(எச்.எம்.எம்.பர்ஸான்)
படித்து விட்டோம், பட்டம் பெற்று விட்டோம், தொழில் எடுத்து
விட்டோம் என்பதனால் கல்வி முடிந்து விட்டது என்று யாரும் எண்ணிவிட வேண்டாம். கற்றுக் கொள்ள இவ்வுலகில் நிறைய விடயங்கள் உள்ளது என்று மட்டக்களப்பு மத்தி வலயக் கல்விப் பணிப்பாளம் டாக்டர் எஸ்.எம்.எம்.எஸ். உமர் மௌலானா தெரிவித்தார்.
பாடசாலைகளில் இணைத்துக் கொள்வதற்காக பட்டதாரி பயிலுனர்களுக்கு நியமனக் கடிதங்கள் வழங்கும் நிகழ்வு அண்மையில் வாழைச்சேனை அந்நூர் தேசிய பாடசாலையில் நடைபெற்றது. அதில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் அங்கு தொடர்ந்தும் பேசுகையில்,
இந்த உலகத்தில் நாம் மிளர வேண்டுமாக இருந்தால் ஏனைய கற்கைகளை கற்க வேண்டும் நாம் இன்று இருந்ததை விட நாளை எவ்வாறு இருக்கப் போகிறோம் என்பதை தீர்மானிக்க வேண்டும். அப்போதுதான் நம் வாழ்வில் நல்லதே நடக்கும்.
உங்களுடைய எண்ணம்தான் வாழ்க்கை. நீங்கள் வித்தியாசமாக நினைத்து மற்றவர்களுக்கு குழிபறிக்க வேண்டும் மற்றவர்களுக்கு கிடைப்பதை தட்டிப் பறிக்க வேண்டும் என்று நினைத்தால் இறைவன் உங்களுக்காக தர இருக்கிற விடயங்களை தராமல் விடலாம். அது கூட உங்களுக்கு இறைவன் தரும் தண்டனையாகத்தான் நான் பார்க்கிறேன்.
முதலில் உங்களைப் பற்றி சிந்தியுங்கள். நாம் வாழ்க்கையில் எவ்வாறு சாதனைகள் படைக்கலாம் என்பதைப் பற்றி சிந்தியுங்கள்.
உலகம் விரிந்து கிடக்கிறது. அதில் கல்வி விரிந்து கிடக்கிறது. நீங்கள் கல்வியை தேடிக் கற்பதின் ஊடாக இவ்வுலகில் சாதனைகள் படைக்கலாம்.
இன்று உலகில் சாதனை படைத்தவர்கள் எல்லாம் ஏதோ ஒரு வகையில் மனிதர்களால் ஒதுக்கப்பட்டவர்கள்தான்.
எனவே, உங்களுக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை சரியான முறையில் பயன்படுத்தி மொழிகளை கற்றுக் கொள்வதிலும் ஏனைய கற்கைகளை கற்றுக் கொள்வதிலும் ஆர்வம் செலுத்துங்கள் அது உங்களை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்லும் என்றார்.
இவ்வுலகில் மிளிர வேண்டுமாக இருந்தால் கற்றலில் அதிகம் ஆர்வம் காட்ட வேண்டும்.
Reviewed by Madawala News
on
January 25, 2021
Rating: