ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாகக் கூறப்படும் இரு பிரதான அரசியல்வாதிகளின் இணையத்தளங்கள்
முடக்கப்பட்டு மாற்றி அமைக்கப்பட்டுள்ளன. இணையத்தள தாக்குதல் நடத்துவோரே இதைச் செய்துள்ளனர். இதனால் அந்த இணையத்தளங்களுக்கு செல்வோர் குழப்பங்களுக்குள்ளாகி உள்ளனர்.
ஐக்கிய தேசியக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் என பெரிதும் எதிர்பார்க்கப்படும் அமைச்சர் சஜித் பிரேமதாசவின் www.sajithpremadasa.com என்ற இணையத்தளத்துக்கு விஜயம் செய்வோர் www.gota.lk என்ற இணையத்தளத்துக்கு கொண்டு செல்லப்படுகின்றனர். அதேபோல் gotabayarajapakse.com என்ற இணையத்தளத்துக்குச் சென்றால் அது சிறைச்சாலை திணைக்களத்தின் அதிகாரபூர்வ இணையத்தளங்களுக்கு கொண்டு செல்லப்படுகிறது. இதனால் நேற்றுப் பலர் குழப்பமடைந்தனர்.
அமைச்சர் சஜித் பிரேமதாசவின் பேச்சாளர் ஒருவர் இது பற்றிக் கூறும் போது, சஜித் பிரேமதாசவின் பெயரைக் கொண்ட மேற்படி இணையத்தளம் தங்களால் செயற்படுத்தப்படவில்லை என்றும் அந்த இணையத்தளம் விற்பனைக்குள்ள ஒன்று என்றும் குறிப்பிட்டார்.
இந்த இணையத் தளத்துக்கும் தங்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்று கூறிய அவர், இது தொடர்பில் எந்தக் கருத்தையும் கூறுவதற்கில்லை என்றும் கூறினார்.
எவ்வாறெனினும் தாம் சஜித்தின் அதிகாரபூர்வ இணையத்தளமொன்றை விரைவில் ஆரம்பிக்கப் போவதாகவும் தெரிவித்தார்.
எனினும் சஜித் பிரேமதாசவின் பெயரையுடைய இணையத்தளம் அமைச்சர் சஜித் பிரேமதாசவுக்கு பாதிப்பை ஏற்படுத்தலாம் என்பதால் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்கவுள்ளதாகவும் கூறினார்.
இந்நிலையில் கோத்தபாய ராஜபக்ஷவின் இணையத்தளத்துக்கு விஜயம் செய்தவர்கள் சிறைச்சாலை திணைக்களத்தின் இணைய தளத்துக்கு அழைத்துச் செல்லப்பட்ட விவகாரம் தொடர்பாக தெரிந்து கொள்ள முயற்சித்த போதும் அதனுடன் சம்பந்தப்பட்ட எவரையும் தொடர்பு கொள்ள முடியாமற் போய்விட்டது.
பிரதான இரு அரசியல்வாதிகளின் இணையத்துக்குள் ஊடுருவி முடக்கம். ஹேக்கர்ஸ் கைவரிசை .
Reviewed by Madawala News
on
August 15, 2019
Rating: