கொரோனா வைரஸ் இனம், மதம், குலம், அரசியல் உள்ளிட்ட எந்தவொரு பாகுபாடுமின்றி யாருக்கும் தொற்றக் கூடியது.
கொரோனா-19 நோய் தொற்று என்பது, உலகளவில் வியாபித்துள்ள தொற்று நோயாகும். அது, எந்தவொரு மனிதனையும்
தொற்றுமெனத் தெரிவித்துள்ள இராஜாங்க அமைச்சர் சுதர்சினி பெர்ணான்டோ புள்ளே, அந்தத் தொற்று நாளை, உங்களுக்கும் தொற்றுவதற்கு வாய்ப்புள்ளது என்றார்.'சுகாதார அலுவலக சபையில் பணியாற்றியவர்கள் மட்டுமன்றி, விசேட வைத்திய நிபுணர்களுக்கும் இந்தக் கொரோனா வைரஸ் தொற்றியுள்ளது. அபிவிருத்தியடைந்த நாடுகளின் தலைவர்களுக்கும் தொற்றியுள்ளது. எனவே, கொரோனா வைரஸ் தொற்று இனம், மதம், குலம், அரசியல் உள்ளிட்ட எந்தவொரு பாகுபாடுமின்றி எவரையும் தொற்றக் கூடியதென்றும் அதன் நிலையை உணர்ந்து, அதிலிருந்து பாதுகாப்புப் பெற நடவடிக்கை எடுப்பது அனைவரது கடமையாகும்' எனக் குறிப்பிட்டுள்ளார்.
அத்துடன், கொரோனா வைரஸ் ஒழிப்புக்கு எதிராக, அர்ப்பணிப்புடன் செயற்பட்ட சுகாதார அமைச்சர் பவித்ரா, விரைவில் குணமடைய வேண்டி பிரார்த்திப்பதாகவும் தனது பேஸ்புக்கில் பதிவிட்டுள்ளார்.
சுகாதார அமைச்சராகப் பதவியேற்றவுடனே அவர் எதிர்நோக்கிய மிகப் பெரிய சவால், கொவிட்-19 நோய் என்பதுடன், அந்த நோய் பீடித்தவர்களை, சமூக வலைத்தளங்களில் கேலிக்குரியதாகவும், அவமதித்துச் சிலர் அரசியல் ரீதியாக முன்னெடுக்கும் செயற்பாடுகள் அருவருக்கத்தக்கதாகும். அவை, கண்டிக்கப்பட வேண்டியவை எனத் தெரிவித்துள்ள அவர், இத்தகைய சந்தர்ப்பத்தில் மனித நற்பண்புகளை அறிந்த எவரும் இதுபோன்ற விடயங்களை ஏற்றுக்கொள்ளமாட்டார்கள் எனக் குறிப்பிட்டுள்ளார்.