குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதல்.. ஒருவர் பலி. மூவர் காயம்.
வலப்பனை, கீர்த்திபண்டாரபுர ஊருமடை கிராமத்தில், இரு குழுக்களுக்கு இடையே நேற்று (19) இரவு ஏற்பட்ட மோதலில், ஒருவர் ஸ்தலத்திலேயே பலியாகியதுடன், மேலும் மூவர் பலத்தக் காயங்களுடன் நுவரெலியா மாவட்ட வைத்தியசாலை, கண்டி வைத்தியசாலை ஆகிய வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
சம்பவத்தில் ரிகலகஸ்கட ஹக்கீரியகம பகுதியைச் சேர்ந்த எச்.எம்.சமன்குமார (வயது 26) என்ற இளைஞரே பலியாகியுள்ளார்.
இது தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, ஹக்கீரியகம பகுதியைச் சேர்ந்த ஒருவர், ஓட்டோவொன்றை தனியார் பினேன்ஸ் நிறுவனமொன்றிடமிருந்து, தவணைப் பணத்துக்குப் பெற்றுள்ளார் என்றும் எனினும் அந்நபர், கடந்த சில மாதங்களாக ஓட்டோவுக்கான தவணைப் பணத்தைச் செலுத்தத் தவறியுள்ளார் என்றும் தெரியவருகிறது.
இதனால் தனியார் பினேன்ஸ் நிறுவனத்தில் பணிபுரியும் ஊருமடைய பகுதியைச் சேர்ந்த உத்தியோகத்தர் ஒருவர், மேற்படி நபரின் ஓட்டோவை, ரிகலகஸ்கட பகுதியிலிருந்து (சீஸ்) செய்து எடுத்து வந்துள்ளார்.
இவ்வாறு எடுத்து வரப்பட்ட ஓட்டோ, மேற்படி உத்தியோகத்தரின் வீட்டில் தறித்து நிறுத்தப்பட்டிருப்பதை அறிந்தகொண்ட நபர், அதனை மீட்டுச் செல்வதற்காக, தனது பிரதேசத்தவர்களை அழைத்துக் கொண்டு, வேன், லொறியில், ஊருமடையப்பகுதிக்கு, இரவு 9 மணியளவில் சென்றுள்ளார் என்றுத் தெரிவிக்கப்படுகிறது.
இதன்போது உத்தியோகத்தருக்கும் அங்கு வருகைத் தந்த ரிகலகஸ்கடையைச் சேர்ந்த குழுவினருக்கும் இடையில், வாய்த்தர்க்கம் ஏற்பட்டு பின்னர் அது கைகலப்பாக மாறியுள்ளது. இந்நிலையில் இரு குழுக்களும் கத்தி, பொல்லுகளைக் கொண்டு மோதலில் ஈடுப்பட்டுள்ளனர் என்றும் இதில் சரமாரியான தாக்குதலுக்கும் வெட்டுக் காயங்களுக்கும் உள்ளான ஹக்கீரியகம பகுதியைச் சேர்ந்த எச்.எம் சமன்குமார என்ற இளைஞர், சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளதுடன் மேலும் மூவர், பலத்தக் காயங்களுடன் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்என்றும் தெரிவிக்கப்படுகிறது.
இவர்களில் இருவர் மேலதிகச் சிகிச்சைக்காக, கண்டி வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளனர். சம்பவத்துடன் தொடர்புடைய எவரும் இதுவரைக் கைதுசெய்யப்படவில்லை என்றுத் தெரிவித்த பொலிஸார், விசேட குழுவொன்றை அமைத்து விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் தெரிவித்தனர்.
குழுக்கள் இடையில் ஏற்பட்ட மோதல்.. ஒருவர் பலி. மூவர் காயம்.
Reviewed by Madawala News
on
March 20, 2019
Rating: