“கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி மரணிப்போரின் சடலங்களை தகனம் செய்வதா, அல்லது அடக்கம் செய்வதா?
என்பது தொடர்பில், ஆராய்ந்து அறிக்கையிட்டிருக்கும் விசேட நிபுணர் குழுவின் அறிக்கையில், அரசியல்வாதிகள் தலையிட முடியாது” என, கிராமிய வீதிகள் மற்றும் பிற உட்கட்டமைப்பு வசதிகள் இராஜாங்க அமைச்சர் நிமல் லன்சா தெரிவித்துள்ளார்.
காலி மாவட்ட உட்கட்டமைப்பு வசதிகள் அபிவிருத்தி குழுக் கூட்டம், நேற்று (10) நடைபெற்றது. அக்கூட்டம் நிறைவடைந்ததன் பின்னர், ஊடகவியலாளர்களிடம் கருத்துத் தெரிவித்த போதே, மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,
விசேட நிபுணர் குழுவின் அறிக்கையிலுள்ள பரிந்துரைகளுக்கு, நாங்கள் இணங்குகின்றோம் எனத் தெரிவித்துள்ள அவர், அந்தத் தீர்மானத்தில் அரசியல்வாதிகள் தலையிடக் கூடாது என்றார்.
சர்வதேச விமான நிலையங்கள் இரண்டும் வர்த்தக விமானங்கள் தரையிறங்குவதற்காக, ஜனவரி 22ஆம் திகதி திறக்கப்படவுள்ளன. இந்த விமானநிலையங்கள் ஊடாக, வர்த்தக விமானங்களில் இலங்கைக்கு வருகை தருபவர்களுக்காக, சுகாதாரப் பிரிவினரின் ஆலோசனைக்கமைய அவர்களை ஹோட்டல்களில் தங்க வைப்பதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க எதிர்பார்த்துள்ளோம் என்றார்.
அதேபோல, இலங்கையர்கள் 68,000 பேர், நாட்டுக்குத் திரும்பிவரும் எதிர்பார்ப்புடன் உள்ளனர். எதிர்வரும் 22ஆம் திகதிக்குப் பின்னர், விருப்பமான விமானங்களில் இலங்கை திரும்பி வரக்கூடிய ஏற்பாடுகளை, அவர்களுக்கும் செய்து கொடுப்பதே எமது நோக்கம் என்றார்.