எதை நீங்கள் சுதந்திரம் என்கிறீர்கள்..!
இலங்கை எனும் தேசத்தின்
சுதந்திர ஜன்னல்கள் திறக்கப்பட்டு
முக்கால் நூற்றாண்டென்று
நாம் விடும் முழுமூச்சை
ஒருதரமேனும் வடிகட்டி பார்த்திருக்கிறீர்களா..!
மெய்யான சுதந்திர மூச்சைத்தான்
சுவாசிக்கிறோமா என்று ஒருதரமேனும் யோசித்திருக்கிறீர்களா..!
உள்ளத்தால் கொண்டாடுகிறோமா என்று உங்களுக்குள்ளேயே வினா எழுப்பியிருக்கிறீர்களா..?
இல்லவே இல்லை!!
தேசிய கொடிகளை காப்பாற்ற
தேசத்தை கொழுத்துவது மெய்யான சுதந்திரம் ஆகுமா..?
பேரினவாத பேய்களுக்கு பயந்து நம்மை நாமே இங்கு ஏமாற்ற தேவையில்லை!!
நமக்கான சுதந்திரம் இன்னும் எழுதப்படவில்லை!!
இன்னும் பல பகல்களில் நாம் குருதி வியர்வை சிந்த வேண்டியிருக்கிறது!
இன்னும் பல இரவுகளை மரண மூச்சில் கழிக்க வேண்டியிருக்கிறது..!
ராஜதந்திரமாய் எம்மை
சுதந்திரம் என்று கொண்டாட வைக்கும் அதிகார பேய்களுக்கு எப்போதும் சுதந்திரம் தான்..!
சூ தந்திரம்!
தள்ளி நில்லுங்கள்!
தேரரென்ற பசுத்தோல் போர்த்தி,
இன்ன பிற மதத்தை
இழிவாக பேசி,
பட்டப்பகலிலே
அப்பட்டமாக நிந்தனை செய்தவரை பிடித்து அடைக்க பயந்து,
நீதிமன்ற அவமதிப்பை காரணம் சொல்லி அடைத்தான பின்பு
நாட்டின் எழுபத்தோராவது சுதந்திர சாவியால் அவரின் விடுதலை விலங்கை திறந்துவிட தீவிரமாய் சிந்துக்கும்
இந்த இயலாத தேசம்தான்,
சிதைவுமேலேறி புகைப்படம் எடுத்த பட்டதாரி மாணவர்களை கைது செய்திருக்கிறது!!
இப்போது சொல்லுங்கள் எது சுதந்திரம்?!
போதிமரம் காக்க புத்தனை புதைப்பதா சுதந்திரம்?
ஜனநாயகம் காப்பாற்றி
ஜனங்களை கொல்வதா சுதந்திரம்?
அகிம்சை காக்க
ஆயுதம் தீட்டுவதா சுதந்திரம்?
யாரும் இங்கு அடக்குமுறைக்கு காணிக்கையாக
சுதந்திரத்தை கொண்டாடுவதாய் பொய்வேஷம் போடத்தேவையில்லை..!
சுதந்திரம் என்பது நம் மனதால் உணரப்பட வேண்டும்.
யாரும் தரும் அனுமதி அட்டையாக இருக்க முடியாது!
எங்கள் வானம் வெள்ளைப்புறாக்களின்
வீதிதான்,
ஆனால் இன்னும் புறாக்கள் சஞ்சரிக்கவில்லை!!
-சல்மான் லாபீர் -
(உங்களின் சுதந்திர கொண்டாட்டங்களின் மீது என் இச்சிறுதுளி கவிதை மண்ணள்ளி போடுமானால் என்னை தயவு செய்து மன்னித்து விடுங்கள். இதை மறந்து விடுங்கள்)
எதை நீங்கள் சுதந்திரம் என்கிறீர்கள்..!
Reviewed by Madawala News
on
February 04, 2019
Rating: