நம் கைகளால் நம் கண்களையே குத்தி கொள்வதா?


“சேர் பிள்ளைக்கு  சரியான காய்ச்சல்  நல்லதொரு அன்டிபயடிக் எழுதுங்க”. “மகனுக்கு ஒரே இருமல்
எது டொக்டர் நல்ல அன்டிபயடிக்”.  “ மச்சான் மகளுக்கு  காய்ச்சலுக்கு கொடுக்க  ஒக்மன்டின்  நல்லமா இல்ல பக்டக்லோவ் நல்லமா!” : இவைகள் நான் தினமும் கடந்து போகின்ற சில சாதாரண உரையாடல்கள் .

 நம் சமூகத்தின் படித்தவர்கள் பாமரர்கள் ,  தாய்மார்கள் தகப்பன்மார்கள் , ஆண்,  பெண், ஏழை, பணக்காரர்  என   வித்தியாசமின்றி அனைவராலும் கேட்கப்படுகின்ற ஒரு வினா.  ஆனால் இதற்குப் பின்னால் மறைந்து இருக்கின்ற தீமைகளையும் பக்கவிளைவுகளையும் பார்க்கின்றபோது அல்லது தெரிந்து கொள்கின்றபோது இது எவ்வகையான மடத்தனமான வினா என்பதை  விளக்கவே இந்த பதிவு . இதை விளங்குவதற்காக சில அடிப்படைகளை நாம் புரிந்துகொள்ள வேண்டி இருக்கிறது .


நமக்கோ அல்லது நமது குழந்தைகளுக்கோ நோய்களை ஏற்படுத்தும் காரணிகளை இரண்டு பெரும் பிரிவுகளாக பிரிக்கலாம் ஒன்று நுண்ணங்கிகள் (micro organism ) மற்றும் அது சார்ந்தவைகளால்(toxins) ஏற்படுகின்ற நோய்கள் அதாவது தொற்றுகின்ற நோய்கள் (infectious diseases ). இரண்டாவது வகை  தொற்றா நோய்கள் (non communicable  diseases ) உதாரணமாக டயபடீஸ், பிரசர்,  கொலஸ்ரோல் போன்ற நோய்கள் .


தொற்று நோய்கள்  நுண்ணங்கிகளின் அல்லது அதன் நச்சுகளின் (toxins) தாக்கங்களினால்  ஏற்படுகின்றன .  இந்த நோய் காரணிகளான நுண்ணுயிர்களை நான்கு வகைகளில் உள்ளடக்கலாம்.  1 பாக்டீரியாக்கள் Bacteria 2 வைரஸ்கள் Virus   3 பங்கஸ்கள் Fungus   4 பரசைட் Parasite  எனப்படும் புழுக்கள். இதில் பக்டீரியாவினால் ஏற்படுகின்ற நோய்கள் மிகவும் பாரதூரமானவ, உயிர் ஆபத்தை ஏற்படுத்த கூடியவை. இதன் காரணமாக  இந்த பக்டீரியாக்களின் தாக்கங்களை கட்டுப்படுத்த   பல்வேறுபட்ட மருந்துகள் பாவிக்கப்படுகின்றன. இந்த மருந்துகள் , பக்டீரியாக்களினால் ஏற்படும் நோய்களைக் குணப்படுத்துவதற்காக வேண்டி கொடுக்கப்படுகின்ற இந்த மருந்துகள் பொதுவாக  அன்டிபயடிக்  (Antibiotic ) என அழைக்கப்படுகின்றது. ஆக இது ஒருபோதும் வைரஸ் நோய்களைக் குணப்படுத்தவோ அல்லது கட்டுப்படுத்தவோ  மாட்டாது என்பதை  தெளிவு படுத்த இது  ஒன்றே போதுமானதாக  இருக்கிறது. இன்னும்  இலகுவாக சொல்வதென்றால் வைரஸ் தாக்கத்தால் ஏற்படும் நோய்களுக்கு அன்டிபயடிக் கொடுப்பதானது டீசல் வாகனங்களுக்கு பெற்றோல்  அடிப்பதை போன்றது.


அன்­டி­ப­யடிக் என்­பது பக்­டீ­ரி­யாக்­களை கொல்­லக்­கூ­டிய ஒரு வகை மருந்­தாகும். அன்­டி­ப­ய­டிக்­கால் வைர­சுக்­களை கொல்ல முடி­யாது என்பது தான்  முதாலவது அடிப்படை உண்மை.

குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பெரும்பாலான நோய்கள் வைரஸ் தாக்கத்தினாலே தான் ஏற்படுகின்றன. சாதாரண காய்ச்சல் , தடிமன் ,  இருமல்,  தொண்டை நோவு , வயிற்றோட்டம் வாந்தி பேதி போன்ற பல்வேறுபட்ட நோய்கள் பெரும்பாலும்  வைரஸ் தாக்கத்தினால் ஏற்படுகின்றன. இவைகள் இயற்கையாகவே   நமது உடம்பில் உள்ள நோய் எதிர்ப்புச் சக்தியினால் கட்டுப்படுத்தப் படக்க்கூடியவை.  சாதாரணமாக இரண்டு மூன்று நாட்களில் அல்லது சில வேளைகளில் நான்கு ஐந்து நாட்களில் சுகமாக கூடியவை(சில விதி விலக்குகளும் உண்டு ). இவைகளுக்கு எவ்விதமான மருந்துகளோ குளிசைகளோ விஷேடமாக அன்டிபயடிக்குகளோ  தேவைப்படாது நமது உடம்பிலுள்ள நோய் எதிர்ப்பு சக்தியே இவ்வாறான நோய்களைக் குணப்படுத்துவதற்கு போதுமானதாக இருக்கும்.


குழந்தைகளுக்கு ஏற்படுகின்ற பெரும்பாலான நோய்கள் வைரஸ் தாக்கத்தினால் ஏற்படுகின்ற சாதரணமாகவே சுகப்படுகின்ற நோய்கள்தான் என்பது  இரண்டாவது  அடிப்படை  உண்மை.

இந்த இரண்டு  அடிப்படைகளும்  இன்னும்  ஒரு பேருண்மையை சொல்லகிறது

அதுதான் குழந்தைகளுக்கு  ஏற்படும் பெரும்பாலான நோய்கள் அன்டிபயடிக்  இல்லாமலேயே குணமடையக் கூடியவை. இன்னும் ஒரு வகையில் சொல்வதென்றால்  தேகாரோக்கியமான குழந்தைகளுக்கு  அன்டிபயடிக் தேவைப்படும் நோய்கள் ஏற்படுவது வருடத்தில்  ஒரு முறை அல்லது  இரு முறைதான்  அல்லது  அதை விடவும் குறைந்த  தடவைகள் தான். நான் அறிந்த,  பிறந்தது முதல்  எனது  தொடர்  வைத்திய கண்காணிப்பில் இருக்கின்ற ( உறவினர், நண்பர்களின்) பிள்ளைகளில்  பலர் ஒன்பது,  பத்து  வயதாகியும் இன்னும் கூட  ஒரு சொட்டு அன்டிபயடிகை எடுக்காமலேயே வளர்ந்து வருகின்றனர் என்பது  மிகைப்படுத்தப்படாத உண்மை.


இது இவ்வாறு  இருக்க எடுத்ததற்கு  எல்லாம் அன்டிபயடிக் பாவிக்கின்ற பழக்கம் நம்மிடையே ஒரு பொதுவான கலாச்சாரமாகவே மாறி இருக்கிறது. அதற்கு மிகச்சிறந்த உதாரணங்கள் தான் மேற்ச் சொன்ன உரையாடல்கள். அளவுக்கு அதிகமான , தேவையற்ற அன்ட்டிபயாடிக் பாவனை ஏன் கூடாது என்பதற்கு பல்வேறுபட்ட காரணங்கள் இருக்கின்றன. நமது உடலானது நாம் நினைக்கின்றது போன்று மிகத் தூய்மையான ஒன்று கிடையாது . அதாவது நுண்ணங்கிகள், பக்டீரியாக்கள் எதுவுமே நமது உடலில்  கிடையாது என்று நம்புவது பூனையின் உடம்பில் முடிகள் கிடையாது  என்று சொல்லுவதற்கு ஒப்பானது. மனித  உடலில் உள்ளும் வெளியுமாக நமது உடல் கலங்க(cells)ளின் எண்ணிக்கைகளை விட அதிகமான அளவு பக்டீரியாக்கள் ,நுண்ணுயிர்கள் உயிர் வாழ்கின்றன.  இவைகள் microbiome or commonsal என்ற செல்லப் பெயர் கொண்டு அழைக்கப்படுகின்றன.


 ஒரு தனி மனத உடலில் உள்ள  இந்த நுண்ணுயிர்களின் அளவு   ஒரு நூறு ட்ரில்லியன் (100000000000000.) கள் என  சில ஆய்வறிக்கைகள் கூறுகின்றன. இவைகளெல்லாம் மிக நல்ல நட்புள்ள  பக்டீரியாக்கள் . நமக்கு பல்வேறுபட்ட நன்மைகளைத் தரக்கூடிய நமது விருந்தாளிகள் . இவைகள் நமக்கு  ஏற்படுகின்ற பாரதூரமான நோய்களை , நோய் தொற்றுகளை விட்டும் நம்மை காப்பாற்றுகின்ற பாதுகாப்பு படைகளாக தொழிற்படுகின்றன. அது  மட்டுமல்லாமல் நமக்கு தேவையான பல்வேறு போஷனை பதார்த்தங்களையும் நமது உடலின் உள்ளே உற்பத்தி செய்யும் தொழிற்சாலைகளாகவும் இருக்கின்றன.  இவ்வாறான பக்டீரியாக்கள் நாம் பாவிக்கின்ற தேவையில்லாத அன்டிபயடிக் காரணமாக அழிந்துவிடுகின்றன,  இதனால் கெட்ட பக்டீரியாக்கள் உடலில் சேர்ந்து வேறு பல நோய் தொற்றுகளை (fatal infections ), பாரிய தொற்றா நோய் நிலைகளை ( Auto immune disease) கூட உரு­வாகக் கூடிய வாய்ப்பும் ஏற்படகின்றது.


முறை­கே­டான அன்­டி­ப­யடிக் பாவ­னையால் நோய்க்­கி­ரு­மிகள் அம்­ம­ருந்­து­க­ளுக்கு பழக்­கப்­பட்­டு­வி­டு­வதால் (Antibiotic-resistance ) எனும் பிற் ­கா­லத்தில் மருந்­துகள் மூலம் நோய்­களை கட்­டுப்­ப­டுத்த முடி­யாது எனும் நிலை ஏற்படுவது தவிர்க்க முடியாத ஒன்றாக மாறி விடுகின்றது. மிகவும் குறிப்­பாக குழந்­தைகள், சிறு­வர்­க­ளுக்கு அவ­சி­ய­மின்றி அன்­டி­ப­ய­டிக்­களை பாவிப்­பதன் மூலம் அவர்கள் பருவ வயதை அடையும் போதே அவர்­க­ளுக்கு நோய் எதிர்ப்பு சக்தி குறை­வ­டைந்து அவர்கள் அதிக நோய்­க­ளுக்கு உள்­ளா­க­வேண்­டிய துர்ப்­பாக்­கிய நிலையும் ஏற்­ப­டு­கின்­றது.


அன்டிபயடிக் என்பது நாம் நினைப்பது போன்று ஒரு ஒரு டெப்லட்  (tablet ), சிரப் (syrup) மாத்திரம் கிடையாது அதற்கு பின்னால் மிகப் பெரும் கதைகள் இருக்கின்றன.  ஒரு புதிய அண்டிபயடிக் ஒன்றை கண்டுபிடிப்பதற்கு குறைந்தது பத்து வருட ஆராய்ச்சிகளும், வைத்திய பரிசோதனைகளும் , ஆய்வுகூட தொழில்நுட்பங்களும் தேவைப்படுகின்றன. குறைந்தது ஒரு அன்டிபயடிகை கண்டுபிடிப்பதற்கு 800 மில்லியன் அமெரிக்க டாலர் வரை செலவாகிறது. இந்த சிக்கல் நிலைமைகள் காரணமாக கிட்டிய பத்து வருடங்களில் எந்தவிதமான புதிய அண்டிபயாடிக் கண்டுபிடிப்புகளும் உலகில் நிகழவில்லை என்பது தான் அதிர்ச்சி தரும் உண்மை. இங்கே தான் நமக்கான பொறி ஒன்றும் இருக்கிறது.  இருக்கின்ற எதிர்காலத்தில் நாமும், வருகின்ற எதிர்காலத்தில் நமது குழந்தைகளும்  இப்போதுள்ள அன்டிபயடிகை மட்டும்  கொண்டே வாழ வேண்டி இருக்கின்றது . இல்லை என்றால் இருக்கின்ற எல்லா நோய் தரும் பக்டீரியாக்களும்  இருக்கின்ற எல்லா அன்டிபயட்டிற்கும்  பழக்கப்பட்டு விட்டால் எதிர்காலத்தில் ஏற்படுகின்ற நோய்கள் நம்மை முற்றாக அழித்து விடும் என்பது வெள்ளிடை மலை.  (இது சம்மந்தமாக விரிவான பார்வை தேவைப்படுவோர் Antibiotic resistance என்ற தலைப்பில்  பார்வையிட முடியும். http://www.who.int/news-room/fact-sheets/detail/antibiotic-resistance )


எனவே அன்­டி­ப­யடிக் பாவ­னையை முடிந்­த­வரை குறைத்­துக்­கொள்­வது மிகவும் அவ­சி­ய­மாகும்.நோய்கள் உட­ன­டி­யாக குண­ம­டைய வேண்டும் என்­கின்ற எமது மக்­களின் மனோ­நிலை மிகவும்  ஆபத்­தான விளை­வு­களை ஏற்­ப­டுத்­து­கின்­றது. இதனால் சாதா­ரண ஒரு நோய்க்கு ஒரு வைத்­தி­ய­ரிடம் ஒரு நாளில் சிகிச்சை பெற்று அடுத்த நாளி­லேயே அல்­லது மருந்­துகள் உடலில் செயற்­பட முன்­னரே மற்­று­மொரு வைத்­தி­யரை நாடுகின்றனர். இது மிகவும் ஆபத்தானதாகும். இதனால்  வீரியம் மிக்க மருந்­து­களும் (High Potency), அள­வுக்கு அதி­க­மான மருந்­து­களும் (Over dose) உடலைச் சென்­ற­டை­வ­தனால் பாரிய பக்­க­வி­ளை­வு­களும் ஏற்­ப­டு­கின்­றன.இதனால் பிற்­கா­லத்தில் சாதா­ரண சிறிய நோய்­க­ளுக்கும் சிகிச்சை பல­னின்றி இறப்­புகள் ஏற்­பட வாய்ப்­புண்டு.


இந்­நி­லையில் இன்னமொரு மிக முக்­கி­ய­மான ஒரு விட­யத்தையும் சுட்­டிக்­காட்டுவது  அவசியமாகின்றது.  எந்த ஒரு மருந்தும் உடலில் பக்க விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யது. நாம் அன்­றாடம் பயன்­ப­டுத்தும் பர­சி­டமோல் அல்­லது பெனடோல், மல்டி விட்­டமின் மாத்­தி­ரைகள், வலி நிவா­ரண மாத்­தி­ரைகள் உட்­பட அனைத்து மருந்­து­களும் பக்க விளை­வு­களை ஏற்­ப­டுத்­தக்­கூ­டி­யவை என்பதை  நாம் மறந்துவிடக்கூடாது.


பர­சி­டமோல் அல்­லது பென­டோலை அதி­க­மாக பாவித்ததால்  ஈரல் செய­லி­ழந்து இறந்து போன  குழந்தைகளை, அன்டிபயடிக்  அதிகமாக பாவித்து கிட்னிகள் இரண்டும் பழுதாகிப்போன பச்சிளம் பாலகர்களை நானும் நிறையவே கண்டிருக்கிறேன் .   ஒன்றும் அறியா குழந்தைகள் யாரோ ஒரவரின் மடத்தனத்தால், அசிரத்தையால் இறப்பைக் கூட சந்திக்கின்ற நிகழ்வுகள் நடந்து கொண்டு தான்  இருக்கின்றன.


இதனால் அனைத்து மருந்­து­க­ளையும் உரிய முறைப்­படி சரி­யான அள­வு­களில் அவ­சியம் ஏற்­படும் போது மாத்­திரம் உரிய வைத்­திய ஆலோ­ச­னையின்படி பயன்­ப­டுத்த வேண்­டி­யது மிகவும் அவ­சி­ய­மாகும். வைத்தியர்களாக , விஷேட நிபுணராக இருந்தாலும்  அன்டிபயடிகை தருகின்ற போது  இது அவசியமான ஒன்றுதான் என்பதை ஒன்றுக்கு இரு முறை  அந்த வைத்தியரிடம்,  அல்லது வேறு ஒரு நம்பிக்கையான வைத்தியரிடமோ   உறுதிப்படுத்திய பின்னர் பாவிப்பதே சாலச்சிறந்தது.

"The first duty of the physician is to educate the masses not to take medicine.”
 -   WILLIAM OSLER 

Dr PM.Arshath Ahmaed MBBS, MD PEAD
Senior Registrar in Peadiatrics
Lady Ridgeway Hospital for children. 

நம் கைகளால் நம் கண்களையே குத்தி கொள்வதா? நம் கைகளால் நம் கண்களையே குத்தி கொள்வதா? Reviewed by Madawala News on December 19, 2018 Rating: 5
'; (function() { var dsq = document.createElement('script'); dsq.type = 'text/javascript'; dsq.async = true; dsq.src = '//' + disqus_shortname + '.disqus.com/embed.js'; (document.getElementsByTagName('head')[0] || document.getElementsByTagName('body')[0]).appendChild(dsq); })();
Powered by Blogger.