டோஸ் மற்றும் தடுப்பூசி போடாத பொலிஸ் துறையினரிடையே கொவிட் வைரஸ் காரணமாக ஏற்பட்ட இறப்புகளை மதிப்பிடுவதற்கு இந்த தரவு பயன்படுத்தப்பட்டது.
தமிழகத்தில் பொலிஸ் துறையில் 1,17,524 பேர் பணியாற்றுகின்றனர். இவர்களில் பெப்ரவரி 1 முதல் மே 14 வரை 32,792 பொலிசார் முதல் டோஸ் தடுப்பூசியை பெற்றனர். 67,673 பேர் 2வது டோஸைப் பெற்றனர். 17,059 பேர் எந்த தடுப்பூசியையும் பெறவில்லை. இந்த பொலிசாரிடையே ஏப்ரல் 13, 2021 முதல் 2021 மே 14 வரை 31 கொவிட் மரணங்கள் பதிவாகியுள்ளன.
இறந்த 31 பேரில், நான்கு பேர் இரண்டு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள். 7 பேர் ஒரு டோஸ் தடுப்பூசி செலுத்திக்கொண்டவர்கள் மற்றும் மீதமுள்ள 20 பேர் தடுப்பூசி செலுத்திக் கொள்ளாதவர்கள். இந்த தரவுகளின் அடிப்படையில் ஆய்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளன எனக் கூறினார்.