(அன்சார் எம்.ஷியாம்)
எல்லோரும் வந்து ஜனாஸாவைப் பார்ப்பது, ஜனாஸாத்
தொழுவது என்பதை விட நாட்டில் தற்போது நிலவும் கொவிட் 19 சட்ட திட்டங்களை மதித்து நடப்பதுவே மிகவும் முக்கியமான விடயம் என்று அகில இலங்கை ஜம்இய்யத்துல் உலமா சபையின் தலைவர் ரிஸ்வி முஃப்தி அவர்கள் தெரிவித்தார்.
அண்மையில் மடவளை பஸார் ஜாமிஉல் கைராத் ஜும்மாப் பள்ளிவாயிலின் தலைவர் மர்ஹும் ஹம்ஸா ஹாபிஸ் அவர்களின் ஜனாஸா நல்லடக்க நிகழ்வில் உரையாற்றும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.
ஜனாஸாவுக்கான கடமைகளை குறிப்பிட்ட சிலர் கலந்து கொண்டு நிறைவேற்றினாலே போதுமானது. ஆனால், நாட்டில் தற்போது இருக்கின்ற சூழ்நிலையில் நாம் கவனமாகவும் பேணுதலோடும் நடந்து கொள்வதே சிறந்தது என்றார்.
தொடர்ந்தும் உரையாற்றும் போது- மர்ஹும் ஹம்ஸா ஹாபிஸ், பதினைந்து வயது முதலே பல தியாகங்களோடும் அர்ப்பணிப்போடும் ஏழெட்டு வருடங்களாக அல்குஆனைக் கற்று, அதற்காக உழைத்த ஒரு மகான்.
ஆரம்ப நாட்களில் அல்குர் ஆனை மனனஞ் செய்யச் சற்று சிரமப் பட்ட போதும்- அவரது ஆசிரியர்களே அவரை குர்ஆனை மனனம் செய்வதை விட்டு, மெளலவி பட்டப் படிப்பை மட்டும் தொடருமாறு வேண்டிக் கொண்ட போதும் கூட- அதனை மனனம் செய்தே ஆகுவது என்ற வைராக்கியத்துடன் அதனை மனனம் செய்தார்.
மிகவும் பணிவுடைய, நல்ல பண்புகளைக் கொண்ட ஒரு சிறந்த மனிதராக விளங்கியதோடு- தனக்கு கொடுக்கப் படும் பொறுப்புக்களை சரிவர நிறைவேற்றும் தன்மை கொண்டவராகவும் இருந்தார்.
மேலும் ஹம்ஸா ஹாபிஸ் போன்ற நல்ல மனிதர்களைப் பெற்றிருப்பது பாக்கியமே. இவ்வாறானவர்களின் ஆயுளை அல்லாஹ் தஆலா நீடித்து வைக்க வேண்டும்.
அவருடைய மறுமை வாழ்வும் சிறப்பாய் அமைய வேண்டும். அன்னாருடைய குடும்பத்தவர்க்கு அல்லாஹ் பொறுமையை வழங்குவானாக என்றும் குறிப்பிட்டார்.
ஜனாஸாவுக்குரிய கடமைகளை நிறைவேற்ற சிலர் போதும். கொவிட் 19 சட்ட திட்டங்களை மதித்து நடப்பதே முக்கியம்.
Reviewed by Madawala News
on
October 27, 2020
Rating: