- இப்னு முஹம்மட் -
இலங்கை கல்வி முறையில் மாணவர்கள் மத்தியிலும் பெற்றோர் மத்தியிலும் பெரிதும்
தாக்கத்தை ஏற்படுத்தியுள்ள தரம் ஐந்து புலமைப் பரிசில் பரீட்சைக்கு இவ்வாண்டு தரம் மூன்றில் கற்கும் மாணவர்கள் கூட இப்போதே தயார் படுத்தப்படுவதை நாம் காணக்கூடியதாகவுள்ளது.
எந்தக் கல்விக்கும் கொடுக்காத முக்கியத்துவத்தை பெற்றோர்கள் இந்தப் புலமைப் பரிசில் பரீட்சைக்கு மாத்திரம் அதிகம் கொடுத்து அந்த மழலைச் செல்வங்களின் உள்ளங்களை பிழிந்து எடுப்பதை காண முடிகின்றது.
இந்த புலமைப் பரிசில் பரீட்சையில் தன்னுடைய பிள்ளை சித்தியடைய வேண்டும் என்பதற்காக ஒவ்வொரு பெற்றோர்களும் பிள்ளைகளின் ஆரோக்கியத்தையும் கவனத்திலெடுக்காமல் இரவென்றும், பகலென்றும், வெயிலென்றும், மழையென்றும் பாராமல் படி படி என்று அவர்களுடைய வயதையும் தான்டிய அழுத்தத்தை கொடுப்பதை நம்மால் அறிந்துகொள்ள முடிகின்றது.
இதன் காரணத்தால் பிள்ளைகள் மன அழுத்தத்துக்குள்ளாகி பல்வேறு உளவியல் பிரச்சினைகளுக்குல் உள்ளாக்கப்படுகின்றனர்.
குறித்த பரீட்சையில் மாணவர்கள் சித்தியடைந்துவிட்டால் மாணவர்களும், பெற்றோர்களும் கல்வியில் சாதனை படைத்த எண்ணத்தில் தொடந்து வரும் தரத்தில் ஆர்வம் காட்டாமல் இருப்பதை நம்மால் அவதானிக்க முடிகின்றது.
இப் பரீட்சை விடயத்தில் பெற்றோர்கள் மிக அவதானத்தோடு செயற்பட வேண்டிய கட்டாயத்துக்கு உள்வாங்கப்பட்டுள்ளனர். சிறுவர்களின் உடல் மற்றும் உள வளர்ச்சி போன்றவற்றில் மிகக் கூடுதல் கவனம் செலுத்தி பெற்றோர்கள் அச் சிறார்கள் வாழ்வில் கல்வியினை தொடர்ந்து எடுத்துச் செல்வதற்கு வழிவகுக்க வேண்டும்.
அதே போன்றுதான் இப் பரீட்சை விடயத்தில் கல்வி அமைச்சும், இலங்கை அரசும் கரிசனை செலுத்தி இளம் மாணவச் செல்வங்களின் பிஞ்சு உள்ளங்களுக்கு விடுதலை கொடுக்க வேண்டுமென்று ஏறாளாமானோர் எதிர்பார்ப்பது சுட்டிக்காட்டத்தக்கது.
- இப்னு முஹம்மட் -
புலமைப்பரிசில் பரீட்சைக்காக சிறார்களை இப்போதே பிழிந்தெடுக்கும் பெற்றோர்கள்.
Reviewed by Madawala News
on
October 21, 2018
Rating: