ஜனாதிபதித் தேர்தலில் சஜித் பிரேமதாச வெற்றி பெறுவது உறுதியாகியுள்ளதாக புதிய ஜனநாயக முன்னணி
தேர்தல் செயற்பாட்டுப் பிரிவு பிரதானியும் ஐ.தே.கவின் முன்னாள் செயலாளருமான திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
சஜித் பிரேமதாசவின் வெற்றி உறுதியாகியுள்ளதைப்பொறுக்க முடியாத குழுவினர் சமூக ஊடகங்களினூடாக அவரை அவமதிக்க முயல்வதாக குறிப்பிட்ட அவர்,சேறுபூசும் கீழ்த்தரமான அரசியலை விடுத்து எதிர்கால திட்டம் தொடர்பில் கோட்டாபயவுடன் விவாதம் நடத்த சஜித் பிரேமதாச தயாராக இருப்பதாகவும் தெரிவித்தார்.
புதிய ஜனநாயக முன்னணி தேர்தல் செயற்பாட்டு பிரதான அலுவலகத்தில் நேற்று நடைபெற்ற ஊடக மாநாட்டில் கருத்துத் தெரிவித்த அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவாக முன்னெடுக்கப்படும் தேர்தல் பிரசார பணிகளில் பாரிய முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது.ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் நடத்தப்பட்ட கருத்துக் கணிப்புகளின் பிரகாரம் சஜித் பிரேமதாச வெற்றிபெறுவது உறுதியாகியுள்ளது. பல்கலை , தனியார் கருத்துக் கணிப்புகளில் ஊர்ஜிதம் ஆகி உள்ளது.
அண்மைக்காலத்தில் செயற்பட்ட வெற்றிகரமான அமைச்சரான அவர் வீடமைப்பு அமைச்சராக சிறப்பாக செயற்பட்டார்.அவருக்கு வீடு கட்ட மாத்திரம் தான் தெரியும் என சிலர் குற்றஞ்சாட்டுகின்றனர். அவருக்கு வீடுகட்டும் அமைச்சு தான் வழங்கப்பட்டது. பல வீடமைப்பு திட்டங்களை அவர் சிறப்பாக முன்னெடுத்தார்.
நாட்டை கட்டியெழுப்பவும் ,சட்டம் ஒழுங்கை பேணவும் எடுக்கும் நடவடிக்கைகள் பற்றியும் எதிர்கால திட்டங்கள் தொடர்பாகவும் கோட்டாபயவுடன் விவாதம் நடத்த சஜித் பிரேமதாச தயாராக இருக்கிறார்.சேறு பூசுவதை விடுத்து நேரடி விவாதத்திற்கு வருமாறு கோருகிறோம்.பெப்ரல் நடத்திய அனைத்து வேட்பாளர்களுடனான மாநாட்டிலும் கோட்டாபய கலந்து கொள்ளவில்லை.
கோத்தாபயவை விட சஜித் முன்னணியில் இருக்கிறார். சஜித்தின் கொள்கை பிரகடனம் இம்மாத இறுதிக்குள் வெளியிடப்படும். இளைஞர், பெண்கள், விவசாயிகள் உட்டப 5 பிரகடனங்களில் அவர் கையொப்பமிட இருக்கிறார். வன்முறை, அவமதிப்பு என்பவற்றினூடாக தேர்தலில் வெற்றிபெற முடியாது. சஜித்துடன் பெருமளவு சு.க அமைப்பாளர்கள் மற்றும் ஆதரவாளர்கள் இணைந்து வருகிறார்கள். சு.கவை பாதுகாக்க எம்முடன் இணைய வருமாறு கோருகிறோம் என்றார்.
சம்ஸ் பாஹிம் ( Thinakaran)
சஜித் பிரேமதாசவின் வெற்றி நிச்சயம் : திஸ்ஸ அத்தநாயக்க தெரிவித்தார்.
Reviewed by Madawala News
on
October 22, 2019
Rating: