நியூஸிலாந்தில் இடம்பெற்ற பள்ளிவாயல்கள் மீதான தாக்குதல்களில் இரண்டாவது பள்ளிவாயலான Linwood Masjith மீதான தாக்குதலில் ஒன்பது பேர்கள் உயிரிழந்தனர்.
இங்கு கூடுதலான உயிர்ச்சேதம் ஏற்படாமல் இருக்க அப்துல் அஸீஸ் (48)எனும் (ஆப்கானிஸ்தானிலிருந்து புலம்பெயர்ந்தவர்)செய்த துணிச்சல் மிகு செயல் ஊடகங்களில் வெளியாகியிருக்கிறது.
தாக்குதல்தாரி முதலாவது பள்ளிவாயலுக்குள் ( Al Noor Masjith) நியூஸிலாந்து நேரப்படி 1:40 இற்கு நுழைந்தான் அப்போது அங்கே நூறு பேரளவிலேதான் மக்கள் கூடியிருந்தனர். வழமையாக இங்கே 2 மணிக்குத்தான் இமாம் குத்பா பிரசங்கம் செய்ய மிம்பரில் ஏறுவது வழமை என்கின்றனர்.
இரண்டு பள்ளிவாயல்கள் அவனது இலக்குகளாக இருந்தபடியால் அவன் இவ்வாறான ஒரு நேரத்தை முதலாவது பள்ளிவாயலுக்கும், அங்கிருந்து சுமார் 5 கிலோமீட்டர்கள் தொலைவில் இருக்கும் Linwood பள்ளிவாயலை இரண்டாவது இலக்காக ஜும்ஆ முடிவதற்குள் அடைந்துவிடவும் தெரிவு செய்திருக்க கூடும்.
முதலாவது பள்ளிவாயல் ( Al Noor Masjith) தாக்குதலை நேரடியாக ஒளிபரப்பியவன் இரண்டாவது பள்ளிவாயலை நோக்கி நகரும் போது இடைநடுவே தனது ஒளிபரப்பை நிறுத்திவிடுகிறான். அது அவனது முன்னெச்சரிக்கையினை காட்டுகிறது.
இரண்டாவது பள்ளிவாயலில் துப்பாக்கி ஒலி கேட்டவுடன் பள்ளிவாயல் தாக்குதலுக்கு இலக்காவதை உணர்ந்த அப்துல் அஸீஸ் வெளியே ஓடிவந்து கொலையாளி வாகனத்தரிப்பிடத்தை நோக்கி செல்லும் நேரத்தில் அவனை நோக்கி கிரடிட் கார்ட் இயந்திரத்தை வீசியுள்ளார்.
அப்போது கொலையாளி இவரை நோக்கி துப்பாக்கி பிரயோகம் செய்தபோதும் கார்களுக்குள் ஒழிந்து தப்பியுள்ளார். அவன் மீண்டும் தனது காருக்குள் இருந்து வேறொரு துப்பாக்கியை எடுத்துக்கொண்டு பள்ளிவாயலை நோக்கி சென்றுள்ளான்.
இதற்கிடையில் கொலையாளியிடமிருந்து நழுவி விழுந்த துப்பாக்கியொன்றை அப்துல் அஸீஸ் கையில் எடுத்து இயக்கிய போதும் துரதிஷ்டவசமாக அதில் தோட்டாக்கள் எதுவும் இருக்கவில்லை.
இருந்தபோதும் துணிச்சல்மிக்க அஸீஸ் கொலையாளியை தொடர்ந்து பள்ளிக்குள் சென்ற போது இவரது கையிலிருந்த துப்பாக்கியை கண்டவன் பதட்டத்துடன் பள்ளியைவிட்டு ஓட்டமெடுத்துள்ளான்.
அஸீஸின் இந்த துணிச்சல்மிகு நடவடிக்கையால் உயிர்ச்சேதங்கள் குறைந்ததாக Linwood பள்ளிவாயலின் இமாம் தெரிவித்துள்ளார்.
இது போன்றே முதலாவது பள்ளிவாயலிலும் ஒரு பாகிஸ்தானியர் கொலையாளியை தடுக்க முற்பட்டு போராடி மடிந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. அவருக்கு பாகிஸ்தான் உயர்ந்த கெளரவத்தை வழங்கப்போவதாக பிரதமர் இம்ரான்கான் அறிவித்துள்ளார்.
எதிரி நம்மை கொல்ல வருகிற போது அவனை எதிர்கொள்வதும், போராடி மடிவதும் இஸ்லாம் கற்றுத்தந்த உன்னத போதனைகளின் வழிவந்த பயிற்சிகளாகும்.
அதனையே எமது சகோதரர்கள் நிராயுதபாணிகளாக இருந்த போதும் செய்திருக்கிறார்கள்.
எல்லாம் வல்ல இறைவன் அவர்கள் அனைவரையும் பொருந்திக்கொள்வானாக.
– முஜீப் இப்ராஹிம் –
– முஜீப் இப்ராஹிம் –
துணிச்சல்மிகு வீரன்: அப்துல் அஸீஸ்.
Reviewed by Madawala News
on
March 17, 2019
Rating: