கடந்த அரசில் பலமிக்க அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் ஏமாற்றுவித்தைகளையே மக்கள் மத்தியில் செய்தனர்.
( றம்ஸீன் மொஹமட்)
கடந்த அரசில் பலமிக்க அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் ஏமாற்றுவித்தைகளையே
மக்கள் மத்தியில் செய்தனர். தேர்தல் மேடைகளில் கூறியது போன்று நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளிக்கும் எவ்வித நடவடிக்கைகளையும் செய்ய அவர்கள் முன்வரவில்லை என தேசிய காங்கிரசின் பிரதி தேசிய அமைப்பாளரும், அக்கரைப்பற்று பிரதேச சபை தவிசாளருமான எம்.ஏ. றாஸீக் குற்றம் சாட்டினார்.
இன்று (22) மாலை நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு பேசிய அவர் தொடர்ந்தும் பேசுகையில்,
இருவருடங்களுக்கு முன்னர் நுரைச்சோலையில் தீப்பிடித்துக்கொண்ட போது மாநகரசபை உதவியுடன் தீயணைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தேன். அப்போது அந்த வீட்டுத்திட்டம் மரங்கள் வளர்ந்து பற்றைக்காடாக இருந்ததை கண்டதும் மிகவும் கவலையடைந்தேன். சவுதி அரசினால் செய்யப்பட்ட இந்த உதவி மக்களுக்கு உபயோகமில்லாது இருப்பது வேதனையளிக்கிறது.
குறித்த பிரதேசத்தின் தவிசாளராக நானும் பிரதேச செயலாளரும் அரச அதிபரை சந்தித்து இதுதொடர்பில் பேசிய போது நீதிமன்றத்தை மதித்து செயலாற்ற வேண்டிய தேவை இருப்பது உணரப்பட்டது. ஆனால் கடந்த அரசாங்கத்தை நான்கு ஐந்து வருடங்கள் முஸ்லிம் காங்கிரஸும், மக்கள் காங்கிரசும் தாங்கிப் பிடித்துக்கொண்டிருந்த போது அவர்கள் நினைத்திருந்தால் அந்த நுரைச்சோலை வீட்டுத்திட்டத்தை மக்களிடம் கையளித்திருக்க முடியும். அதை அவர்கள் செய்யவில்லை. குறைந்தது அந்த பிரதேசத்தை சுத்தம் செய்யக்கூட முடியாமல் வீணாக தேர்தல் மேடைகளில் நுரைச்சோலை வீட்டுத்திட்டம், வட்டமடு காணி, கரும்பு நிலம் போன்றவற்றை கூவி வாக்கு சேகரிக்க மட்டுமே செய்தனர்.
நான் சுட்டிக்காட்டிய எனது பிரதேச பிரச்சினைகளை தீர்த்துவைக்கும் நடவடிக்கைகளை ஏற்கனவே நாங்கள் ஆரம்பித்து செய்துகொண்டிருக்கிறோம். கூடிய விரைவில் மக்கள் ஆணையுடன் அதிகாரத்தை பெற்று எங்களுடைய கட்சி தலைவர் செய்துமுடிப்பார் எனும் நம்பிக்கை எங்களுக்கு இருக்கின்றது என்றார்.
கடந்த அரசில் பலமிக்க அமைச்சர்களாக இருந்த முஸ்லிம் அமைச்சர்கள் ஏமாற்றுவித்தைகளையே மக்கள் மத்தியில் செய்தனர்.
Reviewed by Madawala News
on
May 23, 2020
Rating: