புத்தளம் பிரதேச மக்களின் முக்கிய பிரச்சினையான அறுவைக்காடு கழிவு பிரச்சினையை தான் ஜனாதிபதியானவுடன்
முற்றாகத் தீர்த்து வைப்பேன் என புத்தளம் மக்களுக்கு புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச கூறினார்.
புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளரான சஜித் பிரேமதாச நேற்று (11) ஆனமடுவ பிரதேசத்தில் நடைபெற்ற பிரசாரக் கூட்டத்திலேயே இதனைத் தெரிவித்தார். புத்தளம் ஊடாக அநுராதபுரம் வரையான அதிவேகப் பாதையையும் மகவெவயிலிருந்து புனித ஆனா தேவாலயத்திற்கு புகையிரதப் பாதையொன்றையும் நிர்மாணிக்கவுள்ளதாகவும் தெரிவித்தார். அங்கு தொடர்ந்து பேசிய அவர், பலவகையிலும் அரசியல் பழிவாங்கல்களுக்குள்ளான அனைத்து மக்களுக்கும் ஜனாதிபதியாகி ஒரு மாதத்துக்குள் சலுகைகளை பெற்றுக் கொடுப்பதாகவும் தெரிவித்தார்.
பொதுமக்களை அரசர்களாக்கும் மக்கள் யுகமொன்று நவம்பர் 16ம் திகதிக்குப் பின்னர் உருவாகுமெனவும் மக்களின் வாழ்க்கையை பாதிக்கும் பிரச்சினைகளுக்கு தீர்வு கண்டு நாடுபூராவும் பாரிய அபிவிருத்தியை மேற்கொள்வதே தனது முக்கிய நோக்கமென்றும் தெரிவித்தார்.
அக்கூட்டத்தில் பேசிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, இளைஞர் சமுதாயத்தின் வேலைவாய்ப்பு பிரச்சினையை தீர்ப்பதற்காக கோட்டாபய ராஜபக்ஷவின் கொள்கை பிரகடனத்தில் எவ்வித திட்டங்களும் இல்லையென கூறிய அவர், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்த நாடுபூராகவும் கைத்தொழில் பேட்டைகளை அமைக்கவுள்ளதாகவும் பிரதமர் தெரிவித்தார்.
நாம் இளைஞர்களின் வேலைவாய்ப்பு பிரச்சினைகளை தீர்க்க பாரிய திட்டங்களை செயல்படுத்தியுள்ளோம். கண்டியிலிருந்து கொழும்புக்கு, கொழும்பிலிருந்து ஹம்பாந்தோட்டைக்கு பெருந்தெருக்களை அமைக்கவுள்ளோம். அன்று கப்பல் இல்லாத ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை அபிவிருத்தி செய்துள்ளோம். கட்டுநாயக்க, மத்தள, யாழ்ப்பாண விமான நிலையங்களை அபிவிருத்தி செய்துள்ளளோம்.
ஹம்பாந்தோட்டை, திருகோணமலை, கொழும்பு துறைமுகங்களை அபிவிருத்தி செய்து அதன் மூலம் இளைஞர் யுவதிகளுக்கு வேலை வாய்ப்பை ஏற்படுத்திக்கொடுப்போம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
அறுவைக்காடு குப்பை பிரச்சினைக்கு நான் ஜனாதிபதியானதும் உடனடி தீர்வு
Reviewed by Madawala News
on
November 12, 2019
Rating: