கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பபுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு : அசாத்சாலி வாக்குமூலம்.
முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பபுக்குமிடையில்
நெருங்கிய தொடர்பு இருந்தது. தௌஹீத் ஜமாஅத்தின் தவறான செயற்பாடுகள் குறித்து பேசிய காரணத்தினால் தான் நான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டுமல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என வலியுறுத்தினர். 500 மில்லியன் ரூபாய் பணம் தருவதாக பேரம்பேசினர் என நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் நேற்று (11) வாக்குமூலம் வழங்கிய முன்னாள் ஆளுநர் அசாத் சாலி குறிப்பிட்டார்.
21 ஆம் திகதி இடம்பெற்ற ஈஸ்டர் தாக்குதல் குறித்து விசாரணை நடத்தி நாடாளுமன்றத்துக்கு அறிக்கை சமர்ப்பிக்க நியமிக்கப்பட்ட நாடாளுமன்ற விசேட தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க அழைக்கப்பட்ட மேல் மாகாண முன்னாள் ஆளுநர் மொஹம்மத் அசாத் சாலி இவ்வாறு வாக்குமூலம் வழங்கினார். அவரது சாட்சியம்,
நான் அசாத் சாலி, இன்று நாட்டில் ஆட்சி ஒன்று இருக்கிறதா இல்லையா என தெரிந்து கொள்ள முடியாத காலகட்டத்தில் என்னை சாட்சியத்துக்கு அழைத்துள்ளீர்கள். எது எவ்வாறு இருந்தாலும் நான் எனது நன்றிகளை தெரிவித்துக் கொள்ள விரும்புகின்றேன். நான் ஒரு அடிப்படைவாதி என்ற ரீதியில் எனது பதவி பறிக்கப்பட்டுள்ளது. ஆனால் நான் பல தடவைகள் இது குறித்து உண்மைகளை வெளிப்படுத்தியுள்ளேன். கடந்த 2014ஆம் ஆண்டிலிருந்து இது குறித்த பல தடவைகள் கருத்துக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
ஸஹ்ரான் காத்தான்குடியை கைக்குள் வைத்திருந்தார். அவரது நகரமாகவே அது இருந்தது. பொலிஸார் கூட செல்ல முடியாத சூழ்நிலையே காத்தான்குடியில் காணப்பட்டது. அதுமட்டும் அல்ல கடந்த பொதுத் தேர்தலில் ஹிஸ்புல்லாஹ்வுக்கும் ஸஹ்ரானுக்கும் இடையில் தொடர்புகள் காணப்பட்டன. அவர் தேர்தலுக்கு உதவினார். இதற்குக் காரணமும் காத்தான்குடியில் ஸஹ்ரானின் பலமே . சில உடன்படிக்கைகளை செய்துகொண்டு தேர்தலுக்காக ஸஹ்ரான் ஹிஸ்புல்லாஹ்வுக்கு உதவினார்,
மேலும் கிழக்கில் உள்ள பல்கலைக்கழகம் ஷரிஆ பல்கலைக்கழகம் அல்ல. ஷரிஆவை தவறாக விளங்கிக்கொள்ள வேண்டாம். ஷரியா என்பது எமது வாழ்க்கை. இது குறித்து ஏன் நீங்கள் அனைவரும் தவறான கருத்தைக் கொண்டுசெல்ல முயற்சித்து வருகின்றீர்கள். கிழக்கு பல்கலைக்கழகத்தில் ஷரிஆ பிரிவு உள்ளது. அது தவறில்லை. அதேபோல் ஷரிஆ எமக்கு கண்டிப்பாக வேண்டும். இது உங்களுக்கு அவசியம் இல்லை. ஆனால், எமக்கு ஷரிஆ கண்டிப்பாக வேண்டும். எமது வாழ்க்கையுடன் ஷரியா கலந்துள்ளது. அதனை விடுவித்து வாழ முடியாது. ஏன் நீங்கள் 21ஆம் திகதி தாக்குதலுக்கும் முஸ்லிம் கலாசாரத்துக்கும் இடையில் தொடர்புகளை ஏற்படுத்த முயற்சிக்கின்றீர்கள் எனப் புரியவில்லை. 21ஆம் திகதி தாக்குதலுக்கும் முஸ்லிம் திருமணத்துக்குமிடையில் என்ன தொடர்புகள் உள்ளன? இலங்கையில் நீண்ட காலமாக முஸ்லிம் சட்டம் உள்ளது. அவை இன்று நேற்று உருவாக்கப்பட்ட ஒன்றல்ல. அதனை இப்போது ஏன் நீக்க வேண்டும். முஸ்லிம் சட்டம் எமக்கு அவசியம்.
மேலும் அப்துல் ராசிக் என்ற நபர் இன்னமும் வெளியில் சுதந்திரமாக உள்ளார். இவர் பொலிஸாரின் பாதுகாப்பில் தான் உள்ளார்.கொழும்பில் தான் வாழ்கின்றார். இவர் ஐஎஸ் அமைப்பின் தலைவர் பாக்தாதியின் கருத்துக்களை நியாயப்படுத்தும் வகையில் செயற்பட்டு வருகின்றார். இவர் நேரடியாக பயங்கரவாதத் தாக்குதலில் ஈடுபடாவிட்டாலும் கூட பயங்கரவாதி ஒருவரை ஆதரிப்பதும் பயங்கரவாதம்தான்.
இவர் வெளியில் இருக்கும் வரையில் இலங்கையின் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் உள்ளது என்றே நான் கருதுகின்றேன். உண்மையில் இவர்கள் குறித்து நான் பல தடவைகள் அரச தரப்பினருக்கு அறிவுறுத்தியுள்ளேன். தாக்குதல் நடந்த ஒரு வாரத்துக்கு முன்னரும் நான் ஏனைய எமது சமூகத்தினர், சிவில் அமைப்பினரை அழைத்துக்கொண்டு பாதுகாப்புச் செயலாளர் மற்றும் பாதுகாப்பு அதிகாரிகளை சந்தித்து உரிய காரணிகளை தெரிவித்தேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை. பொலிஸ்மா அதிபருக்கும் ஜனாதிபதிக்கும் கூட நான் கிழக்கில் ஒரு நிகழ்வில் வைத்து தெரிவித்தேன். ஆனால் குற்றவாளிகள் என எம்மையே கருதினரே தவிர உண்மையான குற்றவாளிகளை கண்டறிய எந்த முயற்சியும் முன்னெடுக்கப்படவில்லை. இந்தச் சம்பவம் காரணமாக முழு முஸ்லிம்களும் இன்று விளைவுகளை எதிர்கொள்ள வேண்டியுள்ளது . எனினும் இந்த சம்பவம் இடம்பெற கடந்த 1995 ஆம் ஆண்டு தொடக்கம் இன்றுவரை உள்ள அரசாங்கம் இதற்கு பொறுப்புக்கூற வேண்டும். இந்த அடிப்படைவாதம் என்பது கடந்த 2000ஆம் ஆண்டில் இருந்து தெரிவித்துள்ளேன்.அப்போதில் இருந்து ஐந்து பாதுகாப்பு செயலாளர்கள் இருந்தனர்.
அவர்களுக்கு நான் உரிய காரணிகளை வழங்கினேன். எவரும் கருத்தில் கொள்ளவில்லை. பொலிஸில் பல முறைப்பாடுகளை நாம் செய்தோம். முன்னைய ஆட்சியாளர்கள் காலத்தில் காத்தான்குடியில் ஐ.எஸ் அமைப்பு பலமாக செயற்படுகின்றது என நான் அன்றைய பாதுகாப்புச் செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் ஏனைய அதிகாரிகளுக்கும் தெரிவித்தேன். ஆனால் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தேசிய தௌஹீத்ஜமா அத் அமைப்புக்கும் இடையில் நெருங்கிய தொடர்பு இருந்தது. நான் தௌஹீத்ஜமா அத் குறித்து பேசிய காரணத்தினால் தான் கைது செய்யப்பட்டேன். அதுமட்டும் அல்ல, இவர்கள் குறித்து வாய் திறக்க வேண்டாம் என எனக்கு அறிவுறுத்தினர். 500 மில்லியன் ரூபா பணமாக தருவதாக பேரம்பேசினர். தேர்தலில் களமிறங்குவதாக இருந்தாலும் இதில் 200 மில்லியனை செலவழித்துக் கொள்ளவும் ஆலோசனை வழங்கினர்.
கடந்த காலங்களில் இருந்து காத்தான்குடியில் பல அசம்பாவிதங்கள் இடம்பெற்றன. அவை அனைத்துக்கும் ஸஹ்ரானே காரணமாக இருந்தார், இது குறித்து எமது முஸ்லிம் மக்கள் பல முறைப்பாடுகளை செய்தும் பொலிஸார் ஸஹ்ரான் பக்கமே நின்றனர். ஸஹ்ரானை கைதுசெய்ய மக்கள் கிழக்கில் பாரிய ஆர்ப்பாட்டம் செய்தனர். இவை எல்லாம் இரகசியமான விடயங்கள் அல்ல. அனைவருக்கும் இது நன்றாகவே தெரியும். அதேபோல் தேசிய தௌஹீத்ஜமா அத் அமைப்பை தடை செய்ய வேண்டும் என கூறினோம். ஆனால் தேசிய தௌஹீத்ஜமா அத் அமைப்பும் பொலிஸாரும் ஒன்றாகவே செயற்பட்டனர் இதுதான் உண்மை என்றார். Metro
மேலும், உயிர்த்த ஞாயிறு தாக்குதலின் பிரதான சந்தேக நபரான சஹ்ரான் ஹசீமின் தேசிய தவ்ஹித் ஜமாத் அமைப்பிற்கு முன்னாள் தபால் சேவைகள் மற்றும் முஸ்லிம் விவகார அமைச்சர் ஏ.எச்.எம் ஹலீமின் சகோதரரான சாயிம் என்பவர் உதவி செய்துள்ளதாக மேல் மாகாண முன்னாள் ஆளுனர் அசாத் சாலி தெரிவித்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்ஷவுக்கும் தேசிய தௌஹீத் ஜமாஅத் அமைப்பபுக்குமிடையில் நெருங்கிய தொடர்பு : அசாத்சாலி வாக்குமூலம்.
Reviewed by Madawala News
on
June 12, 2019
Rating: